சேலம்,
S.K. சுரேஷ்பாபு.
காவிரி நீர் விவகாரம்: தமிழக எல்லை ஓசூரில் விவசாயிகள் அதிரடி போராட்டம். கர்நாடகா நோக்கிச் சென்ற நூற்றுக்கணக்கான தமிழக விவசாய பெருங்குடி மக்கள் கைது!
காவிரி நீரைத் திறக்கக் கோரி தமிழக எல்லையான ஓசூரில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் திரண்டதால் பரபரப்பு!
கர்நாடக அணை நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்ற விவசாயிகளைத் தடுத்து நிறுத்திய போலீசாருடன் தள்ளுமுள்ளு!
விதிகளை மீறிச் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் ஒட்டுமொத்தமாகக் கைது!
"தண்ணீர் தராவிட்டால் ₹1 லட்சம் கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடருவோம்" - அய்யாக்கண்ணு அதிரடி பேட்டி!*
"ஏரோட்டம் இல்லையென்றால் கோட்டையில் காரோட்டம் இல்லை" - தமிழக அரசுக்கு விவசாயச் சங்கத் தலைவர் வேலுசாமி எச்சரிக்கை!.
காவிரி நீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழக-கர்நாடக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இன்று பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது. இந்த ஆண்டுக்குரிய காவிரித் தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விடாததைக் கண்டித்து, தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு விவசாயிகள் சங்க அமைப்புகள் ஒன்றிணைந்து கர்நாடக எல்லையை நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்றனர். அப்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான தள்ளுமுள்ளைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம், இளம் விவசாயிகள் சங்கம், விவசாய முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல்வேறு விவசாய அமைப்புகள் இந்தத் தொடர் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.
காவிரியை நீர் ஆதாரமாகக் கொண்டுள்ள தமிழகத்தின் 22 மாவட்டங்களைச் சேர்ந்த பாசன விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் என நூற்றுக்கணக்கானோர் இன்று காலை ஓசூர் மூக்கண்டப்பள்ளி தோப்பு மாரியம்மன் கோவில் வளாகத்தில் திரண்டனர்.
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுசாமி தலைமையிலும், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிறுவனர் அய்யாக்கண்ணு முன்னிலையிலும் இப்பேரணி தொடங்கியது. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாகக் கர்நாடக மாநிலத்திற்குள் நுழைந்து, அங்குள்ள அணைகளை முற்றுகையிட்டுத் தண்ணீரைத் திறப்பதுதான் தங்களின் இலக்கு என முழக்கமிட்டவாறு விவசாயிகள் முன்னேறினர்.
இருப்பினும், பேரணி ஓசூர் இ.எஸ்.ஐ ரிங் ரோடு சாலை சந்திப்புப் பகுதியை அடைந்தபோது, அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு அரண் அமைத்து விவசாயிகளைத் தடுத்து நிறுத்தினர்.
இதனால் இருதரப்பிற்கும் இடையே கடுமையான வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. எல்லையைத் தாண்ட போலீஸ் அனுமதி மறுத்ததால், ஆத்திரமடைந்த விவசாயிகள் சாலையிலேயே அமர்ந்து கர்நாடக மற்றும் மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து, சாலையில் மறியலில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு, வேலுசாமி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான விவசாயிகளைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்து தனியார் மண்டபங்களில் தங்கவைத்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிறுவனர் அய்யாக்கண்ணு
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகா மாதா மாதம் தண்ணீர் திறந்து விட்டால், தமிழகத்தின் 28 மாவட்டங்களின் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும்; விவசாயிகளும் குறுவை, சம்பா, கோடை சாகுபடியைச் செய்ய முடியும். ஆனால், கர்நாடகா தண்ணீர் தராததால் டெல்டா பகுதியை வறட்சியாக்கி, அங்கிருந்து மீத்தேன், பெட்ரோல், டீசல் எடுக்க மத்திய அரசு வஞ்சிக்கிறது.
இங்கிருக்கும் தமிழக அரசோ, தண்ணீர் வராத நேரத்தில் மணல் விற்கப் பார்க்கிறது. ஏற்கனவே முசிறி முதல் வாத்தலை வரை மணல் அள்ளியதால் 50,000 தென்னை மரங்களும், காவிரி-கொள்ளிடம் கரைகளில் இருந்த லட்சக்கணக்கான பனை மரங்களும் காய்ந்து இயற்கையே அழிந்துவிட்டது. மீண்டும் அத்தகைய சூழலை உருவாக்கக் கூடாது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத கர்நாடக அரசுக்கு எதிராக நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளோம். விவசாயிகளுக்குக் ஏற்பட்ட இழப்பீடாக ₹1 லட்சம் கோடி நஷ்டஈடு வேண்டும், ஒரு விவசாயிக்கு ₹50,000 வழங்க வேண்டும் என மனுத் தாக்கல் செய்யவுள்ளோம். மேலும், கோதாவரி - காவிரி இணைப்பின் மூலம் 1,000 டிஎம்சி தண்ணீர் தருவதாகக் கூறிய வாக்குறுதியையும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை.
அமெரிக்காவில் ஒப்பந்தம் செய்து இறக்குமதி செய்யப்படும் மரபணு மாற்றப்பட்ட உணவுகளால் (GM Seeds) இளம்தலைமுறையினருக்குப் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதையெல்லாம் கண்டித்து எங்கள் போராட்டம் டெல்லியிலும் சென்னையிலும் தொடரும்.
அதேபோல தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுசாமி அளித்த பேட்டியில்,
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி கர்நாடகா தண்ணீர் தர மறுக்கிறது. இதுகுறித்துத் தமிழக அரசிடம் முறையிட்டால், செவிடன் காதில் சங்கூதியது போல மெத்தனமாக இருக்கிறது. விவசாயிகளின் கோரிக்கையைத் தற்போதைய அரசு முற்றிலும் மறந்துவிட்டது. அதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், எல்லையைத் தாண்டிச் சென்று அணைகளின் ஷட்டர்களை உடைத்தாவது தண்ணீரைத் திறக்க வேண்டும் என்ற நோக்கில் நாங்கள் வந்தோம். ஆனால், தமிழக அரசு தன் காவல்துறையை ஏவல்துறையாகப் பயன்படுத்தி விவசாயிகளின் குரல்வளையை நசுக்குகிறது.
விவசாயிகளை ஏளனமாக நினைக்கும் இந்த அரசுக்கு ஒன்று கூறிக்கொள்கிறோம்... 'விவசாயிகளின் ஏரோட்டம் இல்லை என்றால், கோட்டையிலே ஆட்சியாளர்களுக்குக் காரோட்டம் இல்லை'. வரும் தேர்தல்களில் அரசியல்வாதிகள் ஓட்டுக் கேட்டு வரும்போது விவசாயிகள் அவர்களை விரட்டியடிப்பார்கள். காவிரியிலிருந்து கொள்ளை லாபத்திற்காக மணல் அள்ளும் குவாரிகளைத் திறக்க அரசு முயன்றால், விவசாயிகள் சங்கம் அதற்குப் பூட்டுப் போடும் மூடுவிழாவை நடத்தும் என எச்சரிக்கிறோம்.
கர்நாடக அரசிடமிருந்து உரிய காவிரித் தண்ணீரைப் பெற்றுத் தரக் கோரியும், காவிரிப் படுகையில் மணல் அள்ளக் கூடாது என வலியுறுத்தியும் எல்லையில் விவசாயிகள் நடத்திய இந்தப் போராட்டம் ஓசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைதான விவசாயிகள் தங்களின் போராட்டம் ஓயாது என்றும், அடுத்தகட்டமாகச் சென்னை மற்றும் டெல்லியில் பெருந்திரள் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.
அய்யாக்கண்ணு, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிறுவனர்
வேலுசாமி, மாநிலத் தலைவர், உழவர் பேரியக்கதலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.