சேலம்,
S.K.சுரேஷ்பாபு.
சேலம் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா. 1088 மாணவ மாணவிகளுக்கும், ஆறு முனைவர் பட்ட பேராசிரியர்களுக்கும் பட்டங்களை வழங்கி பாராட்டு.
சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா
சேலம் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஐந்தாவது பட்டமளிப்பு விழா கல்லூரியின் வள்ளியப்பா கலையரங்கக் கூடத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சோனா கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு. சொ .வள்ளியப்பா அவர்கள் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் திரு.சொக்கு வள்ளியப்பா, திரு.தியாகு வள்ளியப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதல்வர் முனைவர் கு.மை காதர் நவாஸ் அவர்கள் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக சிட்டி யூனியன் வங்கி மேலாண் இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் விஜய் ஆனந்த் அவர்கள் 2022-2025 ஆம் கல்வியாண்டில் பயின்ற 1088 மாணவர்களுக்கும், ஆறு முனைவர் பட்ட பேராசிரியர்களுக்கும் பட்டங்களை வழங்கி பாராட்டுகளையும் தெரிவித்தார்.
சோனா கல்வி நிறுவனங்களின் தலைவர் வள்ளியப்பா அவர்கள் பேசும் பொழுது "மனிதனின் அறிவை வளர்த்து அவனுக்கு நல்ல ஒழுக்கத்தையும், திறமையையும் தந்து முழுமையான மனிதனாக மாற்றும் ஒரு அரும்பெரும் கருவி கல்வி ஆகும்" அந்த கல்வியை நன்முறையில் பயன்படுத்தி நல்சமுதாயத்தை உருவாக்க காத்திருக்கும் மாணவர்களுக்கு வாழ்த்துகள் என வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார். சோனா கல்வி நிறுவனங்களின் சார்பில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக முதல் மதிப்பெண் பெற்ற 6 மாணவர்களுக்கு தலா ரூ.10000/- இரண்டாம் இடம் பெற்ற 9 மாணவர்களுக்கு தலா ரூ.5000/- மூன்றாம் இடம் பெற்ற 6 மாணவர்களுக்கு தலா ரூ.4000/- மற்ற தர வரிசை பெற்ற மாணவர்களுக்கு தலா ரூ.3000/- என மொத்தம் ரூபாய் 2,25,000 வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பல்கலைக்கழக அளவில் உயிர் தொழில் நுட்பவியல் மற்றும் காட்சித்தொடர்பியல், உளவியல், கணக்கியல் மற்றும் நிதியியல், வணிகவியல், வணிக மேலாண்மை, ஆகிய துறை மாணவர்கள் என மொத்தம் 6 தங்கப்பதக்கங்கள் பெற்று சாதனை படைத்தனர். தொடர்ந்து ஐந்தாவது முறையும் உயிர் தொழில் நுட்பவியல் துறை சார்ந்த மாணவர்கள் , காட்சித்தொடர்பியல் மாணவர்கள் தங்கப்பதக்கம் மற்றும் முதல் பத்து இடங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.பல்கலைக்கழக அளவில் தர வரிசையில் சிறப்பிடம் பெற்ற 53 மாணவர்களுக்கு சோனா கல்வி நிறுவனங்களின் சார்பில் தங்கப் பதக்கம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. மேலும் தர வரிசையில் இடம் பெற ஊன்றுகோலாய் இருந்த துறைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது.
2022-2025 ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்கள் அனைவரும் 100% தேர்ச்சி பெற்றதுடன் பட்டம் பெற்ற மாணவர்களும் தனிச்சிறப்புடன் கூடிய முதல்நிலை பெற்று சாதனை படைத்துள்ளனர் என்பது போற்றுதலுக்குரியது. பட்டமளிப்பு விழாவின் நிறைவாக கல்லூரியின் முதல்வர் உறுதிமொழி வாசிக்க தாங்கள் கற்ற கல்வி நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் பயன்படும் வகையில் என்றும் உறுதியுடன் செயல்படுவோம் என்று மாணவர்கள் உறுதி மொழி ஏற்றனர்.


