ஞாயிறு, 28 ஜனவரி, 2024

வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து 5 ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து வைத்த எம்எல்ஏ

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணையின் பழைய ஆயக்கட்டு பகுதிகளின் பாசனத்திற்காக ஞாயிற்றுக்கிழமை (ஜன.28) இன்று முதல் முதல் பிப்ரவரி 11ம் தேதி வரை வரட்டுப்பள்ளம் நீர்த்தேக்கத்தில் இருந்து பழைய ஆயக்கட்டு பகுதி ஏரிகளான கெட்டிசமுத்திரம் ஏரி, அந்தியூர் ஏரி, பிரம்மதேசம் ஏரி, வேம்பத்தி ஏரி மற்றும் ஆப்பக்கூடல் ஏரி ஆகிய 5 ஏரிகளுக்கு மொத்தம் 28.943 மில்லியன் கன அடிக்கு மிகாமல், தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டது. 

அதன்படி , வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து 5 ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (இன்று) காலை நடைபெற்றது. அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏ கலந்து கொண்டு அணையின் மதகை திருகி தண்ணீரை திறந்து வைத்தார். அப்போது தண்ணீர் மதகு வழியாக சீறி பாய்ந்து வெளியே சென்றது. இந்த தண்ணீரை எம்எல்ஏ மலர் தூவி வரவேற்றார். பின்னர், எம்எல்ஏ வெங்கடாசலம் கூறியதாவது, அணையில் இருந்து 28.943 மில்லியன் கன அடி தண்ணீர் ஏரிகளுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. மொத்தம் 15 நாட்கள் தண்ணீர் திறக்கப்படுகிறது. இவற்றின் மூலம் 1,039 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெற உள்ளது, என்றார்.

இந்நிகழ்ச்சியில், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் ரவி, உதவிப் பொறியாளர் தமிழ்பாரத், சங்கராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் குருசாமி, பாசன விவசாயிகள் சங்க தலைவர் நாகராஜா, பிரம்மதேசம் பாசன விவசாயிகள் சங்க தலைவர்கள் கணேசன், சூர்ய பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: