Erode லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Erode லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 26 ஜூலை, 2024

பவானிசாகர் அணை நீர்வரத்து 14,982 கன அடி: 88 அடியை நெருங்கியது நீர்மட்டம்

பவானிசாகர் அணை நீர்வரத்து 14,982 கன அடி: 88 அடியை நெருங்கியது நீர்மட்டம்

பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து இன்று (27ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 14,982 கன‌ அடியாக இருந்த நிலையில், அணையின் நீர்மட்டம் 88 அடியை நெருங்கியது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள கீழ்பவானி அணை எனப்படும் பவானிசாகர் அணை ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. 

இந்நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து, அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

நேற்று (26ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 7,926 கன அடியாக இருந்த நிலையில், இன்று (27ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 14,982 கன அடியாக அதிகரித்துள்ளது. 

அதேசமயம், அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 86.06 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 87.70 அடியாக உயர்ந்தது. விரைவில் 88 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், நீர் இருப்பு 19.11 டிஎம்சியிலிருந்து 20.12 டிஎம்சியாக அதிகரித்துள்ளது. மேலும், பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து பவானி ஆறு மற்றும் கீழ்பவானி வாய்க்காலில் மொத்தம் வினாடிக்கு 1,205 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கோபி அருகே ஜெராக்ஸ் மிஷினில் கள்ளநோட்டு தயாரித்து புழக்கத்தில் விட்ட 4 பேர் கைது

கோபி அருகே ஜெராக்ஸ் மிஷினில் கள்ளநோட்டு தயாரித்து புழக்கத்தில் விட்ட 4 பேர் கைது

ஈரோடு மாவட்டம் கோபி அருகே சிறுவலூரைச் சேர்ந்தவர் ஸ்டெல்லா (வயது 31). இவர், நேற்று முன்தினம் இரவு திங்களூர் சந்தையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ரூ.500ஐ கொடுத்து ரூ.100க்கு காய்கறி வாங்கி கொண்டு ரூ.400ஐ பெற்று சென்றார்.
தொடர்ந்து, அந்த நபர் அங்கிருந்த பழ வியாபாரியிடம் ரூ.500ஐ கொடுத்து, ரூ.100க்கு பழங்கள் வாங்கி கொண்டு ரூ.400ஐ பெற்று சென்றார். அந்த நபர் கொடுத்த ரூபாய் நோட்டு வித்தியாசமாக இருந்ததால் ஸ்டெல்லாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால், ஸ்டெல்லா ரூபாய் நோட்டை தந்த நபரை பின் தொடர்ந்து சென்றார்.

அப்போது, அந்த நபர் சந்தை அருகே நிறுத்தி இருந்த காரில் ஏறி சென்றார். காரில் இரு பெண்கள் உட்பட 3 பேர் இருந்தனர். பின்னர், ஸ்டெல்லா பணத்தை பரிசோதித்து பார்த்தபோது, அது கள்ளநோட்டு என தெரிந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின்படி, திங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இந்நிலையில், கோபி சாலையில் ஆவரங்காடு பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேகமளிக்கும் வகையில் வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில், அந்த காரில் இருந்த 4 பேர் திங்களூர் சந்தையில் கள்ளநோட்டு விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் எனத் தெரியவந்தது. இதனையடுத்து, போலீஸ் அவர்களை கைது செய்தனர். 

பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் சத்தியை சேர்ந்த ஜெயராஜ் (வயது 40), அவரது தந்தை ஜெயபால் (வயது 75), தாயார் சரசு (வயது 70), மேட்டுப்பாளையம் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த சிலுவை தாஸ் மனைவி மேரி மில்டிலா (வயது 42) ஆகியோர் எனத் தெரியவந்தது.

தொடர்ந்து நடத்திய தீவிர விசாரணையில், ஜெயராஜ், யூடியூப்பை பார்த்து வீட்டிலேயே கலர் ஜெராக்ஸ் மிஷின் மூலம் ஏ4 சீட்டில் கள்ளநோட்டுகளை தயார் செய்து, 3 பேருடன் சேர்ந்து சந்தைகளில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டது தெரியவந்தது.

மேலும், மேரி மில்டிலா கடந்த 4 வருடங்களுக்கு முன் கணவரை பிரிந்து ஜெயராஜூடன் வாழ்ந்து வரும் நிலையில், ஒரு வருட காலமாக சத்தியமங்கலம், புளியம்பட்டி, மேட்டுப்பாளையம், சிறுமுகை, தாராபுரம், காங்கேயம், சிறுவலூர், கோபி, திங்களூர், பெருந்துறை என பல்வேறு சந்தைகளில் பல லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்றி இருப்பதும் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து, போலீசார் ஜெயராஜ் வீட்டில் நடத்திய சோதனையில், இரண்டு கலர் ஜெராக்ஸ் மிஷின் ரூ.2 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் இருந்த 100, 200 மற்றும் 500 ரூபாய் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர், 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பவானியில் மனமகிழ் மன்றம் பெயரில் சூதாட்ட கிளப்: திமுக நிர்வாகி மீது வழக்குப் பதிவு

பவானியில் மனமகிழ் மன்றம் பெயரில் சூதாட்ட கிளப்: திமுக நிர்வாகி மீது வழக்குப் பதிவு

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காலிங்கராயன்பாளையத்தில் அனுமதி இல்லாமல் சூதாட்ட கிளப் நடத்தி வருவதாக சித்தோடு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், போலீசார் காலிங்கராயன்பாளையத்தில் சோதனை நடத்தினர்.
அதில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராஜா (வயது 21), பெலிக்ஸ் (வயது 40), முகிலன் (வயது 22), சேலம் மாவட்டம் சங்ககிரி கல்வடங்கத்தை சேர்ந்த கார்த்திக் (வயது 35), துாத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் புதுப்படியை சேர்ந்த சிவக்குமார் (வயது 55), திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தை சேர்ந்த செந்தில்குமார் (வயது 47), வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த அப்துல்சலாம் (வயது 61), நாமக்கல் மாவட்டம், முருக செல்லபெருமாள் ஆகிய 8 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதில், 7 பேரை சுற்றி வளைத்து பிடித்த சித்தோடு போலீசார், கைது செய்தனர். முருக செல்லபெருமாள் தப்பி தலைமறைவானார். மேலும், இவர்களிடம் நடத்திய விசாரணையில், காலிங்கராயன் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் சூதாட்ட கிளப் நடப்பதும், திமுகவை சேர்ந்த சூரியம்பாளையம் பகுதி செயலாளராக உள்ள குமாரவடிவேல் என்பவருக்கு சொந்தமானது என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து, திமுக பகுதி செயலாளர் குமாரவடிவேல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சூதாட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 7 பேரை, ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள குமாரவடிவேல், முருக செல்லபெருமாள் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இவர்களிடமிருந்து 4 வண்ணங்களில் அச்சிடப்பட்ட, பல லட்சம் மதிப்பிலான 627 டோக்கன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோட்டில் ஆம்னி காரில் 750 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

ஈரோட்டில் ஆம்னி காரில் 750 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக, ஈரோடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புல னாய்வு பிரிவு போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் தலை மையிலான போலீசார் அங்கு சென்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வேளை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையின்போது 15 மூட்டைகளில் 750 கிலோ ரேஷன் அரிசி கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து வேன் டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், ஈரோடு கருங்கல் பாளையம் செங்குட்டுவன் வீதியை சேர்ந்த சுப்பிரமணி (வயது 36) என்பதும், அவர் பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி, ஆர்.என்.புதூர் பகுதியில் தங்கி வேலை செய்யும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்ய கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியை கைது செய்த னர். மேலும் அவரிடம் இருந்து 750 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்ததாவது, ஈரோடு மாவட்டத்தின் இயல்பான ஆண்டு சராசரி மழையளவு 733.44 மிமீ ஆகும். நடப்பு ஆண்டில் 26.07.2024 முடிய 269.68 மி.மீ பெய்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தற்போது 86.06 அடியாகவும், 19.11 டிஎம்சி நீர் இருப்பும் உள்ளது.

நடப்பாண்டில் வேளாண்மை விரிவாக்க மையங்களில் விநியோகம் செய்வதற்காக நெல் விதைகள் 261 மெட்ரிக் டன்னும், சிறுதானியங்கள் 20 மெட்ரிக் டன்னும், பயறுவகைகள் 16 மெட்ரிக் டன்னும், எண்ணெய் வித்துக்கள் 64 மெட்ரிக் டன்னும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ரசாயன உரங்களான யூரியா 8058 மெட்ரிக் டன்னும், டி.எ.பி 1433 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 2961 மெட்ரிக் டன்னும் மற்றும் காம்ப்ளக்ஸ் 15722 மெட்ரிக் டன்னும் இருப்பில் உள்ளது. நடப்பு பருவத்திற்கு தேவையான இடுபொருட்கள் போதுமான அளவு இருப்பில் உள்ளன.

விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள வட்டார மற்றும் துணை வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் இவற்றைப் பெற்று பயன்பெறலாம். மேலும் விவசாயிகளுக்கு தேவையான பூச்சி மருந்துகள் மற்றும் இரசாயன உரங்கள் போதுமான அளவு தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

பி.எம்.கிசான் நிதி உதவி பெற்று வரும் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியதும் அவசியமாகும். இதுவரை ஆதார் எண்ணை சரிபார்த்து உறுதி செய்யாத விவசாயிகள் மற்றும் வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகள் உடனடியாக அந்தந்த பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடர்பு கொண்டு பதிவு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, விவசாயிகளிடமிருந்து 115 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், வேளாண்மை இணை இயக்குநர் வெங்கடேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்தாமணி, செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல்) மனோகரன், துணை இயக்குநர் (தோட்டக்கலை) மரகதமணி, துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) மகாதேவன், செயலாளர் (ஈரோடு விற்பனைக்குழு) சாவித்திரி உட்பட் பிற துறைகளை சார்ந்த அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஈரோட்டில் சுற்றுலா வேன் தீப்பிடித்து எரிந்து சேதம்

ஈரோட்டில் சுற்றுலா வேன் தீப்பிடித்து எரிந்து சேதம்

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அடுத்த ராசாம்பாளையம் புங்கம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பரத் (வயது 23). இவர், சொந்தமாக சுற்றுலா வேன் வைத்துள்ளார். இந்நிலையில், இவர் இன்று (26ம் தேதி) காலை ஈரோடு மூலப்பாளையத்திலிருந்து சுபநிகழ்ச்சிக்காக பயணிகளை ஏற்றிக்கொண்டு சேலம் செல்ல திட்டமிட்டு இருந்தார்.
இதற்காக, சுற்றுலா வேனை எடுத்துக் கொண்டு மூலப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது வேப்பம்பாளையம் பிரிவு அருகே வேன் சென்று கொண்டிருந்தபோது, திடீரென என்ஜினில் இருந்து புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து எறிய தொடங்கியது.

இதனால், அதிர்ச்சி அடைந்த பரத் உடனடியாக சுற்றுலா வேனை சாலையோரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கி விட்டார். பின்னர் சிறிது நேரத்தில் வேன் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற வாகன ஓட்டிகள் உடனடியாக இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 30 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். இருந்தாலும் இந்த விபத்தில் வேன் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது.

விபத்துக்குள்ளான சுற்றுலா வேனில் ஏ.சி.இயங்கி கொண்டிருந்தது. அப்போது ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்தது. விபத்துக்குள்ளான இடத்தின் அருகே பெட்ரோல் பங்க் இருந்துள்ளது.

தீயணைப்பு வீரர்கள் தக்க சமயத்திற்கு வந்து தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கால்நடை மருத்துவ ஆம்புலன்சில் பணி: ஈரோட்டில் நாளை (27ம் தேதி) நேர்காணல்

கால்நடை மருத்துவ ஆம்புலன்சில் பணி: ஈரோட்டில் நாளை (27ம் தேதி) நேர்காணல்

இதுதொடர்பாக 108 ஆம்புலன்ஸ் ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவின் தெரிவித்துள்ளதாவது:- 

தமிழ்நாடு அரசின் 1962 இலவச கால்நடை மருத்துவ ஆம்புலன்ஸ் திட்டம், அவசர சிகிச்சை தேவைப்படும் கால்நடைகளின் உயிரை காக்கும் நோக்கத்தோடு 2016ல் அறிமுகப்படுத்தப்பட்டது.

கால்நடை மருத்துவமனை வசதி இல்லாத கிராமங்களிலும் கூட, 1962 எனும் இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டால், மருத்துவ வசதி தேவைப்படும் இடத்திற்கே கால்நடை மருத்துவ ஆம்புலன்ஸ் வாகனம் அனுப்பி வைக்கப்படும்.

இந்த கால்நடை ஆம்புலன்ஸ் சேவைக்கான டிரைவர் மற்றும் உதவியாளர் பணிக்கான நேர்முக தேர்வு நாளை (27ம் தேதி) சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள, 108 ஆம்புலன்ஸ் சேவை அலுவலகத்தில் நடக்கிறது.

டிரைவருக்கான தகுதிகள், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது, 24 முதல், 35க்கு மிகாமல் இருக்க வேண்டும். உயரம், 162.5 செ.மீ., ஓட்டுநர் உரிமம் பெற்று, 3 ஆண்டுகளும் பேட்ஜ் எடுத்து ஒரு ஆண்டும் நிறைவு பெற்றிருக்க வேண்டும். இதற்கான சம்பளம் ரூ.12,000 ஆகும்.

ஆம்புலன்ஸ் உதவியாளர் பணிக்கான தகுதிகள், 12ம் வகுப்பு தேர்ச்சி, வயது, 19 முதல், 30க்கு மிகாமல் இருக்க வேண்டும். இப்பணிக்கான சம்பளம் ரூ.1,3000 ஆகும். நேர்முக தேர்வுக்கு வரும் அனைவரும், அசல் சான்றிதழை மற்றும் ஓட்டுநர் உரிமம் அவசியம் எடுத்து வரவேண்டும். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வியாழன், 25 ஜூலை, 2024

கோபி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்

கோபி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அக்கரை கொடிவேரி ஊராட்சி காமராஜபுரம் பகுதியில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்கள் பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த மயானத்தை அப்பகுதியை சேர்ந்த தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளார். மேலும், இறந்தவர்களின் உடல்களை புதைக்க அனுமதிக்காமல் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தும் வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த மயானத்தை ஆக்கிரமித்துள்ள தனிநபர் தனது குடும்பத்தினருடன் இணைந்து மயானம் முழுவதையும், இயந்திரங்களின் உதவியோடு தரைமட்டமாக்கி இடித்து அங்கிருத்த சமாதிகளை சேதப்படுத்தியுள்ளனர்.

இதனால், ஆத்திரமடைந்த காமராஜபுரம் பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தும் மயானத்தை சேதப்படுத்தியவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கூறி கோபி கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் தங்களின் மயானத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றி கம்பி வேலி அமைத்து பாதுகாப்பாக பயன்படுத்திட வேண்டும். வருவாய்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை மனுவை கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் பெரியசாமியிடம் வழங்கினர். பின்னர், தொடர்ந்து அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோட்டில் மின்சார கட்டண உயர்வைக் கண்டித்து தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் மின்சார கட்டண உயர்வைக் கண்டித்து தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்

திமுக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்தும் உயர்த்திய மின் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், ரேஷன் கடைகளில் பாமாயில், பருப்பு வகைகளை வழங்காததை கண்டித்தும் ஈரோடு மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில் இன்று (25ம் தேதி) காலை சூரம்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் ஆனந்த் தலைமை தாங்கினார். சுரேஷ் வரவேற்றார். இதில் மாநில மகளிர் அணி துணை செயலாளர் வனிதா துரை கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

ஈரோடு ஒன்றிய செயலாளர் சரவணக்குமார், கருங்கல்பாளையம் பகுதி செயலாளர் சுசி ஆறுமுகம் மற்றும் பகுதி செயலாளர்கள், மாவட்ட துணை செயலாளர் தாமரை செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் ஆனந்தன், தமிழ்ச்செல்வன் மற்றும் மகளிர் அணி, தொண்டர் அணி, வர்த்தகர் அணி, மாணவர் அணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மெய்யழகன் நன்றி கூறினார்.
கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு பணி 70 சதவீதம் முடிவு: அமைச்சர் முத்துசாமி

கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு பணி 70 சதவீதம் முடிவு: அமைச்சர் முத்துசாமி


கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு பணி 70 சதவீதம் முடிவு: அமைச்சர் முத்துசாமி
கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு பணிகள் ஏறத்தாழ 70 சதவீதம் முடிவடைந்துள்ளது என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் பெருந்துறை ஆகிய பகுதிகளில் கீழ்பவானி திட்ட பிரதான கால்வாய்களில் விரிவாக்குதல், புதுப்பித்தல் மற்றும் நவீன மயமாக்குதல் திட்டத்தின் மூலம் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி இன்று (25ம் தேதி) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, கீழ்பவானி திட்ட பிரதான வாய்க்கால்களான சத்தியமங்கலம் - மேட்டுப்பாளையம் சாலை எரங்காட்டூர் பாலம், பெருந்துறை - பவானி தேசிய நெடுஞ்சாலை திருவாச்சியில் மழைநீர் வடிகால் பாலம் மைல் 3/4 மற்றும் 4/1, வாவிக்கடை பகுதியில் மழைநீர் வடிகால் பாலம் மைல் 58/7, வாய்கால்மேடு நந்தா கல்லூரி அருகில் மழைநீர் வடிகால் பாலம் மைல் 61/4 ஆகிய பகுதிகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை அமைச்சர் முத்துசாமி, ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர், அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, ஈரோடு மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவின்படி, கீழ்பவானி திட்ட பிரதான கால்வாயில் விரிவாக்குதல், புதுப்பித்தல் மற்றும் நவீன மயமாக்குதல் திட்டத்தின் மூலம் பவானிசாகர் முதல் முத்தூர் வரை கால்வாய் (0/0 முதல் 124/2 மைல் வரை) சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதில் மதகுகள் 17 இடங்களிலும், மழைநீர் வடிகால் பாலங்கள் 15 இடங்களிலும் மற்றும் பாதுகாப்பு சுவர் 12 கி.மீட்டர் 40 இடங்களிலும் என 84 இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்ட ஆட்சியர் தொடர்புடைய துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு, அப்பணிகளை கண்காணித்து வருகிறார். அந்த வகையில் இன்று (25ம் தேதி) ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஏறத்தாழ 70 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளுக்கு எவ்வித இடையூறும் இன்றி இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், நீதிமன்ற உத்தரவினை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் நோக்கத்துடன் நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்தார். தொடர்ந்து, பூசாரிபாளையம் ஊராட்சியில் உள்ள நடைபாலத்தை அகலப்படுத்தி தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்ததையடுத்து பாலத்தினை நேரில் சென்று, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, தலைமை பொறியாளர் (நீர்வள ஆதாரத்துறை கோவை மண்டலம்) முருகேசன், கண்காணிப்பு பொறியாளர் (பவானி வடிநில வட்டம்) மாரிமுத்து, செயற்பொறியாளர்கள் அருளழகன் (பவானிசாகர் அணை கோட்டம்), திருமூர்த்தி (கீழ்பவானி வடிநில கோட்டம்) உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


புதன், 24 ஜூலை, 2024

சென்னிமலை முருகன் கோயிலில் ரூ.7.53 கோடியில் மேம்பாட்டு பணி துவக்கி வைத்த முதல்வர்

சென்னிமலை முருகன் கோயிலில் ரூ.7.53 கோடியில் மேம்பாட்டு பணி துவக்கி வைத்த முதல்வர்

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது இந்தக் கோவிலில் மலைப்பாதை மேம்படுத்துதல் மற்றும் சீரமைத்தல் பணி ரூ.6 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டிலும், மலைக்கோவில் பின்பகுதியில் பக்தர்கள் உணவருந்தும் கூடம் ரூ.83 லட்சம் மதிப்பீட்டிலும் கட்டப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இன்று (24ம் தேதி) தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக இம்மேம்பாட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
சென்னிமலை முருகன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், ஈரோடு மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் எல்லப்பாளையம் சிவக்குமார், மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், இந்து அறநிலைய துறை ஈரோடு மண்டல இணை ஆணையர் பரஞ்ஜோதி, சென்னிமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் காயத்ரி இளங்கோ, சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக், சென்னிமலை கோவில் செயல் அலுவலர் சரவணன், ஆய்வர் மாணிக்கம், பெருந்துறை சரக ஆய்வர் குகன் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
மத்திய பட்ஜெட்: கண்துடைப்பு பட்ஜெட் முன்னாள் தென்னக ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் பாஷா

மத்திய பட்ஜெட்: கண்துடைப்பு பட்ஜெட் முன்னாள் தென்னக ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் பாஷா

மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு முக்கியதுவம் அளிக்காத வெறும் கணிதுடைப்பு பட்ஜெட் ஆக உள்ளது என்று முன்னாள் தென்னக ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் கே.என்.பாஷா தெரிவித்துள்ளார்.
முன்னாள் தென்னக ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினரும், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை துணைத்தலைவருமான கே.என்.பாஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

கோவையிலிருந்து தூத்துக்குடிக்கு லிங்க் எக்ஸ்பிரஸ் நாகர்கோயில் எக்ஸ்பிரஸில் இணைப்பு ரயிலாக லிங்க் எக்ஸ்பிரஸ் இயங்கி கொண்டு இருந்தது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த நாள்கு ஆண்டுகளாக இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில் இல்லாமல் தென் மாவட்ட பயணிகள் திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்ட மக்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். இது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை, தெற்கு ரயில்வேயில் அதிக வருமானம் ஈட்டி தருவது ஈரோடு என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு ரயில் நிலையத்தில் நான்கு பிளாட்பாரங்கள் மட்டுமே உள்ளது. நாள் ஒன்றுக்கு 150க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்வதால் போதிய இடவசதி இல்லாமல் ரயில்கள் ஜங்ஷன் தூரத்தில் நிறுத்தி காலதாமதம் ஏற்படுகிறது. ஆகவே 5வது பிளாட்பாரமும், நான்காவது பிளாட்பாரத்தில் பாசஞ்சர் ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதில் எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கி செல்ல நடவடிக்கை வரும் என்று எதிர்பார்த்தோம்.

கன்னியாகுமரி - மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி கொண்டு இருக்கிறது. இது கோவை, திருப்பூர், ஈரோடு சேலம் வழியாக இயக்கப்பட்டு வந்தது. கொரனா பெருந்தொற்று காரணமாக இந்த ரயில் புனே வரையில் இயக்கப்பட்டது. தொடர்ந்து இந்த ரயில் புனே வரை இயக்கப்படுகிறது. இந்த ரயில் மும்பை வரை நீட்டிப்பு செய்தி வரும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே?

கொரோனா பெருத்தொற்று காரணமாக காரைக்கால் - எர்ணாகுளம், கோவை - மயிலாடுதுறை ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ், கோவை - நாகர்கோவில், கடலூர் துறைமுகத்தில் இருந்து மயிலாடுதுறை வழியாக மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கொடுமுடி ரயில் நிலையத்தில் நின்று சென்றது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கொடுமுடியில் நிறுத்தாமல் தொடர்ந்து வண்டிகள் ஓடிக்கொண்டு இருக்கிறது. இது குறித்து கொடுமுடி ரயில் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டமும் செய்தோம் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை?.

கோவையிலிருந்து காலை 7.25 மணிக்கு மேல் சென்னை செல்ல மதியம் 12.00 மணிக்கு தான் சென்னை செல்ல ரயில்கள் உள்ளது. காலை 9.00 அல்லது 10.00 மணிக்கு பகல் நேர இண்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் இயங்கினால் திருப்பூர், ஈரோடு, சேலம் பயணிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும் புதிய ரயில் அறிவிப்பு இல்லாதது வருத்தத்தை அளிக்கிறது.

கோவையிலிருந்து காலை திருப்பதிக்கு இவர்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதை தினசரி ரயிலாக இயக்குனால் திருப்பதி செல்லும் பக்தர்களுக்கும், பயணிகளுக்கும் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

நாடு முழுவதும் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு வருகிறது. நவீன பாதுகாப்பு தொழில்நுட்ப வசதியும, அவசியமாக உள்ளது. அப்படி அறிமுகப்படுத்த பட்டது தான் சுவாச் (கவசம்) தொழில் நுட்பம். இது ஒரு தானியங்கி (ரயில் பாதுகாப்பு) முறையாகும். ஓட்டுனர்களுக்கு விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் குறிப்பாக ஒரே மார்க்கத்தில் இரு ரயில்கள் வந்தால் எச்சரிக்கை செய்யும், அப்போது ஓட்டுனர் வேகத்தை குறைக்க தவறினால் இந்த கருவி தானாகவே ஆட்டோமேட்டிக் (பிரேக் அப்ளை) ரயிலின் வேகத்தை கட்டுப்படுத்தி விபத்துக் குள்ளான சாத்தியத்தை குறைக்கும் இந்த வசதி இருந்தால் ரயில் தொடர் விபத்தை தடுக்க ஏதுவாக இருக்கும் தொடர்ந்து ரயில் விபத்துக்கள் ஏற்பட்டுக்கொண்டு இருக்கிறது. ஆகவே இந்த முறையை அவசியம் பயன்படுத்தினால் விபத்துக்களை தவிர்க்க எதுவாக இருக்கும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சத்தியில் மக்களுடன் முதல்வர் குறைதீர் முகாமினை துவக்கி வைத்த ஆட்சியர்

சத்தியில் மக்களுடன் முதல்வர் குறைதீர் முகாமினை துவக்கி வைத்த ஆட்சியர்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் அரசூர் ஊராட்சி, காமாட்சி அம்மன் கோவில் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நடைபெற்ற குறைதீர் முகாமினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (24ம் தேதி) துவக்கி வைத்தார்.

பின்னர், பொதுமக்கள் அவர்களுடைய கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்யும் பணிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். இண்டியம்பாளையம், அரசூர், மாக்கினாம்கோம்பை, சதுமுகை ஆகிய நான்கு ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்ற இம்முகாமில் பல்வேறு துறைகள் சார்ந்த அலுவலர்கள் கலந்து கண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு பதிவு செய்தனர்.

இதில், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் கே.சி.பி.இளங்கோ, வடிப்பக அலுவலர் (சத்தி சுகர்ஸ்) சொரூபராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்தியமங்கலம்) அப்துல்வகாப், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அந்தியூர் குருநாதசுவாமி கோயில் ஆடித்தேர் திருவிழா கொடியேற்றம்

அந்தியூர் குருநாதசுவாமி கோயில் ஆடித்தேர் திருவிழா கொடியேற்றம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே புதுப்பாளையத்தில் புகழ்பெற்ற குருநாதசுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் நடப்பாண்டு ஆடித்தேர் திருவிழா, கடந்த 17ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து, இன்று (24ம் தேதி) காலை 11 மணிக்கு புதுப்பாளையம் மடப்பள்ளியில் இருந்து, பெருமாள் சுவாமி, காமாட்சியம்மன், குருநாதசுவாமிகளின் வெள்ளிக் கவசம் மற்றும் பூஜைப் பொருட்கள் அடங்கிய மூங்கில் பெட்டகத்தை சுமந்து வனக் கோயிலுக்கு பக்தர்கள் எடுத்துச் சென்றனர்.

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட, 60 அடி உயர மூங்கில் கம்பத்தில் கொடி கட்டி, சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர், பக்தர்கள் அனைவரும் சேர்ந்து கொடிக் கம்பத்தை நிலை நிறுத்தினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து, வரும் 31ம் தேதி முதல் வன பூஜை நடைபெற உள்ளது. இதனையடுத்து, அடுத்த மாதம் ஆகஸ்ட் 7ம் தேதி தேர்த்திருவிழாவுடன், தென்னிந்திய அளவில் பிரசித்தி பெற்ற கால்நடை சந்தை தொடங்கி, 10ம் தேதி வரை நடைபெறுகிறது. மேலும், இதில் பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெறும்.

ஈரோடு மாவட்டத்தில் நாளை (25ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள்

ஈரோடு மாவட்டத்தில் நாளை (25ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள்

ஈரோடு மாவட்டத்தில் நாளை (25ம் தேதி) வியாழக்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆகையால், நாளை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு காசிபாளையம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- சூரம்பட்டிவலசு, அணைக்கட்டுரோடு, சங்குநகர், சேரன்நகர், மாதவிவீதி, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, கோவலன்வீதி. காமராஜர் வீதி, நேருவீதி, கே.கே.நகர், சென்னிமலைரோடு, ரங்கம்பாளையம், இரணியன் வீதி, பெரியசடையம்பாளையம், சிவம்நகர், அண்ணாநகர், சேனாதிபதிபாளையம், இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், காசிபாளையம், சாஸ்திரிநகர், ஜீவாநகர், மூலப்பாளையம், நாடார்மேடு, கொல்லம்பாளையம், பச்சப்பாளி, செந்தில் நகர். காந்திஜி ரோடு, ஈ.வி.என்.ரோடு, முத்தம்பாளையம் வீட்டுவசதி வாரிய முதலாவது பகுதி முதல் 8-வது பகுதி வரை, அம்பிகை நகர், அன்னை நகர், நல்லியம்பாளையம், லட்சுமி கார்டன், பாலாஜி கார்டன், லட்சுமி நகர், தெற்கு பள்ளம், ஜீவானந்தம் ரோடு, தங்கபொருமாள் வீதி, ஈஸ்வரன் பிள்ளை வீதி, கள்ளுக்கடைமேடு மற்றும் பழைய ரயில் நிலைய பகுதி.

சத்தியமங்கலம் பெரியகொடிவேரி, வரதம்பாளையம், பெரும்பள்ளம், மாக்கினாம்கோம்பை துணை மின் நிலையங்கள் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- கொடிவேரி, சின்ன அட்டிபாளையம், கொமாரபாளையம், ஆலத்துகோம்பை, மலையடிப்புதூர், டி.ஜி.புதூர், கொண்டப்பநாயக்கன் பாளையம், கெம்பநாயக்கன்பாளையம், சின்ன குளம், தாசரிபாளையம், செல்லிபாளையம், கடம்பூர், குன்றி, மாக்கம்பாளையம், காடநள்ளி, அத்தியூர், வடக்குப்பேட்டை, புளியங்கோம்பை. சந்தைப்பேட்டை, மணிக்கூண்டு, கடைவீதி, பெரியகுளம், பாசக்குட்டை, வரதம்பாளையம், ஜெ.ஜெ.நகர், கோம்புபள்ளம், கொங்குநகர், அக்கரை கொடிவேரி, சிங்கிரி பாளையம் மற்றும் காசிபாளையம்.

கொடுமுடி துணை மின் நிலையம் (காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- கொடுமுடி புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், ரோஜாநகர், எஸ்.என்.பி.நகர், காங்கேயம் ரோடு, எம்.ஜி.ஆர்.நகர், ஆச்சியம்மன் கோவில் பகுதி மற்றும் எமகண்டனூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 23 ஜூலை, 2024

ஈரோட்டில் இலவச கம்ப்யூட்டர் டேலி பயிற்சி: ஆகஸ்ட் 1ம் தேதி தொடக்கம்

ஈரோட்டில் இலவச கம்ப்யூட்டர் டேலி பயிற்சி: ஆகஸ்ட் 1ம் தேதி தொடக்கம்

ஈரோடு கொல்லம்பாளையம் கரூர் பைபாஸ் சாலையில் ஆஸ்ரம் மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகத்தில் 2ம் தளத்தில் கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் செயல்படுகிறது. இந்த பயிற்சி நிலையத்தில் பல்வேறு தொழில் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. 

அதன்படி, வரும் ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 6ம் தேதி வரை 30 நாட்களுக்கு இலவசமாக கம்ப்யூட்டர் டேலி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சியானது, காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும். பயிற்சியின் போது சீருடை, உணவு உட்பட அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள கிராம பஞ்சாயத்துக்களைச் சேர்ந்த ஆண் , பெண் இருபாலரும் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். 18 வயதிலிருந்து 45 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் இப்பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். மேலும், வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள், நூறு நாள் வேலைத் திட்டத்தில் இருப்பவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.

தற்போது இதற்கான முன்பதிவு நடைபெறுகிறது. இதுபற்றிய விவரங்களுக்கு, 0424-2400338, 8778323213, 7200650604 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என கனரா வங்கி பயிற்சி நிலையத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஈரோட்டில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 683 மனுக்கள்

ஈரோட்டில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 683 மனுக்கள்

மாற்றுத்திறனாளிகளின் குறைகளை கேட்டு கலைந்திடுவதற்காக வருவாய் கோட்ட அளவில் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையிலும் மற்றும் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளின் குறைகளை கேட்டு கலைந்திடுவதற்கு இன்று (23ம் தேதி) ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து இலவச வீட்டுமனை பட்டா, வீடு, பேட்டரியால் இயங்கும் இரு சக்கர வாகனம், தொழில் துவங்க கடனுதவி, இ-சேவை மையம் துவங்க, மாற்றுத்திறனாளி உபகரணங்கள், பெட்ரோல் ஸ்கூட்டர், பராமரிப்பு உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட 683 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றார்.

தொடர்ந்து, பெறப்பட்ட மனுக்களை தொடர்புடைய அலுவலர்களிடம் வழங்கி, மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, நடைபெற்ற கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் பல்வேறு திட்டங்கள் மற்றும் சலுகைகள் ஆகியவை குறித்து துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கமாக எடுத்துரைத்தார்.

இக்கூட்டத்தில், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த ராம்குமார் (பொ), இணை இயக்குநர் (நலப்பணிகள்) மரு.அம்பிகா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

உதய் மின் திட்டத்தால் மின் கட்டண உயர்வு என்பது ஏற்க முடியாது: ஈரோட்டில் அதிமுக வழக்கறிஞர்

உதய் மின் திட்டத்தால் மின் கட்டண உயர்வு என்பது ஏற்க முடியாது: ஈரோட்டில் அதிமுக வழக்கறிஞர்

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 3வது முறையாக மின்சார கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்தும், நியாய விலை கடைகளில் பருப்பு, பாமாயில் போன்றவற்றை நிறுத்த முயற்சிக்கும் திமுக அரசின் நடவடிக்கையை கண்டித்தும் ஈரோட்டில் இன்று (23ம் தேதி) அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
ஈரோடு ரயில் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் கே .வி.ராமலிங்கம் தலைமை வகித்தார். அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் இன்பதுரை இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். 

உயர்த்தப்பட்ட மின்சார கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். பருப்பு, பாமாயில் போன்றவற்றை நியாய விலை கடைகளில் வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது கோஷங்கள் எழுப்பப்பட்டது. 

மேலும், உயர்த்தப்பட்ட மின்சார கட்டணத்தின் காரணமாக விசைத்தறி தொழில் பெரும் அளவு நசிந்து விட்டதாகவும் இதனால் நெசவு தொழில் செய்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது குற்றம் சாட்டப்பட்டது. 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இன்பதுரை, உதய் மின் திட்டத்தை கொண்டு வந்த அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. தற்போது, உதய் மின் திட்டத்தினால் உயர்ந்துள்ளது என திமுகவினர் குற்றம் சாட்டுவது ஏற்றுக் கொள்ள முடியாது.

பல்வேறு தரப்பினரை பாதிக்கும் வகையில் மின்சாரத்தை கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என வாக்குறுதி அளித்திருந்தார்கள். ஆனால் அதற்கு மாறாக தற்பொழுது அதனை உயர்த்தி உள்ளனர். 

எனவே உயர்த்தப்பட்ட மின்சார கட்டணத்தை வாபஸ் பெற வேண்டும் எனவும், புதிய மூன்று குற்றவியல் சட்டங்களின் போராட்டத்திற்கு திமுக ஸ்டிக்கரை ஒட்டுகிறது எனவும் குற்றம் சாட்டினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
தடுப்பணையை காணவில்லை: ஈரோடு ஆட்சியரிடம் புகார் அளித்த பாஜகவினர்

தடுப்பணையை காணவில்லை: ஈரோடு ஆட்சியரிடம் புகார் அளித்த பாஜகவினர்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (22ம் தேதி) நடைபெற்றது. இதில், ஈரோடு பாஜக தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் சரவணன் தலைமையில் கட்சியினர் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கூத்தம்பாளையம் பிரதமர் தத்தெடுப்பு சிறப்பு ஊராட்சியாகும். இங்கு 100 நாள் வேலை திட்டத்தில் கடந்த, 2021–22ல் அவரைக்காய் பள்ளம் என்ற இடத்தில் தடுப்பணை கட்டியதாக, அரசு ஆவணங்களில் உள்ளதை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெற்றோம்.

தடுப்பணை பணிக்கு பணத்தை அரசு விடுத்துள்ளது. ஆனால் தடுப்பணை மட்டும் அந்த இடத்தில் இல்லை. ஆவணத்தில் உள்ள இடத்தில் நேரிலும், கூகுள் மேப்பில் தேடியும் தடுப்பணை காணவில்லை. இப்பணிக்கு, மாநில அரசு ரூ.6.97 லட்சம், மத்திய அரசு ரூ.12.46 லட்சம், 100 நாள் வேலை திட்ட கூலி ரூ.2.56 லட்சம் என மொத்தம் ரூ.20 லட்சம் ரூபாய்க்கு மேல் கணக்கு காட்டி உள்ளனர்.

இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டால், அங்குள்ள பள்ளி அருகே ஓடையோ, தண்ணீர் செல்லும் இடமோ, பள்ளமோ இல்லாத இடத்தில், 15 அடி நீளம், 3 அடி உயரத்துக்கு மதில் சுவரை காட்டி இதுதான் தடுப்பணை என்கின்றனர். இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபற்றி மக்களிடம் கொண்டு செல்ல திண்ணை பிரசாரம், விழிப்புணர்வு கூட்டம் நடத்த போலீஸ் அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திங்கள், 22 ஜூலை, 2024

85 அடியை நெருங்கியது பவானிசாகர் அணை நீர்மட்டம்

85 அடியை நெருங்கியது பவானிசாகர் அணை நீர்மட்டம்

85 அடியை நெருங்கியது பவானிசாகர் அணை நீர்மட்டம் 

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள கீழ்பவானி அணை எனப்படும் பவானிசாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி ஆகும். இந்த அணை ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக இருக்கிறது.
இந்நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்தது. இதனால், அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வந்தது.

இதனிடையே, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்துள்ளது. நேற்று (22ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 5,036 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (23ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,628 கன அடியாக சரிந்தது.

அதேசமயம், அணையின் நீர்மட்டம் நேற்று காலை 84.19 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 84.75 அடியாக உயர்ந்தது. விரைவில் 85 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், அணையில் நீர் இருப்பு 18.01லிருந்து 18.33 டிஎம்சியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி நீரும், பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் வினாடிக்கு 1,200 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 1,205 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.