Erode லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Erode லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 1 மே, 2025

பவானி: சித்தோடு அருகே சாராயம் காய்ச்சும் பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா தீவிர சோதனை!

பவானி: சித்தோடு அருகே சாராயம் காய்ச்சும் பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா தீவிர சோதனை!

பவானி அடுத்த சித்தோடு அருகே சாராயம் காய்ச்சும் பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா நேற்று தீவிர சோதனை மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த சித்தோடு அருகே உள்ள நரிப்பள்ளம் கிராமத்தில் கடந்த மாதம் 27ம் தேதி சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து, அவரது உத்தரவின்பேரில் கோபி மதுவிலக்கு போலீசார் நரிப்பள்ளம் பகுதிக்கு சென்று தீவிர சோதனை நடத்தினர். இதில், சாராயம் காய்ச்சியதாக அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவருடைய மகன் ரவியை போலீசார் கைது செய்தனர். மேலும், விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 8 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு 20 லிட்டர் ஊறல் அழிக்கப்பட்டது.

இந்த நிலையில், மீண்டும் அதே பகுதியில் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா நேற்று அந்த பகுதிக்கு சென்று ஆய்வு செய்தார். சாராயம் காய்ச்சி விற்கப்படுகிறதா? எனவும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா எனவும் ஆய்வு செய்யப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா கூறுகையில், சாராயம், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி விற்பனை செய்பவர்கள் மீதும், அதே போல் லாட்டரி விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்' என்றார்.

அப்போது அவருடன் கோபி மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் சண்முகம், பவானி காவல் துணை கண்காணிப்பாளர் ரத்தினகுமார், காவல் ஆய்வாளர்கள் ரவி, முருகையன், கோமதி ஆகியோர் உடன் இருந்தனர்.

புதன், 30 ஏப்ரல், 2025

ஈரோட்டில் காங்கிரஸ் நிர்வாகி கடத்தல்.. போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்ததால் பரபரப்பு...!

ஈரோட்டில் காங்கிரஸ் நிர்வாகி கடத்தல்.. போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்ததால் பரபரப்பு...!


ஈரோட்டில் காங்கிரஸ் நிர்வாகி கடத்தல்..! போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்ததால் பரபரப்பு...!

ஈரோட்டில், ரியல் எஸ்டேட் தரகர் ஒருவரை, இரண்டு கார்களில் வந்த கும்பல் வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்தி சென்றதாக அவரது குடும்பத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அழுது புரண்டு கதறிய நிலையில், கோடிக்கணக்கில் அவர் பண மோசடி செய்ததாக காரில் ஏற்றிச்சென்றவர்கள் காவல் நிலையத்தில்   ஒப்படைத்ததால் பரபரப்பு நிலவியது. 

ஈரோடு லக்காபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜூபைர் அகமது.. இவர் , காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவராக உள்ளார். ரியல் எஸ்டேட், கார் வாங்கி விற்பனை செய்யும் தரகராகவும் மற்றும் கறி கடையும் நடத்தி வருகிறார். இன்று காலை ஈரோடு பேருந்து நிலையம் அருகே மூலப்பட்டறையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அவர் இருந்தபோது, இரண்டு கார்களில் வந்த மர்ம நபர்கள் அவரை வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி, தாய் மற்றும் உறவினர்கள், இது தொடர்பாக ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தனர்.கடத்திச் செல்லப்பட்ட ஜூபையரை உடனடியாக மீட்க கோரி உறவினர்கள் கதறி அழுது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்திய போலீசார் உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதற்கிடையே மாவட்ட எல்லைகள் கண்காணிக்கப்பட்டு அவரை கண்டறியும் பணியும் முடுக்கி விடப்பட்டது. இதற்கிடையே, கடத்தல் புகாரில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. கடத்தப்பட்டதாக கூறப்பட்ட ஜூபைர், ராமநாதபுரத்தை சேர்ந்த ஜமாத் நிர்வாகிகளிடம் பணம் பெற்று மோசடி செய்த்தாகவும், அவரை தேடி வந்தவர்கள் ஜூபைரை அழைத்து கொண்டு கருங்கல்பாளையம் காவல் நிலையம் சென்றது தெரியவந்தது. ஆனால், அதற்குள் ஜூபைர் கடத்தப்பட்டதாக  எஸ்.பி அலுவலகத்தில் அழுது புரண்டு ஆர்பாட்டம் செய்த உறவினர்களை போலீசார் அங்கிருந்து கருங்கல்பாளையம் காவல் நிலையம் அனுப்பி வைத்தனர். 


கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட ஜூபைர் மற்றும் ஜமாத் நிர்வாகிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ராமநாதபுரம், திருச்சி, தஞ்சாவூர், திருப்பூர் என பல்வேறு ஊர்களில் வெவ்வேறு பெயர்களில் ஜமாத் நிர்வாகிகளிடம் அறிமுகமாகி, போலியான தகவல்களை அளித்து உடல்நலம் பாதித்தவர்களுக்கு உதவுமாறு லட்சக்கணக்கில் பணம் பெற்றிருப்பதும், கண்டெய்னரில் வரும் பழைய இருப்புகளை வாங்கும் தொழில் செய்வதாகவும், தனக்கு பணம் கொடுத்தால் கூடுதலான லாபம் தருவதாகவும் கூறி ஜூபைர் கோடிக்கணக்கில் பலரிடம் பணம் பெற்றிருப்பதாகவும் புகார் தெரிவித்தனர். இது்தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் வக்பு சட்ட திருத்தம் தொடர்பான போராட்ட காட்சியை, சமூக வலை தளத்தில் ஜூபைர் பதிவு செய்திருந்தார். அதன் மூலம் அவர் ஒரு ஈரோட்டில் இருப்பதை அறிந்து ராமநாதபுரத்தில் இருந்து வந்தவர்கள் அவரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

செவ்வாய், 29 ஏப்ரல், 2025

ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஏப்.30ம் தேதி) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிப்பு!

ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஏப்.30ம் தேதி) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிப்பு!

ஈரோடு மாவட்டத்தில் மேட்டுக்கடை துணை மின் நிலைய காரைவாய்க்கால் மின் பாதை மற்றும் சென்னம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (ஏப்ரல் 30ம் தேதி) புதன்கிழமை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், நாளை கீழ்க்கண்ட இந்த இடங்களில் குறிப்பிட்ட நேரம் மின்சாரம் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டுக்கடை துணை மின் நிலைய காரைவாய்க்கால் மின் பாதை (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- சிந்தன்குட்டை, நாலுவல்லக்காடு, காரைவாய்க்கால், கந்தாம்பாளையம், வாவிகடை நீரேற்று நிலையம், பெருந்துறை நீரேற்று நிலையம், ஊணாச்சிபுதூர் மற்றும் சின்னியம்பாளையம்.

சென்னம்பட்டி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- ஜர்த்தல், கண்ணாமூச்சி, சித்தாகவுண்டனூர் மற்றும் பாப்பாத்திக்காட்டு புதூர்.
பெருந்துறை அருகே தலையில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்த இளம்பெண்: போலீசார் விசாரணை!

பெருந்துறை அருகே தலையில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்த இளம்பெண்: போலீசார் விசாரணை!

ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அருகே உள்ள விஜயமங்கலம் அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கணேஷ்ராஜ் (வயது 40). இவரது மனைவி ஜானகி (30). இவர்களுக்கு 5 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
கணேஷ்ராஜ் அப்பகுதியில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில் ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். ஜானகி வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில், நேற்று இரவு வழக்கம் போல வேலைக்கு சென்ற கணேஷ்ராஜ் வேலையை முடித்துக் கொண்டு நள்ளிரவு 12.15 மணியளவில் வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது, வீட்டின் கதவு வெளிபுறமாக தாழிடப்பட்டிருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த கணேஷ்ராஜ் கதவைத் திறந்து வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளார். அங்கு அவரது மனைவி ஜானகி, தலையில் ரத்த காயத்துடன் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக இதுகுறித்து பெருந்துறை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் ஜானகி உடலை மீட்டு பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ஜானகி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு என்ன காரணம் என்பது குறித்து பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

பிரேத பரிசோதனை முடிவில் தான் இது கொலையா அல்லது வேறு என்ன காரணம் என்று தெரிய வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்ட நீதிபதிகள் பணி இடமாற்றம்!

ஈரோடு மாவட்ட நீதிபதிகள் பணி இடமாற்றம்!

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் எஸ்.அல்லி பிறப்பித்துள்ள அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்ட முதன்மை நீதிபதி பி.முருகேசன், சென்னை 8-வது சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதியாகவும், தேனி பெரியகுளம் கூடுதல் மாவட்ட நீதிபதி எஸ்.சமீனா ஈரோடு மாவட்ட முதன்மை நீதிபதியாகவும், ஈரோடு முதலாம் கூடுதல் மாவட்ட நீதிபதி ஜே.ஏ.கோகிலா திருப்பூர் மகளிர் நீதிமன்றம நீதிபதியாகவும், அவருக்கு பதிலாக கரூர் குடும்ப நல கோர்ட்டு நீதிபதி எஸ்.எழில் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் சேலம் 2-வது மாவட்ட கூடுதல் நீதிபதி ஏ.எம்.ரவி பவானி 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதியாகவும். ஈரோடு குடும்ப நல கோர்ட்டு நீதிபதி எஸ்.ஹேமா நெல்லை போக்சோ கோர்ட்டு நீதிபதியாகவும், தூத்துக்குடி குடும்ப நல நீதிமன்ற நீதிபதி வி.சுரேஷ் ஈரோடு 2-வது கூடுதல் மாவட்ட நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல், மதுரை குடும்ப நல கோர்ட்டு நீதிபதி வி.அனுராதா ஈரோடு குடும்பநல கோர்ட்டு நீதிபதியாகவும், கோபி 3-வது கூடுதல் மாவட்ட நீதிபதி கே.தயாநிதி நாமக்கல் குடும்ப நல கோர்ட்டு நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
பெருந்துறையில் மயோனைஸ் தயாரிப்பு, பயன்பாடு குறித்து உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு!

பெருந்துறையில் மயோனைஸ் தயாரிப்பு, பயன்பாடு குறித்து உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு!

பெருந்துறையில் மயோனைஸ் தயாரிப்பு மற்றும் பயன்பாடு குறித்து உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு!
தமிழகத்தில் பதப்படுத்தப்படாத பச்சை முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் உண்பதால் சால்மொனெல்லா வகை பாக்டீரியா மற்றும் லிஸ்ட்டீரியா மோனோசைட்டோ ஜீன்ஸ் மூலம் இரைப்பை மற்றும் குடல் தொற்று ஏற்பட்டு உடல் நலக்குறைவு ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் பதப்படுத்தப் படாத பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் தயாரிப்பு ,சேமிப்பு ,விநியோகம் மற்றும் விற்பனைக்கு தமிழக அரசு கடந்த 08.04.2025 முதல் ஓராண்டுக்கு தடை விதித்துள்ளது.

எனவே உணவுபாதுகாப்புத்துறை ஆணையர் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உத்தரவின் படியும்,உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலரின் அறிவுரையின்படியும் பெருந்துறை நகரிலும் பைபாஸ் மற்றும் விஜயமங்கலம் டோல்கேட் பகுதியில் உள்ள தந்தூரி சிக்கன் கிரில் சிக்கன் உள்ளிட்ட அசைவ உணவுகள் விற்பனை செய்யப்படும் 30க்கும் மேற்பட்ட உணவகம் மற்றும் பாஸ்ட்புட் கடைகளில் மையோனைஸ் தயாரிப்பு மற்றும் பயன்பாடு குறித்து பெருந்துறை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் எம்.முத்துகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் 29.04.25 அன்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது தடை செய்யப்பட்ட மையோனைஸ் பயன்பாடு எங்கும் கண்டறியப்படவில்லை.

உணவகங்களில் உணவருந்திக் கொண்டிருந்த பொது மக்களிடமும் மையோனைஸ் வழங்கப்படுகிறதா என விசாரித்து பச்சை முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் உண்பதால் ஏற்படும் தீங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. உணவக உரிமையாளர்களிடம் சைவமயோனைஸ் பயன்படுத்துவது குறித்தும் சவர்மா, கிரில் சிக்கன் ,தந்தூரி சிக்கன் உள்ளிட்ட அசைவ உணவு வகைகளை நன்றாக வேக வைத்து 4 மணி நேரத்திற்குள் விற்பனை செய்யப்பட வேண்டும் எனவும் வேக வைக்கப்பட்ட அசைவ உணவுகளை பிரீசரில் வைத்து மறு பயன்பாடு செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தினர். மேலும் தடை செய்யப்பட்ட பாலிதீன் கவர் மற்றும் கேரி பேக் மூலம் உணவுப் பொருள்கள் பார்சல் செய்யக்கூடாது எனவும் எண்ணெயில் பொறிக்கப்பட்ட வடை போண்டா பஜ்ஜி போன்ற பலகாரங்களை செய்தித்தாள்களில் வைத்து பொது மக்களுக்கு வழங்கக்கூடாது எனவும் அறிவுறுத்தினர். ஆய்வின் போது தடை செய்யப்பட்ட கேரிபேக் மற்றும் செய்தித்தாள்களில் உணவு பொருட்கள் வைத்து வழங்கிய பேக்கரி உரிமையாளருக்கு 3000 ரூபாய் அபராதமும் தடை செய்யப்பட்ட பாலிதீன் கவரில் உணவு பொருள்கள் பேக் செய்து விற்பனை செய்த உணவக உரிமையாளருக்கு 2000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. 

இது குறித்து மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் கூறுகையில், ஈரோடு மாவட்டம் முழுவதும் இதுபோன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் எவரேனும் தடை செய்யப்பட்ட மையோனைஸ் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தாலோ அல்லது உணவு பொருளில் ஏதாவது குறைபாடுகள் இருந்தாலோ பொதுமக்கள் 9444042322 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் கூறினார்.
தேசிய அளவிலான ஏரோபிக்ஸ் போட்டி: ஈரோடு, நாமக்கல் மாவட்ட வீரர், வீராங்கனைகள் சாதனை!

தேசிய அளவிலான ஏரோபிக்ஸ் போட்டி: ஈரோடு, நாமக்கல் மாவட்ட வீரர், வீராங்கனைகள் சாதனை!


சாதனை படைத்துவிட்டு ஈரோடு திரும்பிய வீரர் வீராங்கனைகளுக்கு ஈரோடு ரயில் நிலையத்தில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தேசிய அளவிலான ஏரோபிக்ஸ் போட்டி கோவா மாநிலம் மட்கோன் பகுதியில் கடந்த 25-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடந்தது. இந்த போட்டியில் 15 மாநிலங்களில் இருந்து வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இதில் தமிழகத்தின் சார்பில் ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் பங்கேற்று பதக்கங்களை வென்றனர். 

அதன்படி 14 வயதுக்குட்பட்ட ஏரோ குழு போட்டியில் யோகவர்ஷினி, ஸ்ரீயா, தாரணி, இனியா, யத்விக், ஐஸ்வர்யா, பிரஜித் ஸ்ரீமன், ஜேஷ்னா, கனிஷ்கா, ஹர்சிதா ஆகியோர் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்தனர். 

11 வயதுக்குட்பட்ட டிரியோ போட்டியில் யோகவர்ஷினி, ஐஸ்வர்யா, ஜெஷினா ஆகியோரும், 17 வயதுக்குபட்ட பிரிவில் தாரணி, கனிஷ்கா, ஹர்சிதா ஆகியோரும் 2-வது இடத்தை பிடித்தனர். தனிநபர் ஏரோபிக்ஸ் போட்டியில் 11 வயதுக்குட்பட்ட பிரிவில் இனியாவும், 9 வயதுக்குட்பட்ட பிரிவில் யாத்விக்கும் 2-வது இடத்தை பிடித்தனர்.

தேசிய அளவில் சாதனை படைத்த வீரர் வீராங்கனைகளுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர் மூசாவுக்கும் ஈரோடு ரெயில் நிலையத்தில் இன்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இந்நிகழ்வில், செலபிரடெக்ஸ் ஈவன்ட்ஸ் முதன்மை செயல் அதிகாரி அப்துல் முனாசிர் பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளித்தார்.

திங்கள், 28 ஏப்ரல், 2025

ஈரோடு | மே 1ம் தேதி மதுபான கடைகளுக்கு விடுமுறை!

ஈரோடு | மே 1ம் தேதி மதுபான கடைகளுக்கு விடுமுறை!

ஈரோடு மாவட்டத்தில் எதிர்வரும் 1ம் தேதி மே தினத்தை முன்னிட்டு அரசு மதுபானக் கடைகள், அதனுடன் இயங்கும் மதுக்கூடங்கள் மற்றும் எப்.எல்.1, எப்.எல்.2 மற்றும் எப்.எல்.3 மதுபான விடுதிகள் மற்றும் ஹோட்டல்களில் உள்ள பார்கள் ஆகியவை மேற்கண்ட தினத்தில் மூடப்பட வேண்டும் எனவும், அன்றைய தினத்தில் மது விற்பனை இல்லாத நாளாக அனுசரிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, மே 1ம் தேதி முழுவதும் ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடைகள், அதனுடன் இயங்கும் மதுக்கூடங்கள் மற்றும் எப்.எல்.1, எப்.எல்.2 மற்றும் எப்.எல்.3 மதுபான உரிமதலங்கள் மூடப்பட்டிருக்கும் என்றும் அன்றைய தினத்தில் மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது. அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்த ஆட்சியர்!

ஈரோடு மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்த ஆட்சியர்!

ஈரோடு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பெற்று, குறைகளைக் கேட்டறிந்தார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது. இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, குடிநீர், சாலை வசதி, பேருந்து வசதி, புல எல்லை தொடர்பாக மற்றும் காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 308 மனுக்கள் வரப்பெற்றன.

பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், உதவி ஆணையர் (கலால்) தியாகராஜன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜகோபால், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் நூர்ஜகான், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி, துணை ஆட்சியர் (பயிற்சி) கே.சிவபிரகாசம் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு: சட்ட விரோதமாக செயல்படும் ஸ்பின்னிங் ஆலையை மூட வலியுறுத்தி, மில்லின் அருகே வசித்து வருபவர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயற்சி!

ஈரோடு: சட்ட விரோதமாக செயல்படும் ஸ்பின்னிங் ஆலையை மூட வலியுறுத்தி, மில்லின் அருகே வசித்து வருபவர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயற்சி!

சென்னிமலை அருகே சட்ட விரோதமாக செயல்படும் ஸ்பின்னிங் ஆலையை மூட வலியுறுத்தி, மில்லின் அருகே வசித்து வருபவர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை வட்டம் அம்மாபாளையம், கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமநாதன், இவரது மனைவி ராஜம்மாள் இவர்களது மகன் சீனிவாசன்.  இவர்கள் அனைவரும் நெசவு கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகின்றனர். 

இந்த நிலையில், கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு வீட்டின் அருகே தனியார் நபர் பஞ்சில் இருந்து நூல் தயாரிக்கும் ஸ்பின்னிங் மில்லை இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் செயல்பட துவங்கியது.

இங்கிருந்து வெளியேறும் பஞ்சு கழிவுகளால்,அருகில் வசிக்கும் இந்த குடும்பத்தாருக்கு மூச்சு திணறல், ஆஸ்துமா, நுரையீரல் பிரச்சனை போன்றவர்கள் ஏற்பட்டதால் இந்த ஆலையை மூட வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மனு அளித்துள்ளனர்.

இது தொடர்பாக, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு, இந்த ஸ்பின்னி மில் தொடர்பாக ஆய்வு நடத்தவேண்டுமென அறிவுறுத்தி இருந்தனர். 

பின்னர் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஸ்பின்னிங் மில்லில் ஆய்வு மேற்கொண்டு கடந்த ஜனவரி 1ம் தேதி அன்று பாதிப்பு உள்ளது என்று தகவலை மாவட்ட நிர்வாகத்தில் வழங்கினர். 

இதனையெடுத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையில் கடந்த மார்ச் மாதம் 17ம் தேதி அன்று ஸ்பின்னிங மில்லை மூட வேண்டும் என உத்தரவிட்டார்.  

இதனை பொருட்படுத்தாத ஸ்பின்னிங் மில் ஆலை உரிமையாளர் கடந்த ஏப்ரல் 11ம் தேதி முதல் இரவு பகல் பார்க்காமல் 24 மணி நேரம் ஆலையை செயல்படுத்தி வருகிறார். 

இதனால் மீண்டும் தங்களுக்கு உடல் உபாதை பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரான ராமநாதன்அவரது மனைவி ராஜமாள், மகன் சீனிவாசன் ஆகியோர் விஷம் அருந்தி தங்களது உயிர்களை மாய்த்துக் கொள்வதாக கூறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் முன்னிலையில், அவர்கள் தடுக்கப்பட்டு முறைப்படி ஆட்சியரிடம், இது சம்பந்தமாக தெரிவித்து, அந்த ஆலை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் காமராசர் பேச்சுவார்த்தை நடத்தியதால், ராமநாதன் குடும்பத்தினர் திரும்பச் சென்றனர், இந்தச் சம்பவம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.