Erode லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Erode லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 21 அக்டோபர், 2024

ஈரோட்டில் கனமழை: சாலைகளில் குளம் போல் தேங்கிய மழை நீரால் பொதுமக்கள் அவதி

ஈரோட்டில் கனமழை: சாலைகளில் குளம் போல் தேங்கிய மழை நீரால் பொதுமக்கள் அவதி

ஈரோட்டில் இன்று (22ம் தேதி) காலை முதலே கனமழை பெய்து வருவதால் சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர் குளம் போல் தேங்கியதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 15ம் தேதி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், தாளவாடி, அந்தியூர் பர்கூர் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

மாவட்டத்திலுள்ள முக்கிய அணைகளான பவானிசாகர், வரட்டுப்பள்ளம் அணை, குண்டேரிப்பள்ளம் அணை, பெரும்பள்ளம் அணை பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. குண்டேரிப்பள்ளம் மற்றும் வரட்டுப்பள்ளம் அணைகள் பலத்த மழை காரணமாக தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. பவானிசாகர் அணை 90 அடியை நெருங்கியுள்ளது. மேலும், ஈரோடு மாநகரப் பகுதிகளும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வந்தது. 

இந்நிலையில், இன்று காலை 6 மணி முதல் ஈரோடு மாநகர் பகுதியில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியது. ஈரோடு வ.உ.சி. பெரிய காய்கறி மார்க்கெட் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக சேரும் சகதியுமாக காட்சியளித்தது. இங்கு 700க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருவதால் மாவட்டம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் மொத்த விலைக்கு காய்கறிகளை வாங்கி செல்வது வழக்கம். 

இந்நிலையில், இன்று காலை பெய்த கனமழை காரணமாக வ.உ.சி. மார்க்கெட்டில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால், இன்று காலை காய்கறி வாங்க வந்த பொதுமக்கள், மொத்த வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதேபோல், ஈரோடு அகில்மேடு வீதியில் உள்ள சின்ன காய்கறி மார்க்கெட் பகுதி முழுவதும் மழை நீர் புகுந்து குளம் போல் சூழ்ந்தது.
இதனால், பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். சின்ன மார்க்கெட் வளாகத்திற்குள் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. கனமழை காரணமாக அம்மா உணவகத்தையும் மழை நீர் சூழ்ந்தது. இதனால் அம்மா உணவகத்திற்கு வந்த பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். இந்த பகுதியில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சென்றதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

ஈரோடு வைரபாளையத்தில் கனமழை காரணமாக 4 வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. 6 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். இதேபோல் மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் மொடக்குறிச்சி பகுதியில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக மஞ்சள் நெல் பயிரிடப்பட்டிருந்த விவசாய நிலங்களுக்குள் மழை நீர் புகுந்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. 

இதேபோல் கவுந்தப்பாடி சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு முதல் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. சூறை காற்றும் வீசியது. இந்த காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் கூட்டுறவு வங்கி அருகே பொம்மன்பட்டி சாலை பகுதிகளில் மரங்கள் முறிந்தும் வேரோடு சாய்ந்தும் மின்சார கம்பிகள் மீது விழுந்தன. இதனால் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது. தொடர்ந்தும் இன்று காலை மழை பெய்து வருகிறது. காலை முதல் மழை பெய்து வருவதால் வேலைக்கு செல்லும் பணியாளர்கள், வியாபாரத்துக்கு செல்பவர்கள் கடும் அவதி அடைந்தனர்.

இதனையடுத்து, இன்று ஒரு நாள் ஈரோடு மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார். இது தெரியாமல் பல்வேறு இடங்களில் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் அவசர அவசரமாக வீடு திரும்பினர்.
ஈரோட்டில் காவலர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து ஆட்சியர், எஸ்பி மரியாதை

ஈரோட்டில் காவலர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து ஆட்சியர், எஸ்பி மரியாதை

ஈரோடு மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு, பணியின்போது வீரமரணம் அடைந்த காவலர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவு சின்னத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் ஆகியோர் மலர் வளையம் வைத்து, மரியாதை செலுத்தினர்.

பின்னர், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்த போது பணியின் போது, வீரமரணம் அடைந்த காவலர்களை நினைவு கூர்ந்து அவர்களின் தியாகத்தை போற்றும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் 21 அன்று காவலர் வீரவணக்க நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

1959-ம் ஆண்டு, இதே நாளில் லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் ஒளிந்திருந்து மேற்கொண்ட திடீர் தாக்குதலில், 10 மத்திய பாதுகாப்பு படைக் காவலர்கள் உயிரிழந்தனர். கடல் மட்டத்திலிருந்து, 16,000 அடி உயரத்தில், அன்று வீர மரணமடைந்த காவலர்களின் தியாகத்தை, கடல் அலைகள் கண்ணுக்குத் தெரியும் இவ்விடத்தில் இருந்து நாம் இன்று நினைவு கூறுகிறோம்.

கடற்கரையானாலும் பனிமலைச் சிகரமானாலும், காவலர் பணி, இடர் நிறைந்தது. உனது வருங்காலத்திற்கு எனது தற்காலத்தை ஈந்தேன். நாளைய உன் விடியலுக்கு இன்று நான் மடியத் தயார் என்று கூறி இவ்வாண்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நம்மை விட்டுப் பிரிந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.

மடிந்து உயிர் தியாகம் செய்த காவலர்கள் விட்டுச் சென்ற பணிகளைச் செய்து முடிப்போம் என்று உறுதி பூண்டு, அவர்களின் வீரத் தியாகம் வீண்போகாது என்று இந்த காவலர் வீரவணக்க நாளில் உறுதிமொழி ஏற்போம் என்றார்.

இந்நிகழ்ச்சியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் விவேகானந்தன் (தலைமையிடம்), வேலுமணி (சைபர் குற்றப்பிரிவு) உட்பட காவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

ஈரோடு அருகே தனியார் பள்ளி, கல்லூரி பேருந்துகள் மோதல்: 30 பேர் காயம்

ஈரோடு அருகே தனியார் பள்ளி, கல்லூரி பேருந்துகள் மோதல்: 30 பேர் காயம்

ஈரோடு அருகே தனியார் பள்ளிப் பேருந்தும், தனியார் கல்லூரிப் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் 30 மாணவர்கள் காயமடைந்தனர்.

ஈரோடு அடுத்த மூலக்கரை பகுதியில் தனியார் கான்வென்ட் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் வழக்கம் போல பள்ளிக்கு செல்லும் மாணவர்களை அழைத்து கொண்டு தனியார் பள்ளி பேருந்து வெள்ளோடு அடுத்த கொம்மன்கோவில் பகுதியில் இருந்து பள்ளி வாகனம் சென்று கொண்டு இருந்தது.

அப்போது, பெருந்துறை துடுப்பதியை நோக்கி சென்ற தனியார் பொறியியல் கல்லூரியை பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தனியார் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த மாணவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலமாக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வெள்ளோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் பள்ளி வாகனமும் தனியார் பொறியியல் கல்லூரி வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் விபத்தில் காயமடைந்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை அதிமுக பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தார்.
ஈரோட்டில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 27 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

ஈரோட்டில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 27 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

ஈரோடு திண்டல் சைதன்யா சி.பி.எஸ்.சி. பள்ளி வளாகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் ஈரோடு இணை ஆணையர் மண்டல கோயில்கள் சார்பாக 27 ஜோடிகளுக்கு இன்று (21ம் தேதி) திருமணம் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின் படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் தமிழ்நாடு சட்டப்பேரவை அறிவிப்புகள் 2024-2025 அறிவிப்பு எண்.27-ன் படி பொருளாதாரத்தில் பின்தங்கிய ஜோடிகளுக்கு கோயில்கள் சார்பாக 4 கிராம் பொன் தாலி உட்பட ரூ.60 ஆயிரம் மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கி திருமண விழா நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு 600 ஜோடிகளுக்கு கோயில்கள் சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இவ்வாண்டு கூடுதலாக 100 ஜோடிகளுக்கு சேர்த்து ஒரு மண்டலத்திற்கு 35 ஜோடிகள் வீதம் 700 ஜோடிகளுக்கு கோயில்கள் சார்பாக திருமண விழா நடத்தி வைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது . 

அதனைத் தொடர்ந்து இன்று (21ம் தேதி) திங்கட்கிழமை ஈரோடு மாவட்டம், திண்டல் சைதன்யா சிபிஎஸ்சி பள்ளி வளாகத்தில், ஈரோடு இணை ஆணையர் மண்டல கோயில்கள் சார்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய 27 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தில் பங்கேற்ற ஒவ்வொரு ஜோடிக்கும் தாலி (தங்கம் 4 கிராம்), மெட்டி, பட்டு புடவை (ஜாக்கெட், பாவாடை), பட்டு வேஷ்டி சட்டை, துண்டு, பாய், இரும்பு கட்டில், மெத்தை, தலையணை, பெட்சீட், கிரைண்டர், மிக்ஸி, கேஸ் அடுப்பு, மர பீரோ, சுவாமி படம், குத்து விளக்கு (பித்தளை). பூஜை தட்டு (பித்தளை), மணி (பித்தளை), பொங்கல் குண்டா, குங்கும சிமிழ், காபி குண்டா, வடிகட்டி, சாப்பாடு தட்டு உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

இந்நிகழ்ச்சியில், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், துணை மேயர் வே.செல்வராஜ், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் நவமணி கந்தசாமி, இந்து சமய அறநிலையத்துறை ஈரோடு மண்டல இணை ஆணையர் அ.தி.பரஞ்ஜோதி, பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் துணை ஆணையர் மேனகா, ஈரோடு உதவி ஆணையர் சுகுமார், பவானி அருள்மிகு சங்கமேஸ்வரர் கோயில் உதவி ஆணையர் அருள்குமார், ஈரோடு மாவட்ட செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள், மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

வெள்ளி, 18 அக்டோபர், 2024

பெருந்துறை அருகே லிப்ட் கொடுத்த ஆசிரியையிடம் வழிப்பறி: 4 கல்லூரி மாணவர்கள் கைது

பெருந்துறை அருகே லிப்ட் கொடுத்த ஆசிரியையிடம் வழிப்பறி: 4 கல்லூரி மாணவர்கள் கைது

பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தில் லிப்ட் கொடுத்த தனியார் பள்ளி ஆசிரியையிடம் வழிப்பறி செய்த 4 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள வாய்க்கால் மேடு சென்னிமலைபாளையத்தைச் சேர்ந்தவர் சர்மா (வயது 29). பெருந்துறை மூலக்கரையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் (17ம் தேதி) மாலை பெருந்துறை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, தனியார் பொறியியல் கல்லூரி விடுதி வந்தபோது, சிறுவன் ஒருவன் கை காட்டி ஜெ.ஜெ.நகர் வரை செல்வதாக கூறி லிப்ட் கேட்டுள்ளார். உடனே சர்மா அந்த அந்த சிறுவனை ஏற்றிக்கொண்டு சென்றார். பின்னர், ஜெ.ஜெ.நகர் வந்ததும் சர்மா வாகனத்தை நிறுத்தியபோது, எதிரே மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த 3 சிறுவர்கள் சர்மாவின் வாகனத்தின் முன்பு வந்து நிறுத்தினர்.

அப்போது, அவர்கள் 3 சிறுவர்களும் லிப்ட் கேட்டு வந்த சிறுவனுடன் சேர்ந்து சர்மாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, செல்போனை பிடுங்கி கூகுள் பே மூலம் ரூ. 35 ஆயிரத்து 400 ரூபாயை தங்களுடைய செல்போனுக்கு மாற்றி கொண்டனர். மேலும், சர்மா விரலில் அணிந்திருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள ½ பவுன் மோதிரத்தையும் பறித்துக் கொண்டு 3 பேர் வந்த இருசக்கர வாகனத்தில் 4 பேரும் தப்பிச் சென்றனர். பின்னர், இதுகுறித்து, சர்மா அளித்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தினர். 

விசாரணையில், நாமக்கல் மாவட்டம் தும்மங்குறிச்சி கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன், பெருந்துறை கொம்மக்கோவிலைச் சேர்ந்த துரைசாமி மகன் பிரகதீஸ்வரன் (வயது 18), நாமக்கல் மாவட்டம் சிவம்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் மைதீஸ் (வயது 19), திருமலைப்பட்டியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் ஆகியோர் ஆசிரியை சர்மாவிடம் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியிலும், 2 பேர் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியிலும் படித்து வருகின்றனர். இவர்கள் 4 பேரும் நாமக்கலில் உள்ள பள்ளியில் படித்த போது ஏற்பட்ட நட்பு, கல்லூரி சென்ற பிறகும் தொடர்ந்து தற்போது வழிப்பறியில் வந்து முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் பல்வேறு நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் முத்துசாமி

ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் பல்வேறு நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் முத்துசாமி

ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இடங்களில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்.

ஈரோடு வில்லரசம்பட்டி சிவபுரத்தில் மழை நீர் வடிகால் அமைப்பதற்கான அடிக்கல்  நாட்டு விழாவில் அமைச்சர் முத்துசாமி பங்கேற்ற பிறகு திண்டல் புது காலனி பகுதியில் கான்கிரீட் சாலை அமைப்பதற்கான திட்ட பணிகளையும் அவர் துவக்கி வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாநகர செயலாளர் சுப்பிரமணியம், தலைமைச் செயற்குழு உறுப்பினர் திண்டல் குமாரசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

இதனை அடுத்து திண்டல் சுகாதார நிலையம் எதிரில் நியாய விலை கடை கட்டுவதற்கான பூமி பூஜையில் அமைச்சர் முத்துசாமி பங்கேற்ற பிறகு முத்தம் பாளையம் பண்ணைக்காடு அரிஜன காலனியில் பேவர் பிளாக் அமைப்பதற்கான திட்டப் பணியையும் அவர் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திண்டல் மணிராசு திண்டல் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். 

பின்னர் ,சென்னிமலை சாலையில் அண்ணா நகருக்கு செல்லும் வழியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றும் வகையில் தார் சாலை அமைக்கும் பணியையும் அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார். 

இந்த நிகழ்ச்சிகளில், நாடாளுமன்ற உறுப்பினர் கே இ பிரகாஷ் , மாநகர மேயர் திருமதி. நாகரத்தினம் சுப்பிரமணியம், 
துணைச் செயலாளர் செந்தில்குமார் ,
மண்டல செயலாளர் சசிகுமார்  உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து உள்ளனர்.
ஈரோட்டில் தமிழகப் பண்பாட்டு கண்காட்சியினை துவக்கி வைத்த அமைச்சர் முத்துசாமி

ஈரோட்டில் தமிழகப் பண்பாட்டு கண்காட்சியினை துவக்கி வைத்த அமைச்சர் முத்துசாமி

ஈரோட்டில், தமிழக பண்பாட்டு கண்காட்சியினை, தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்.

தமிழகப் பெண்கள் செயற்களம் மற்றும் தமிழரன் மாணவர்கள் அமைப்பு இணைந்து  நடத்தும் இந்த கண்காட்சியின் துவக்க விழாவில் ஈரோடு மாநகர செயலாளர் சுப்பிரமணியம்  கோட்டை பகுதி செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னணி வகித்தனர். 

தமிழர்களின் வாழ்வியலை  வெளிப்படுத்தும் வகையிலான பல்வேறு வகையான பொருள்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றன. 

இவற்றை அமைச்சர் முத்துசாமி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரகாஷ் ஆகியோர் பார்வையிட்டனர். 

குறிப்பாக, குடும்பமேளம், பெரிய மேளம்  உருமி மேளம், உள்ளிட்ட 20 வகையான மேளங்கள்  இந்த நிகழ்ச்சியில் வைக்கப்பட்டிருந்தன.

சுமார் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த 80 வகையான தமிழிசை கருவிகளை அங்கிருந்து பொதுமக்களும் ,மாணவ மாணவிகளும் கண்டு வியந்தனர். 

முன்னதாக அமைச்சர் முத்துசாமி கண்காட்சியினை துவக்க வைத்த போது தமிழ் பாரம்பரிய முறைப்படி தமிழிசை கருவிகள் முழங்க அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து தமிழர்களின் வாழ்வியலை சித்தரிக்கும் வகையில் மாணவ மாணவிகளுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஊக்கத் தொகையும் நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வேட்டை தடுப்புக் காவலர்கள் வனக்கோட்ட அலுவலரிடம் மனு

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வேட்டை தடுப்புக் காவலர்கள் வனக்கோட்ட அலுவலரிடம் மனு

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பணியாற்றும் வேட்டை தடுப்புக் காவலர்கள், பணி வரன் முறை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வனக்கோட்ட அலுவலரிடம் மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பணியாற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சத்தியமங்கலம் வனக் கோட்ட அலுவலர் குலால் யோகேஷ் விலாசிடம் மனு அளித்தனர். அதில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் சத்தியமங்கலம் வனக் கோட்டத்திற்கு உட்பட்ட விளாமுண்டி, பவானிசாகர், சத்தியமங்கலம், டி.என்.பாளையம், தலமலை, கடம்பூர் ஆகிய 6 வனச்சரகங்களிலும் சுமார் 59 வேட்டை தடுப்புக் காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர் .

பெரும்பாலானோர் பட்டியலின, பட்டியல் பழங்குடியினத்தைச் சார்ந்தவர்கள் ஆவர். மேலும், சாதாரண ஏழை-எளிய குடும்பத்தைச் சார்ந்தவர்களுமாவர். எங்களில் பெரும்பாலானோர் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறோம். வனப் பாதுகாப்பு பணியில் துறையின் அதிகாரிகளின் உத்திரவுகளுக்கு ஏற்ப, எந்தவித பணிப் பாதுகாப்பும் அற்ற நிலையிலும் கூட நாங்கள் சிரத்தையோடு எங்கள் பணிகளை செய்து வருகிறோம்.

வேட்டைத் தடுப்புக் காவலர்களில் பத்தாண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருபவர்களை பணி வரன் முறை செய்யப்படுவது போல, எங்களின் பணியினையும் வரன் முறைப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையில் நாங்கள் பணிபுரிந்து வருகிறோம். ஆனால் எங்கள் நம்பிக்கையில் இடி விழுந்ததைப் போல, எங்களை வெளி முகாமைக்கு மாற்றும் நடவடிக்கைகளை துறை எடுத்து வருவதாக அறிகிறோம்.

வெளி முகாமைக்கு எங்களை மாற்றும் பட்சத்தில் எங்கள் பணி பாதுகாப்பற்றதாக ஆகிவிடுவதோடு, எதிர்காலத்தில் பணி வரன் முறைப்படுத்தல் என்பதும் அறவே இல்லாததாகி விடும். எனவே, வேட்டை தடுப்புக் காவலர்களாகிய எங்களை வெளி முகாமைக்கு மாற்றாமல், தொடர்ந்து தொகுப்பூதியத்திலேயே பணிபுரிய வாய்ப்பளிக்க வேண்டுகிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 
ஈரோடு கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு

ஈரோடு கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு

ஈரோடு மாவட்டம் ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை இன்று (18ம் தேதி) வெள்ளிக்கிழமை நேரில் சென்று, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில், தன்பதிவேடு, முன்கொணர் தன்பதிவேடு, சிறப்பு பணிகள் தொடர்பான பதிவேடுகள், நீண்ட கால நிலுவையில் உள்ள அலுவலக கோப்புகள், பணியாளர் வருகை பதிவேடு, தற்செயல்விடுப்பு பதிவேடு, முதியோர் பாதுகாப்பு சட்டம் குறித்த கோப்புகள், இணையதள பதிவுகள் குறித்த பதிவேடு உள்ளிட்ட முக்கிய அலுவலக நடைமுறை கோப்புகள் மற்றும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

இந்த ஆய்வின் போது, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் ம.சதீஷ்குமார், துணை ஆட்சியர் (பயிற்சி) கே.சிவபிரகாசம், ஈரோடு வருவாய் வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
ஈரோடு கள்ளுக்கடைமேட்டில் ஆக்கிரமித்திருந்த ஆஞ்சநேயர் கோயில் இடித்து அகற்றம்

ஈரோடு கள்ளுக்கடைமேட்டில் ஆக்கிரமித்திருந்த ஆஞ்சநேயர் கோயில் இடித்து அகற்றம்

ஈரோடு கள்ளுக்கடைமேட்டில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஆஞ்சநேயர் கோயில் இன்று (18ம் தேதி) இடித்து அகற்றப்பட்டன. 

ஈரோடு கள்ளுக்கடைமேடு பகுதியில் ராம பக்த ஆஞ்சநேயர் கோயில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது. இது குறித்து அளவீடு செய்து சுமார் 2004 சதுர அடி இடம் மாநகராட்சிக்கு சொந்தமான சாலையோரம் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இவற்றை அகற்றக் கோரி நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. இதை அடுத்து உரிய விசாரணைகளுக்கு பின்னர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கோயிலை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் மாநகராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த ஆஞ்சநேயர் கோயில் மற்றும் அருகே உள்ள ஆட்டோ நிறுத்தம் உள்ளிட்ட கட்டுமானங்களை நேற்று அகற்றுவதாக அறிவித்தனர்.

அப்போது, கோயில் தரப்பினரும் ஆட்டோ நிறுத்தம் தரப்பினரும் மற்றும் தாசில்தார் ஆகியோருடன் ஈரோடு ஆர்.டி.ஓ. முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது நீதிமன்ற உத்தரவின் படி குறிப்பிட்ட அளவுள்ள இடம் அளவீடு செய்து காண்பிக்கப்பட்டு ஆக்கிரமிப்பு உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இன்று (18ம் தேதி) காலை ஆக்கிரமிப்பு அகற்ற முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, மாநகராட்சி நிர்வாகத்தினர், மாநகர பொறியாளர் விஜயகுமார், உதவி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் தாசில்தார் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் பொக்லைன் எந்திரங்கள் மூலமாக ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சூரம்பட்டி போலீசார் 100-க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் போக்குவரத்து போலீசார், தீயணைப்புத் துறையினர், ஊர்க்காவல் படையினர் 108 ஆம்புலன்ஸ் குழுவினர் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் என பலர் உடன் இருந்தனர்.

சுமார் 15 ஆண்டுகளாக இருந்த கள்ளுக்கடை ஆஞ்சநேயர் கோயில் இடித்து அகற்றப்பட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதேபோல், கோயில் அருகே இருந்த ஆட்டோ நிறுத்த பகுதி கட்டிடங்களும் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.


வியாழன், 17 அக்டோபர், 2024

ஈரோடு மாவட்டத்தில் நாளை (அக்.,19) பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (அக்.,19) பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (அக்.,19) சனிக்கிழமை பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர், சத்தியமங்கலம் செண்பகபுதூர், பவானி மைலம்பாடி மின் தொடர், கொடுமுடி மற்றும் கஸ்பாபேட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (அக்டோபர் 19) சனிக்கிழமை நடக்கிறது. இதனால், நாளை கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தியூர் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- அந்தியூர், தவிட்டுபாளையம், மைக்கேல்பாளையம், பருவாச்சி, பச்சாம்பாளையம், புதுப்பாளையம், சங்கராபாளையம், வெள்ளையம்பாளையம், பிரம்மதேசம், தோட்டகுடியாம்பாளையம், காட்டூர், செம்புளிச்சாம்பாளையம், எண்ணமங்கலம், கோவிலூர், வெள்ளித்திருப்பூர், கெட்டிசமுத்திரம், மற்றும் பர்கூர் மலைப் பகுதி.

சத்தியமங்கலம் செண்பகபுதூர் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- சத்தியமங்கலம், காந்திநகர். நேரு நகர், ரங்கசமுத்திரம், பஸ் நிலையம், கோணமூலை, வி.ஐ.பி.நகர், செண்பகப்புதூர், உக்கரம், அரியப்பம்பாளையம், சுண்டக்காம்பாளையம், சின்னாரிபாளையம், சிக்கரசம்பாளையம், கெஞ்சனூர், அய்யஞ்சாலை மற்றும் தாண்டாம்பாளையம்.

பவானி ஊராட்சிக்கோட்டை மைலம்பாடி மின் தொடர் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- மைலம்பாடி, ஊராட்சிகோட்டை, மோளக்கவுண்டன்புதூர், சாணார்பாளையம், கொட்டக்காட்டுபுதூர், புதுப்பாளையம், அருமைக்காரன்புதூர், போத்தநாயக்கனுார், கல்வாநாயக்கனூர் மற்றும் கண்ணாடிபாளையம்.

கொடுமுடி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- சாலைப்புதூர், குப்பம்பாளையம், ராசாம்பாளையம், தளுவம்பாளையம், அரசம்பாளையம், சோளக்காளிபாளையம், பிலிக்கல்பாளையம், வடக்குமூர்த்திபாளையம் மற்றும் நாகமநாய்க்கன்பாளையம்.

மொடக்குறிச்சி கஸ்பாபேட்டை துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- கஸ்பாபேட்டை, முள்ளாம்பரப்பு, சின்னியம்பாளையம், வேலாங்காட்டுவலசு, பொட்டிநாய்க்கன்வலசு, வீரப்பம்பாளையம், முத்துசாமி காலனி, குறிக்காரன்பாளையம், செல்லப்பம்பாளையம், எல்.ஐ.சி., நகர், ரைஸ்மில் சாலை, ஈ.பி.நகர், என்.ஜி.ஜி.ஓ., நகர், கே.ஏ.எஸ்.நகர், இந்தியன் நகர், டெலிபோன் நகர், பாரதி நகர், மாருதி கார்டன், மூலப்பாளையம், சின்னிசெட்டிபாளையம், சடையம்பாளையம், திருப்பதி கார்டன், முத்துகவுண்டன்பாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், நஞ்சைஊத்துக்குளி, செங்கரைபாளையம், கருந்தேவன்பாளையம், சாவடிபாளையம்புதூர், டி.மேட்டுப்பாளையம், ஆணைக்கல்பாளையம், கிளியம்பட்டி, ரகுபதிநாயக்கன்பாளையம், 46 புதூர் மற்றும் காகத்தான்வலசு.
ஈரோடு மாவட்ட வளர்ச்சிப் பணிகள்: உயர் அலுவலர்களுடன் அமைச்சர் ஆலோசனை

ஈரோடு மாவட்ட வளர்ச்சிப் பணிகள்: உயர் அலுவலர்களுடன் அமைச்சர் ஆலோசனை

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து, துறை சார்ந்த உயர் அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் ஊட்டச்சத்து விகிதம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் கிராம அளவில் குழந்தைகள் பாதுகாப்பு குழு, பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாணவர்கள் வருகை, எண்ணும் எழுத்தும் திட்டம், 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி விகிதங்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பாடுகள், இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48 திட்டம், அரசு மருத்துவமனைகள் செயல்பாடு, பொது மருத்துவம், மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட பணிகள் குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் தொடர்புடைய துறை உயர் அலுவலர்களுடன் அமைச்சர் முத்துசாமி விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, 15வது நிதிக் குழு மானியத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள், மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடுகள், பிறப்பு மற்றும் இறப்பு விகிதம், இளவயது கர்ப்பம், பிறப்பு பாலின விகிதம், எடை குறைவான குழந்தைகள் பிறப்பு, பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டம் உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், அரசின் திட்டங்களை மக்களுக்கு முழுமையாக வழங்கி, ஈரோடு மாவட்டத்தை அனைத்து துறைகளிலும் முன்னோடி மாவட்டமாக்கிடும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) செல்வராஜ், இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) அம்பிகா, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) அருணா, அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் ரவிக்குமார், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பிரியா, மாவட்ட சமூக நல அலுவலர் சண்முக வடிவு, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் பூங்கோதை உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

புதன், 16 அக்டோபர், 2024

சித்தோடு அருகே போலீஸ் எனக் கூறி ரூ.25 ஆயிரம் பணம் பறித்த 5 பேர் கைது

சித்தோடு அருகே போலீஸ் எனக் கூறி ரூ.25 ஆயிரம் பணம் பறித்த 5 பேர் கைது

ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 35). இவர் சித்தோடு அருகே உள்ள கோணவாய்க்கால் ராமன் பாலக்காடு என்ற இடத்தில் மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார். இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு மசாஜ் சென்டருக்குள் நுழைந்த 5 பேர் தங்களை போலீஸ் எனக்கூறி, மசாஜ் சென்டரில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக தகவல் வந்துள்ளது என்று கூறியுள்ளனர்.

பின்னர் ரூ.50 ஆயிரம் கேட்டு மிரட்டி, கார்த்திகேயன் வைத்திருந்த ரூ.25 ஆயிரத்தை பறித்துக் கொண்டு சென்றுவிட்டனர். இதனைத் தொடர்ந்து, வந்தவர்கள் போலீஸ்காரர்கள் தானா? என்று சந்தேகம் அடைந்த கார்த்திகேயன் இதுகுறித்து சித்தோடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, மசாஜ் சென்டரில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கார்த்திகேயனிடம் போலீஸ் எனக்கூறி  மிரட்டி பணம் பறித்த, ஈரோடு வீரப்பன்சத்திரத்தைச் சேர்ந்த வசந்தராஜ் (வயது 34), செங்கோடம்பள்ளத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது 38), லக்காபுரத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (வயது 32), சூரம்பட்டியைச் சேர்ந்த முருகேசன் (வயது 30), ஆனந்தகுமார் (வயது 38) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். பின்னர், ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோபி அருகே டி.என்.பாளையத்தில் மின்சாரம் தாக்கி மக்னா யானை உயிரிழப்பு

கோபி அருகே டி.என்.பாளையத்தில் மின்சாரம் தாக்கி மக்னா யானை உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த டி.என்.பாளையம் அருகே பங்களாப்புதூரில் தனியார் பொறியியல் கல்லூரி அருகே எருமைக்குட்டை வனப்பகுதியை ஒட்டிய உள்ள தோட்டத்து மின் வேலியில் சிக்கி நேற்று காலை மக்னா யானை (தந்தம் இல்லாத ஆண் யானை) இறந்து கிடந்தது. இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் அங்கு சென்று இறந்து கிடந்த யானையை பார்வையிட்டனர். பின்னர் யானையின் உடலை கால்நடை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர்.

இதுகுறித்து கால்நடை மருத்துவர்கள் கூறும்போது, இறந்தது மக்னா யானை. அந்த யானைக்கு சுமார் 25 வயது இருக்கும். வனப்பகுதியில் இருந்து உணவு தேடி வெளியேறிய யானை அருகே உள்ள தோட்டத்துக்குள் நுழைய முயன்றுள்ளது. அப்போது அங்கு அமைக்கப்பட்டுள்ள மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது என்றனர்.

இதைத்தொடர்ந்து யானையின் உடலை மீட்ட வனத்துறையினர் அங்கேயே புதைத்தனர். மேலும், தோட்டத்தில் மின்வேலி அமைத்த உரிமையாளர் யார்?, மின்வேலியில் நேரடியாக மின்சாரம் செலுத்தப்பட்டதா? என்று வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: நம்பியூரில் அரசு அலுவலகங்களில் ஈரோடு ஆட்சியர் ஆய்வு

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: நம்பியூரில் அரசு அலுவலகங்களில் ஈரோடு ஆட்சியர் ஆய்வு

ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், பல்வேறு அரசு அலுவலகங்களில் நடைபெற்று வரும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, நம்பியூர் நில வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள், முக்கிய அலுவலக நடைமுறை கோப்புகள் மற்றும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, நம்பியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தினை பார்வையிட்டு, பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்படும் நியாய விலைக் கடையில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், அத்தியாவசிய பொருட்கள் இருப்பு குறித்து கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து, எலத்தூர் செட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு கொண்டு பராமரிக்கப்படும் பதிவேடுகள் நோயாளிகள் விபரம், மருந்துகள் இருப்பு ஆகியவற்றை கேட்டறிந்தார். மேலும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து, எலத்தூர் பேரூராட்சி கண்ணாங்காட்டுபாளையம் பகுதியில் செயல்படும், அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், அங்கு குழந்தைகளுக்கு வழங்கப்படும் இணை உணவு, குழந்தைகளின் உயரம், எடை மற்றும் கற்றல் திறன் ஆகியவற்றை பார்வையிட்டு, குழந்தைகளுக்கு வழங்க தயாராக இருந்து உள்ள முட்டை மற்றும் சத்துமாவினை ஆய்வு மேற்கொண்டார்.

இதைத் தொடர்ந்து, எலத்தூர் பேரூராட்சியில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் பெரிய குளம் மேம்பாடு செய்யப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், மலையப் பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, பள்ளியின் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் மற்றும் இடைநிற்றல் மாணவர்கள் குறித்து கேட்டறிந்து, மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பது குறித்து அவர்கள் பெற்றோரிடம் ஆலோசனைகள் வணங்கி மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து, நம்பியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளி மேம்பாட்டு மானியம் ஆறாவது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.99.40 லட்சம் மதிப்பீட்டில் 6 வகுப்பறைகள் கொண்ட பள்ளிக்கட்டிடம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், பள்ளியில் செயல்படும் சத்துணவு மையத்தினை பார்வையிட்டு, மாணவியர்களுக்கு வழங்க தயாராக இருந்த சத்துணவினை சுவைத்துப் பார்த்து, மாணவியர்களின் தேர்ச்சி மற்றும் இடைநிற்றல் மாணவியர்கள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும், நம்பியூர் காவல் நிலையம் மற்றும் நம்பியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவை பிரிவில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுகளின் போது, உதவி இயக்குநர் (நில அளவை) ஹரிதாஸ், நம்பியூர் வருவாய் வட்டாட்சியர் ஜாகிர் உசேன், நம்பியூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, சரஸ்வதி உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
ஈரோட்டில் தீபாவளி இனிப்பு, காரம் தயாரித்து விற்போருக்கு விழிப்புணர்வு கூட்டம்

ஈரோட்டில் தீபாவளி இனிப்பு, காரம் தயாரித்து விற்போருக்கு விழிப்புணர்வு கூட்டம்

தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்புத் துறை ஆணையகம் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ஈரோடு மாவட்ட முழுவதிலும் உள்ள இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பு மற்றும் சில்லரை விற்பனையாளருக்கான விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஈரோடு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் தங்கவிக்னேஷ் தலைமை வகித்தார். ஈரோடு மாநகராட்சி பகுதி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கேசவராஜ், செல்வன், அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் தங்கவிக்னேஷ் பேசியதாவது, தீபாவளி பண்டிகை முன்னிட்டு இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பு மற்றும் சில்லரை விற்பனையாளர் அனைவரும் உணவு பாதுகாப்புத்துறை உரிமம் அல்லது பதிவு சான்று கட்டாயமாக பார்வைக்கு வைத்திருக்க வேண்டும்.

இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி குறிப்பிடப்பட்ட பிறகே விற்பனை செய்தல் வேண்டும். உணவு பொருட்கள் கையாளுபவர்கள் கையுறை, முககவசம், தலைகவசம் ஆகியவற்றை அணிந்து பணிபுரிவதை உறுதிப்படுத்த வேண்டும்.

இனிப்பு வகைகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான செயற்கை வண்ணங்கள் பயன்படுத்துதல் கூடாது. உணவுகையாளுபவர்கள் அனைவரும் மருந்துவ சான்றிதழ் பெற்று இருத்தல் வேண்டும்.

ஒரு முறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய் வகைகளை மறு உபயோகம் செய்தல் கூடாது. மாறாக உபயோகப்படுத்தப்பட்ட எண்ணெய்யை அங்கீகரிக்கப்பட்ட பயோடீசல் மறுசுழற்சி நிறுவனங்களிடம் வழங்கி அதன் ஆவணங்களை வைத்திருந்தல் வேண்டும்.

மேலும், பொதுமக்கள் உணவு பொருட்கள் குறித்த புகார்களுக்கு 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.‌ இவ்வாறு அவர் பேசினார்.

செவ்வாய், 15 அக்டோபர், 2024

ஈரோடு மாவட்டத்தில் நாளை (அக்.,17) பல்வேறு இடங்களில் மின்தடை அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (அக்.,17) பல்வேறு இடங்களில் மின்தடை அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் கவுந்தப்பாடி, காந்திநகர் மற்றும் தண்ணீர்பந்தல் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (அக்டோபர் 17) வியாழக்கிழமை நடக்கிறது. இதனால், கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவுந்தப்பாடி துணை மின் நிலையம்:- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- கவுந்தப்பாடி, கொளத்துப்பாளையம், குஞ்சரமடை, ஓடத்துறை, ஓடமேடு, பெத்தாம்பாளையம், கருக்கம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், கண்ணாடிபுதூர், மாணிக்கவலசு, பெருந்தலையூர், வெள்ளாங்கோவில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தருமாபுரி, கவுந்தப்பாடிபுதூர், பி.மேட்டுப்பாளையம், செந்தாம்பாளையம், செட்டிபாளையம், ஆவரங்காட்டுவலசு, ஆலந்தூர், மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம், வேலம்பாளையம், சந்திராபுரம், பெருமாபாளையம், தன்னாசிபட்டி, அய்யன்வலசு, மணிபுரம், விராலிமேடு, தங்கமேடு, கவுண்டன்பாளையம் மற்றும் செரயாம்பாளையம்

காஞ்சிக்கோவில் அருகே உள்ள காந்திநகர் துணை மின் நிலையம்:-

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- காஞ்சிகோவில், பள்ளப்பாளையம், கவுண்டம்பாளையம், கரட்டுப்பாளையம், சின்னியம்பாளையம், அய்யன்வலசு, பெருமாபாளையம், முள்ளம்பட்டி, ஓலப்பாளையம், காந்தி நகர், நடுவலசு, கருக்கம்பாளையம், துடுப்பதி, பொன்னாண்டாவலசு, கொளத்தான்வலசு, சூரியம்பாளையம், பெத்தாம்பாளையம், இளையாம்பாளையம், கோவில்பாளையம், ஓசப்பட்டி, மாதநாயக்கன்பாளையம், சாணார்பாளையம், தீர்த்தம்பாளையம், சமாதானபுரம், சீரங்ககவுண்டம்பாளையம், பாலக்கரை, தொட்டியனூர், கோவில்காட்டுவலசு, எருக்காட்டுவலசு மற்றும் இச்சிவலசு

மொடக்குறிச்சி அருகே உள்ள தண்ணீர்பந்தல் துணை மின் நிலையம்:- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- உலகபுரம், வேலம்பாளையம், வெங்கிடியாம்பாளையம், தண்ணீர்பந்தல், ஞானிபாளையம், ஊஞ்சப்பாளையம், தேவணம்பாளையம், ராயபாளையம், கொத்துமுட்டிபாளையம், மைலாடி, நடுப்பாளையம், குடுமியாம்பாளையம், வேமாண்டம்பாளையம், முகாசி அனுமன்பள்ளி, அஞ்சுராம்பாளையம், வெள்ளிவலசு, பள்ளியூத்து, ராட்டைசுற்றிபாளையம், ராசாம்பாளையம், மந்திரிபாளையம், சென்னிமலை பாளையம், சங்கராங்காட்டுவலசு, கனகபுரம், கவுண்டச்சிபாளையம், நல்லாம்பாளையம், பூவாண்டிவலசு மற்றும் புதுப்பாளையம்.

பெருந்துறையில் ரூ.40 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்: வட மாநில வாலிபர் கைது

பெருந்துறையில் ரூ.40 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்: வட மாநில வாலிபர் கைது

வெளிநாடுகளில் வசிப்பவர்கள் இந்தியாவில் உள்ளவர்களுக்கு நேரடியாக பணத்தை வங்கி மூலம் அனுப்பாமல், சட்டவிரோதமாக நபர்கள் மூலம் பணத்தை பரிமாறிக் கொள்வது ஹவாலா எனப்படுகிறது. இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை பேருந்து நிலையத்தில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, சந்தேகப்படும் வகையில் அங்கு ஒரு வாலிபர் கையில் பையுடன் நின்று கொண்டிருந்தார்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து, அவர் வைத்திருந்த பையை வாங்கி பார்த்தனர். அப்போது அதில் கட்டு கட்டாக ரூ.40 லட்சம் இருந்தது. இதையடுத்து, போலீசார் அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில், அவர் ராஜஸ்தான் மாநிலம் சிரிகி மாவட்டம் ரிபாரி வஸ்ராம்புராவைச் சேர்ந்த கங்காராம் என்பவருடைய மகன் கீமாராம் (வயது 25) என்பது தெரியவந்தது.

மேலும், அவரிடம் உள்ள ரூ.40 லட்சத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது. இதனையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர், ரூ.40 லட்சத்தையும், கீமாராமையும் ஈரோடு வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருந்துறை ஊராட்சி ஒன்றிய பகுதி வளர்ச்சி திட்டப் பணிகளை ஆட்சியர் ஆய்வு

பெருந்துறை ஊராட்சி ஒன்றிய பகுதி வளர்ச்சி திட்டப் பணிகளை ஆட்சியர் ஆய்வு

ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சுள்ளிபாளையம், குள்ளம்பாளையம் மற்றும் சீனாபுரம் ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (15ம் தேதி) நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, பெருந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை அவர் பார்வையிட்டார். மேலும், மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து, குள்ளம்பாளையம் ஊராட்சி குள்ளம்பாளையத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலா ரூ.3.59 லட்சம் வீதம் ரூ.50.26 லட்சம் மதிப்பீட்டில் 14 வீடுகள் கட்டப்பட்டு வருவதையும், அதேப் பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.30.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, நியாயவிலை கடை தெருவில் ரூ.3.64 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் வசதியுடன் கூடிய பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு வருவதையும், குள்ளம்பாளையம் பகுதியில் விவசாய நிலத்தில் மண்கரை அமைக்கப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், அதேப் பகுதியில் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் 4 வீடுகள் புனரமைப்பு செய்யும் பணியினையும், கோபிகவுண்டன்பாளையம் பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு வருவதையும் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து, சூரநாயக்கனூர் மம்முட்டிதோப்பு பகுதியில் செயல்படும் அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளின் எடை, உயரம், வருகை பதிவேடு ஆகியவற்றை பார்வையிட்டார்.

மேலும், சீனாபுரம் ஊராட்சி, சீனாபுரத்தில் பிரதான் மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.3.72 கோடி மதிப்பீட்டில் ஈரோடு திங்களூர் ரோடு முதல் மேற்கு சீனாபுரம் வரை சாலை மேம்பாடு செய்யப்பட்டு வருவதையும் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுகளின்போது, பெருந்துறை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கார்த்திகேயன், பிரேமலதா உட்பட அலுவலர்கள் உடனிருந்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் வரும் 19ம் தேதி ரேஷன் குறைதீர் முகாம்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் வரும் 19ம் தேதி ரேஷன் குறைதீர் முகாம்

ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம் வரும் 19ம் தேதி (சனிக்கிழமை) அனைத்து வட்டங்களிலும் தலா ஒரு இடத்தில் நடக்கிறது. இந்த முகாமில் புதிய குடும்ப அட்டை மனுக்கள் பெறுதல், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம், கைபேசி எண் மாற்றம் மற்றும் ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் மனுக்கள் மூலம் புகார் அளிக்கலாம்.

அதன்படி ஈரோடு வட்டத்தில் சின்னமாரியம்மன் கோயில் வளாகம், பெருந்துறை வட்டத்தில் வள்ளிபரத்தான்பாளையம், மொடக்குறிச்சி வட்டத்தில் அவல்பூந்துறை ராசாம்பாளையம், கொடுமுடி வட்டத்தில் சோளக்காளிபாளையம், கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் கடுக்கம்பாளையம், நம்பியூர் வட்டத்தில் சாந்திபாளையம், பவானி வட்டத்தில் சின்னபுலியூர், அந்தியூர் வட்டத்தில் எண்ணமங்கலம் -1, சத்தியமங்கலம் வட்டத்தில் பெரியூர் அரியப்பம்பாளையம், தாளவாடி வட்டத்தில் மல்லங்குழியிலும் முகாம் நடக்கிறது. 

எனவே, மேற்கொண்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் நடைபெறும் சிறப்பு முகாமினை அப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்த கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.