Latest

வெள்ளி, 26 ஜூலை, 2024

பவானிசாகர் அணை நீர்வரத்து 14,982 கன அடி: 88 அடியை நெருங்கியது நீர்மட்டம்

பவானிசாகர் அணை நீர்வரத்து 14,982 கன அடி: 88 அடியை நெருங்கியது நீர்மட்டம்

பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து இன்று (27ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 14,982 கன‌ அடியாக இருந்த நிலையில், அணையின் நீர்மட்டம் 88 அடியை நெருங்கியது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள கீழ்பவானி அணை எனப்படும் பவானிசாகர் அணை ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. 

இந்நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து, அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

நேற்று (26ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 7,926 கன அடியாக இருந்த நிலையில், இன்று (27ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 14,982 கன அடியாக அதிகரித்துள்ளது. 

அதேசமயம், அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 86.06 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 87.70 அடியாக உயர்ந்தது. விரைவில் 88 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், நீர் இருப்பு 19.11 டிஎம்சியிலிருந்து 20.12 டிஎம்சியாக அதிகரித்துள்ளது. மேலும், பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து பவானி ஆறு மற்றும் கீழ்பவானி வாய்க்காலில் மொத்தம் வினாடிக்கு 1,205 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கோபி அருகே ஜெராக்ஸ் மிஷினில் கள்ளநோட்டு தயாரித்து புழக்கத்தில் விட்ட 4 பேர் கைது

கோபி அருகே ஜெராக்ஸ் மிஷினில் கள்ளநோட்டு தயாரித்து புழக்கத்தில் விட்ட 4 பேர் கைது

ஈரோடு மாவட்டம் கோபி அருகே சிறுவலூரைச் சேர்ந்தவர் ஸ்டெல்லா (வயது 31). இவர், நேற்று முன்தினம் இரவு திங்களூர் சந்தையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ரூ.500ஐ கொடுத்து ரூ.100க்கு காய்கறி வாங்கி கொண்டு ரூ.400ஐ பெற்று சென்றார்.
தொடர்ந்து, அந்த நபர் அங்கிருந்த பழ வியாபாரியிடம் ரூ.500ஐ கொடுத்து, ரூ.100க்கு பழங்கள் வாங்கி கொண்டு ரூ.400ஐ பெற்று சென்றார். அந்த நபர் கொடுத்த ரூபாய் நோட்டு வித்தியாசமாக இருந்ததால் ஸ்டெல்லாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால், ஸ்டெல்லா ரூபாய் நோட்டை தந்த நபரை பின் தொடர்ந்து சென்றார்.

அப்போது, அந்த நபர் சந்தை அருகே நிறுத்தி இருந்த காரில் ஏறி சென்றார். காரில் இரு பெண்கள் உட்பட 3 பேர் இருந்தனர். பின்னர், ஸ்டெல்லா பணத்தை பரிசோதித்து பார்த்தபோது, அது கள்ளநோட்டு என தெரிந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின்படி, திங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இந்நிலையில், கோபி சாலையில் ஆவரங்காடு பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேகமளிக்கும் வகையில் வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில், அந்த காரில் இருந்த 4 பேர் திங்களூர் சந்தையில் கள்ளநோட்டு விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் எனத் தெரியவந்தது. இதனையடுத்து, போலீஸ் அவர்களை கைது செய்தனர். 

பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் சத்தியை சேர்ந்த ஜெயராஜ் (வயது 40), அவரது தந்தை ஜெயபால் (வயது 75), தாயார் சரசு (வயது 70), மேட்டுப்பாளையம் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த சிலுவை தாஸ் மனைவி மேரி மில்டிலா (வயது 42) ஆகியோர் எனத் தெரியவந்தது.

தொடர்ந்து நடத்திய தீவிர விசாரணையில், ஜெயராஜ், யூடியூப்பை பார்த்து வீட்டிலேயே கலர் ஜெராக்ஸ் மிஷின் மூலம் ஏ4 சீட்டில் கள்ளநோட்டுகளை தயார் செய்து, 3 பேருடன் சேர்ந்து சந்தைகளில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டது தெரியவந்தது.

மேலும், மேரி மில்டிலா கடந்த 4 வருடங்களுக்கு முன் கணவரை பிரிந்து ஜெயராஜூடன் வாழ்ந்து வரும் நிலையில், ஒரு வருட காலமாக சத்தியமங்கலம், புளியம்பட்டி, மேட்டுப்பாளையம், சிறுமுகை, தாராபுரம், காங்கேயம், சிறுவலூர், கோபி, திங்களூர், பெருந்துறை என பல்வேறு சந்தைகளில் பல லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்றி இருப்பதும் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து, போலீசார் ஜெயராஜ் வீட்டில் நடத்திய சோதனையில், இரண்டு கலர் ஜெராக்ஸ் மிஷின் ரூ.2 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் இருந்த 100, 200 மற்றும் 500 ரூபாய் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர், 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பவானியில் மனமகிழ் மன்றம் பெயரில் சூதாட்ட கிளப்: திமுக நிர்வாகி மீது வழக்குப் பதிவு

பவானியில் மனமகிழ் மன்றம் பெயரில் சூதாட்ட கிளப்: திமுக நிர்வாகி மீது வழக்குப் பதிவு

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காலிங்கராயன்பாளையத்தில் அனுமதி இல்லாமல் சூதாட்ட கிளப் நடத்தி வருவதாக சித்தோடு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், போலீசார் காலிங்கராயன்பாளையத்தில் சோதனை நடத்தினர்.
அதில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராஜா (வயது 21), பெலிக்ஸ் (வயது 40), முகிலன் (வயது 22), சேலம் மாவட்டம் சங்ககிரி கல்வடங்கத்தை சேர்ந்த கார்த்திக் (வயது 35), துாத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் புதுப்படியை சேர்ந்த சிவக்குமார் (வயது 55), திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தை சேர்ந்த செந்தில்குமார் (வயது 47), வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த அப்துல்சலாம் (வயது 61), நாமக்கல் மாவட்டம், முருக செல்லபெருமாள் ஆகிய 8 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதில், 7 பேரை சுற்றி வளைத்து பிடித்த சித்தோடு போலீசார், கைது செய்தனர். முருக செல்லபெருமாள் தப்பி தலைமறைவானார். மேலும், இவர்களிடம் நடத்திய விசாரணையில், காலிங்கராயன் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் சூதாட்ட கிளப் நடப்பதும், திமுகவை சேர்ந்த சூரியம்பாளையம் பகுதி செயலாளராக உள்ள குமாரவடிவேல் என்பவருக்கு சொந்தமானது என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து, திமுக பகுதி செயலாளர் குமாரவடிவேல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சூதாட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 7 பேரை, ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள குமாரவடிவேல், முருக செல்லபெருமாள் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இவர்களிடமிருந்து 4 வண்ணங்களில் அச்சிடப்பட்ட, பல லட்சம் மதிப்பிலான 627 டோக்கன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோட்டில் ஆம்னி காரில் 750 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

ஈரோட்டில் ஆம்னி காரில் 750 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக, ஈரோடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புல னாய்வு பிரிவு போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் தலை மையிலான போலீசார் அங்கு சென்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வேளை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையின்போது 15 மூட்டைகளில் 750 கிலோ ரேஷன் அரிசி கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து வேன் டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், ஈரோடு கருங்கல் பாளையம் செங்குட்டுவன் வீதியை சேர்ந்த சுப்பிரமணி (வயது 36) என்பதும், அவர் பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி, ஆர்.என்.புதூர் பகுதியில் தங்கி வேலை செய்யும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்ய கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியை கைது செய்த னர். மேலும் அவரிடம் இருந்து 750 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்ததாவது, ஈரோடு மாவட்டத்தின் இயல்பான ஆண்டு சராசரி மழையளவு 733.44 மிமீ ஆகும். நடப்பு ஆண்டில் 26.07.2024 முடிய 269.68 மி.மீ பெய்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தற்போது 86.06 அடியாகவும், 19.11 டிஎம்சி நீர் இருப்பும் உள்ளது.

நடப்பாண்டில் வேளாண்மை விரிவாக்க மையங்களில் விநியோகம் செய்வதற்காக நெல் விதைகள் 261 மெட்ரிக் டன்னும், சிறுதானியங்கள் 20 மெட்ரிக் டன்னும், பயறுவகைகள் 16 மெட்ரிக் டன்னும், எண்ணெய் வித்துக்கள் 64 மெட்ரிக் டன்னும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ரசாயன உரங்களான யூரியா 8058 மெட்ரிக் டன்னும், டி.எ.பி 1433 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 2961 மெட்ரிக் டன்னும் மற்றும் காம்ப்ளக்ஸ் 15722 மெட்ரிக் டன்னும் இருப்பில் உள்ளது. நடப்பு பருவத்திற்கு தேவையான இடுபொருட்கள் போதுமான அளவு இருப்பில் உள்ளன.

விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள வட்டார மற்றும் துணை வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் இவற்றைப் பெற்று பயன்பெறலாம். மேலும் விவசாயிகளுக்கு தேவையான பூச்சி மருந்துகள் மற்றும் இரசாயன உரங்கள் போதுமான அளவு தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

பி.எம்.கிசான் நிதி உதவி பெற்று வரும் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியதும் அவசியமாகும். இதுவரை ஆதார் எண்ணை சரிபார்த்து உறுதி செய்யாத விவசாயிகள் மற்றும் வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகள் உடனடியாக அந்தந்த பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடர்பு கொண்டு பதிவு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, விவசாயிகளிடமிருந்து 115 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், வேளாண்மை இணை இயக்குநர் வெங்கடேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்தாமணி, செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல்) மனோகரன், துணை இயக்குநர் (தோட்டக்கலை) மரகதமணி, துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) மகாதேவன், செயலாளர் (ஈரோடு விற்பனைக்குழு) சாவித்திரி உட்பட் பிற துறைகளை சார்ந்த அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மீண்டும் பணியாணை மற்றும் பணி மாறுதல்கள். விசிக தொழிலாளர் விடுதலை முன்னணி நடத்திய பேச்சு வார்த்தையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சேலம் மண்டல மேலாண்மை இயக்குனர் முடிவு..

மீண்டும் பணியாணை மற்றும் பணி மாறுதல்கள். விசிக தொழிலாளர் விடுதலை முன்னணி நடத்திய பேச்சு வார்த்தையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சேலம் மண்டல மேலாண்மை இயக்குனர் முடிவு..

 
சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாற்றிய தொழிலாளர்களுக்கு மீண்டும் பணியாணை மற்றும் பணி மாறுதல். சேலம் மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனரிடம் விசிக தொழிலாளர் விடுதலை முன்னணி பேச்சு வார்த்தை நடத்தியதன் அடிப்படையில் முடிவு..

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கிளை அலுவலகங்கள் அஸ்தம்பட்டி, ஜான்சன் பேட்டை, எருமபாளையம், பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்கள், உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன. இது போன்ற அலுவலகங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு ஏராளமான பிரச்சனைகளும், இன்னல்களும் இருக்கத்தான் செய்கின்றன. 
இதுபோன்று பல்வேறு பிரச்சனைகளை உள்ளடக்கிய நபர்களில் சிலர், தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு முதன்மை ஒருங்கிணைப்பாளரும், விசிக தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணைச் செயலாளருமான சரஸ்ராம் ரவி அவர்களை சந்தித்து தங்களது பிரச்சனைகளை குறித்து வலியுறுத்தியுள்ளனர். 
இவர்களின் கோரிக்கையை ஏற்ற சரஸ்ராம் ரவி அவர்கள் அரசுப் போக்குவரத்து கழக - சேலம் மண்டல மேலாண்மை இயக்குநர் அவர்களை நேரில் சந்தித்து பல கோரிக்கைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் அடிப்படையில், நீண்ட கால 9 ஆண்டு ஊழியர் பணி நீக்கம் ,( ஜம்பு@ தமிழ்நிலவு - DR- 2702 ) குறித்து உயர்நீதி மன்றம் உத்தரவு அடிப்படையில் மீண்டும் மாற்று  பணி வழங்கிட முடிவாகியதுடன், அருள்பிரசாத் DR No 9679-  ( எருமாபாளையம் கிளை ) இட மாறுதல் மேட்டூர் கிளை செய்ய உறுதி செய்யபட்டது. மேலும் வடிவேல் DR No 4445 பணி மாறுதல் ( பேருந்து ) உறுதி செய்யபட்டது. 
பேச்சுவார்த்தையின் போது தொழிலாளர்களின் பிரச்சனையை ஏற்று முழு ஒத்துழைப்பு நல்கிய மேலாண்மை இயக்குர், சேலம் மண்டலம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை சரஸ்ராம் ரவி அவர்களும் பணி பலன்கள் பெற்ற தொழிலாளர்களும் தெரிவித்து கொண்டனர்.
ஈரோட்டில் சுற்றுலா வேன் தீப்பிடித்து எரிந்து சேதம்

ஈரோட்டில் சுற்றுலா வேன் தீப்பிடித்து எரிந்து சேதம்

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அடுத்த ராசாம்பாளையம் புங்கம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பரத் (வயது 23). இவர், சொந்தமாக சுற்றுலா வேன் வைத்துள்ளார். இந்நிலையில், இவர் இன்று (26ம் தேதி) காலை ஈரோடு மூலப்பாளையத்திலிருந்து சுபநிகழ்ச்சிக்காக பயணிகளை ஏற்றிக்கொண்டு சேலம் செல்ல திட்டமிட்டு இருந்தார்.
இதற்காக, சுற்றுலா வேனை எடுத்துக் கொண்டு மூலப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது வேப்பம்பாளையம் பிரிவு அருகே வேன் சென்று கொண்டிருந்தபோது, திடீரென என்ஜினில் இருந்து புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து எறிய தொடங்கியது.

இதனால், அதிர்ச்சி அடைந்த பரத் உடனடியாக சுற்றுலா வேனை சாலையோரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கி விட்டார். பின்னர் சிறிது நேரத்தில் வேன் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற வாகன ஓட்டிகள் உடனடியாக இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 30 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். இருந்தாலும் இந்த விபத்தில் வேன் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது.

விபத்துக்குள்ளான சுற்றுலா வேனில் ஏ.சி.இயங்கி கொண்டிருந்தது. அப்போது ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்தது. விபத்துக்குள்ளான இடத்தின் அருகே பெட்ரோல் பங்க் இருந்துள்ளது.

தீயணைப்பு வீரர்கள் தக்க சமயத்திற்கு வந்து தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.