Latest

ஞாயிறு, 27 ஏப்ரல், 2025

ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஏப்.28ம் தேதி) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்!

ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஏப்.28ம் தேதி) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்!

ஈரோடு மாவட்டத்தில் சூரியம்பாளையம், சென்னம்பட்டி துணை மின் நிலையங்கள் மற்றும் ஊராட்சிக்கோட்டை துணை மின் நிலைய மூன்ரோடு மின் பாதையில் நாளை (ஏப்ரல் 28ம் தேதி) திங்கட்கிழமை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், நாளை கீழ்க்கண்ட இந்த இடங்களில் குறிப்பிட்ட நேரம் மின்சாரம் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சித்தோடு சூரியம்பாளையம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- சித்தோடு, ராயபாளையம், ஈரோடு சுண்ணாம்பு ஓடை, அமராவதிநகர், தண்ணீர்பந்தல்பாளையம், ஆர்.என்.புதூர், கோணவாய்க்கால், பெருமாள்மலை, ஐ.ஆர்.டி.டி., குமிளம்பரப்பு, செல்லப்பம்பாளையம், மாமரத்துப்பாளையம், தயிர்பாளையம், கொங்கம்பாளையம், நரிப்பள்ளம், எல்லப்பாளையம், சேமூர், சொட்டையம்பாளையம், பி.பி.அக்ரஹாரம், மரவபாளையம், சி.எம்.நகர், கே.ஆர்.குளம், காவிரிநகர். பாலாஜிநகர், எஸ்.எஸ்.டி. நகர், வேலன்நகர், ஊத்துக்காடு, பெரியபுலியூர், சேவாக்கவுண்டனூர்.

அம்மாபேட்டை சென்னம்பட்டி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- சென்னம்பட்டி, முரளி, கொமராயனூர், தொட்டிக்கிணறு, சனிச்சந்தை, கிட்டம்பட்டி, புதூர்.

பவானி ஊராட்சிக்கோட்டை துணை மின் நிலைய மூன்ரோடு மின் பாதை (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- மூன்ரோடு, இருசானூர், மைலம்பாடி, ஏம்பாளையம், வரதநல்லூர், மேட்டுப்பாளையம், சன்னியாசிபட்டி மற்றும் கூலிக்காரன்பாளையம்.
பவானிசாகர் அருகே தனியார் பள்ளியில் ரூ.70 ஆயிரம் திருட்டு!

பவானிசாகர் அருகே தனியார் பள்ளியில் ரூ.70 ஆயிரம் திருட்டு!

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள புஞ்சைபுளியம்பட்டியில் அவினாசி சாலையில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. நேற்று காலை, பள்ளியின் பின்கதவு பூட்டு, காசாளர் அறையின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
மேலும், அங்கு மேஜை டிராயரில் இருந்த ரூ.70 ஆயிரம் பணத்தை காணவில்லை. இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளியில் பணம் திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
சத்தியமங்கலம்: குத்தியாலத்தூர் கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்; கோபி சார் ஆட்சியர் உத்தரவு!

சத்தியமங்கலம்: குத்தியாலத்தூர் கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்; கோபி சார் ஆட்சியர் உத்தரவு!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் குத்தியாலத்தூர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் விஜயபாஸ்கர். இவர் அலுவலகத்துக்கு சரிவர வருவதில்லை. எப்போதும் நில அளவை செய்ய சென்று விடுவது உள்பட பல்வேறு புகார்களை பொதுமக்கள் தெரிவித்து இருந்தனர்.

இந்தநிலையில் அவரை கண்டித்து வருகிற 5ம் தேதி கடம்பூர் கிராம நிர்வாக அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும் என குத்தியாலத்தூர் பொதுமக்கள் சார்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து சத்தியமங்கலம் வட்டாட்சியர் இதுதொடர்பாக விசாரணை நடத்தி கோபி சார் ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், கிராம நிர்வாக அலுவலர் விஜயபாஸ்கரை பணியிடை நீக்கம் செய்து கோபி சார் ஆட்சியர் சிவானந்தம் உத்தரவிட்டார்.
ஈரோட்டில் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி: அரசு செயலாளர் நேரில் ஆய்வு!

ஈரோட்டில் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி: அரசு செயலாளர் நேரில் ஆய்வு!

ஈரோடு சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு அடுத்த மாதம் (மே) 2 நாட்கள் நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு வேளாண்மை உற்பத்தி ஆணையாளரும், அரசு செயலாளருமான வி.தட்சிணாமூர்த்தி நேற்று கல்லூரியில் ஆய்வு செய்தார். அப்போது கண்காட்சி, கருத்தரங்கு மேடை அமைவிடம் தொடர்பாக தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆய்வின்போது, ஈரோடு மாநகராட்சி துணை ஆணையாளர் தனலட்சுமி, வேளாண்மை இணை இயக்குநர் தமிழ்செல்வி, தோட்டக்கலை துணை இயக்குநர் சரஸ்வதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


சனி, 26 ஏப்ரல், 2025

பெருந்துறையில் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி., சாராய வேட்டை!

பெருந்துறையில் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி., சாராய வேட்டை!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள கணக்கம்பாளையம் மணியம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கடந்த 15ம் தேதி ஈரோடு நகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு 26 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக தயார் செய்யப்பட்டு வைத்திருந்த 100 லிட்டர் ஊறல் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர், பின்னர் இருவரையும் கைது செய்ய நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து, இன்று மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி., செந்தில்குமார், பெருந்துறை உட்கோட்டத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, சாராயம் காய்ச்சிய பகுதியை நேரில் பார்வையிட்டு பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

அப்போது, இதுபோன்ற கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். மேலும், மாவட்டத்தில் முற்றிலுமாக கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கள்ளச்சாராயம், கஞ்சா, லாட்டரி மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்தார். இந்த ஆய்வின் போது பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
ஈரோடு: ரயிலில் கடத்தி வரப்பட்ட 13 கிலோ கஞ்சா பறிமுதல்; வடமாநில வாலிபர் கைது!

ஈரோடு: ரயிலில் கடத்தி வரப்பட்ட 13 கிலோ கஞ்சா பறிமுதல்; வடமாநில வாலிபர் கைது!

ஈரோடு ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் பிரியா சாய் ஸ்ரீ தலைமையிலான ரயில்வே போலீசார் நேற்று முன்தினம் அதிகாலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, ஒடிசா சாம்பல்பூர்- ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயில் ஈரோடு ரயில் நிலையம் வந்தடைந்தது. அந்த ரயிலில் ஏறி ஒவ்வொரு பெட்டியாக சோதனை செய்தனர். அதில், எஸ்-4 பெட்டியில் சந்தேகப்படும் வகையில் இருந்த வட மாநில வாலிபர் ஒருவரை போலீசார் பிடித்து சோதனை நடத்தினர்.
சோதனையில், அவர் வைத்திருந்த பையில் 14 பண்டல்களில் 13 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் அவரை பிடித்து, ரயில்வே காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஒடிசா மாநிலம் மலப்படா பகுதியை சேர்ந்த அபினேஷ் திவாரி (வயது 28) என்பதும், அவர் பலாங்கிரி பகுதியில் இருந்து சேலம் செல்வதற்காக முன்பதிவு இல்லாத டிக்கெட்டில் பயணம் செய்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து, அவரை கைது செய்து, அவரிடம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து, மேல் நடவடிக்கைக்காக அபினேஷ் திவாரி கோபி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் கவிதாவிடம் ஒப்படைத்தனர்.
பெருந்துறையில் அரிசி ஆலையில் பதுக்கி வைத்திருந்த 21 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 5 பேர் கைது!

பெருந்துறையில் அரிசி ஆலையில் பதுக்கி வைத்திருந்த 21 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 5 பேர் கைது!

பெருந்துறையில் அரிசி ஆலையில் பதுக்கி வைத்திருந்த 21 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 5 பேர் கைது!


ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே ரேஷன் அரிசியை வெளி மாநிலத்துக்கு கடத்துவதற்காக பதுக்கிவைத்திருப்பதாக கோவை குற்ற உளவுப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, ஆய்வாளர் கமலி மற்றும் போலீசார் பெருந்துறையை அடுத்த வாவிகடை, பிச்சாண்டம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் அரசி ஆலையில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அங்கு பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களிலும் கடத்தலுக்காக ரேஷன் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன.

இதையடுத்து போலீசார் அதிரடியாக சுற்றி வளைத்து ஆலைக்குள் இருந்த அனைவரையும் பிடித்து நடத்திய விசாரணையில், அவர்கள் பவானியை சேர்ந்த ஜானகிராமன், பாபு, பிரபாஷ், சிவா, கார்த்திக் ஆகிய 5 பேர் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, அவர்கள் 5 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 3 வேன்கள் மற்றும் 2 இருசக்கர வாகனம் என 5 வாகனங்கள் பறிமுதல் செய்து, கடத்தலுக்காக பதுக்கி வைத்திருந்த 21 ஆயிரத்து 10 கிலோ (21 டன்) ரேஷன் அரிசியை போலீசார் கைப்பற்றினர்.

மேலும், இதுதொடர்பாக ஈரோடு குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.