சேலம்,
S.K. சுரேஷ்பாபு.
சேலம் குமரகிரி அருள்மிகு ஸ்ரீ பூரணி ஸ்ரீ புஷ்கலா சமேத ஸ்ரீ ஐயனாரப்பன் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.
எல்லாம் வல்ல 'உமையொருபாகன்' அருளால், சேலம் மாவட்டம் குமாரகிரி பைபாஸ் சர்வீஸ் சாலையில் அமைந்துள்ள இக்கோயிலில், பக்தி, கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தில் சிறந்து விளங்கும் 'அம்மாபேட்டை ஊர் உடையார்' மற்றும் பிற சமுதாயத்தினரின் துணையோடு, வேண்டுவோருக்கு வேண்டிய வரங்களையும் அருளையும் வழங்கி நம் அனைவரையும் காத்து அருளும் வகையில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மங்களகரமான ஸ்ரீ சுபமங்கள விநாயகர், ராகு, கேது மற்றும் மதிப்பிற்குரிய ஸ்ரீ பூரணி புஷ்கலா சமேத ஸ்ரீ ஐயனாரப்பன் சுவாமி திருக்கோயில், சிற்ப சாஸ்திர முறைப்படி திருப்பணிகள் நிறைவு செய்யப்பட்டு, வேத சிவாகம முறைப்படி மகா கும்பாபிஷேகம் நடத்துவதற்கான தெய்வீக அருளாற்றல் திரட்டப்பட்டு இந்நிகழ்வு மங்களகரமான 'பராபவ' ஆண்டில் நடைபெற்றது.
சஷ்டி திதி, அனுஷம் நட்சத்திரம் மற்றும் சித்த யோகம் கூடிய நன்னாளில், காலை 9:15 மணி முதல் 10:15 மணிக்குள், துலாம் லக்னத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்படி கடந்த 15ஆம் தேதி காலை 9:30 மணிக்கு மங்கள இசை, விநாயகர் வழிபாடு, புண்ய கவஜனம், பஞ்சகவ்யம், அனுமதி பெறுதல், ஸ்ரீ மஹா கணபதி ஹோமம், ஸ்ரீ லக்ஷ்மி ஹோமம் நடைபெற்றன.
இரண்டாம் கால யாகவேள்வி, நாடிசந்தானம், திருவ்யாஹுதி, பூர்ணாஹுதி, விமான கோபுர கலசப் பிரதிஷ்டை ஆகியன நடைபெற்றது. தொடர்ந்த அருள்பாலிக்கும் ஸ்ரீ சுபமங்கள விநாயகர், ராகு, கேது சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் கோலாகலமாகவும் வெகு விமர்சையாகவும் நடைபெற்றன. பின்னர் ஸ்ரீ பூரணி மற்றும் ஸ்ரீ புஷ்கலா சமேத ஸ்ரீ ஐயனாரப்ப சுவாமிக்கு மகா கும்பாபிஷேகமும் சிறப்பு அன்னதானம் நடைபெற்றன.
கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மாணிக்கம், விஜயகுமார், சுரேஷ்குமார், பரமசிவம், டாக்டர்.மோகன்ராஜ், ஸ்ரீதரன், ஸ்ரீஷாந்த், அருணாசலம் உள்ளிட்டோர் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.


