மதிமுகவின் 31 -வது மாநில பொதுக்குழுக் கூட்டம், கட்சியின் அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூன்ராஜ் தலைமையில் ஈரோட்டில் இன்று (ஜூன் 22) காலை நடந்தது. கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ, துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சி.ஏ.சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.இராசேந்திரன், டாக்டர் ரொஹையா, ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் நா.முருகன், ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் மு.கோபால், மேற்கு மாவட்ட செயலாளர் கே.கேபாஸ்பரன், கிழக்கு மாவட்ட செயலாளர் சோ. வீரக்குமாரன், இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் தமிழீழ சோமு ( எ ) லோ.சோமசுந்தரம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
**திராவிட இயக்கத்துக்கு எதிரான பகை சக்திகள் தமிழ்நாட்டைக் கைப்பற்ற முனைந்து வரும் சூழலில், தேர்தல் கூட்டணி தொடர்பாக, 2017 -ம் ஆண்டிலிருந்து எடுத்த முடிவை, எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் மதிமுக தொடர்ந்து கடைபிடிக்கும்,
* *இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக திகழும் தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கு ஆளுமை திறனோடு வழிநடத்தும் திராவிட மாடல் அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுக்களைத் தெரிவிப்பதுடன், 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று நல்லாட்சி தொடரும்.
**மதிமுக உதயமானது முதல் 8 தேர்தல்களைச் சந்தித்துள்ளது. 1997 -ம் ஆண்டு முதல் 2010 வரையில் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக திகழ்ந்தது. எனவே, 2026 சட்டப்பேரவை தேர்தலில் மதிமுக தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கு ஏதுவாக கூடுதல் தொகுதிகளைக் கூட்டணியில் பெற்று போட்டியிட வேண்டும்.
* *அண்ணா பிறந்தநாள் விழாவை ஒட்டி, செப்-15-ல் திருச்சியில் மாநாடு நடத்தப்படும்.
**கட்சியின் சார்பு அணி நிர்வாகிகளுக்கு மண்டல வாரியாக திராவிட பயிலரங்கம் நடத்தப்படும்.
**தமிழ் மக்களின் தாய்மடியான கீழடியை கருவறுக்க மத்திய பாஜக அரசு அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறது. பல்வேறு சதிகளின் மூலமாக தமிழ் மொழியையும், தமிழரின் தொன்மை வரலாற்றையும் இருட்டடிப்பு செய்ய முயலும் பாசிச சக்திகளை முறியடிக்க வேண்டியது தமிழ் மக்களின் கடமை ஆகும்,
* *டெல்லியில் குடியிருப்புகளை இழந்த தமிழர்களுக்கு உரிய நியாயம் கிடைத்திடும் வகையில், தமிழக அரசு செய்ய வேண்டும்.
**கல்வித்துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக இருந்து வருகிறது. இச்சூழலில் தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தை முடக்கி வைக்கும் வகையில் இத்திட்டத்துக்காக மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ. 617 கோடியை விடுவிக்காமல் அடாவடியாக செயல்படுவது கடும் கண்டனத்துக்குரியது, இந்த நிலையில், தமிழ்நாடு அரசு முழு நிதி ஒதுக்கீடும் செய்து மாணவர்களின் கல்வி நலனை பாதுகாக்க வேண்டும்.
**வக்ஃப் திருத்த சட்டத்தையும் திரும்பப் பெறுவதற்கு ஜனநாயக முற்போக்கு சக்திகள் இணைந்து போராட வேண்டும்.
**பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமனம் செய்யப்படும் விவகாரத்தில், நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படும் ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
**அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு நிகராக கட்டமைப்புகளை மேம்படுத்தி ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்த மாணவர்களின் கல்வி நலனை பேணி பாதுகாக்க வேண்டும்.
* *மருத்துவ காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். அரசு மருத்துவமனைகளை மேலும் தரம் உயர்த்தி, அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும்.
**இலங்கை தமிழர்கள் படுகொலைக்கு சுதந்திரமான பன்னாட்டு நீதிமன்ற விசாரணை நடத்தப்பட்டு, இனப்படுகொலைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
**விவசாயிகளுக்கு கடன் வழங்க கூட்டுறவுத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை திரும்பப்பெற வேண்டும்.
**விவசாய நிலங்களில் வனவிலங்குகளால் ஏற்படும் சேதத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
**பவானி நதி மாசடையாமல் காப்பாற்ற தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
**பாண்டியாறு - மாயாறு இணைப்புத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 28 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.