செவ்வாய், 2 ஜனவரி, 2024

விபத்தில் இருவர் உயிரிழப்பு: ஈரோடு அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் சிக்கண்ணா கல்லூரி சாலை எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 30). டெய்லரான இவர் தனது மனைவி சுபாஷினி (வயது 24), மகன் இனியன் (வயது 3) மற்றும் 6 மாத குழந்தையுடன் செவ்வாய்க்கிழமை (நேற்று) அதிகாலை சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி ஓம் சக்தி கோவிலுக்கு மாலை போடுவதற்காக புறப்பட்டு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

இருசக்கர வாகனத்தில் 3 வயது குழந்தை பெட்ரோல் டேங்க் மேல் அமர வைத்தும், மனைவி மற்றும் 6 மாத குழந்தை பின்னால் அமர்ந்த படியும் சென்றனர். அப்போது,கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சித்தோடு அடுத்த பேரேடு பிரிவு அருகே சென்றபோது பின்னால் இருந்து வந்த அடையாளம் தெரியாத ஒரு வாகனம் திடீரென இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது.

இதில், இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட மணிவண்ணன், அவருடைய மகன் இருவரும் இடதுபுறமாக சாலையில் விழுந்தனர். வலதுபுறமாக சுபாஷினியும், அவருடைய கையில் வைத்திருந்த 6 மாத குழந்தையும் விழுந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தின் மீது மோதிய வாகனத்தின் சக்கரம் சுபாஷினியின் தலையில் ஏறி இறங்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். மேலும், சாலையில் விழுந்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தது.

இதுகுறித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த சித்தோடு போலீசார், காயமடைந்த மணிவண்ணன், அவருடைய 3 வயது குழந்தை இனியன், உயிரிழந்த சுபாஷினி மற்றும் 6 மாத குழந்தை உடல்களை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இவ்விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர் .

இந்நிலையில், இருவரின் உயிரிழப்புக்கு காரணமான அடையாளம் தெரியாத வாகனத்தை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கூறி அவர்களது உறவினர்கள் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
இதனையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சமாதானப்படுத்தி, உயிரிழந்த மனைவி சுபாஷினி மற்றும் 6 குழந்தையின் சடலங்களை அவர்களிடம் ஒப்படைத்தனர். மேலும், ஈரோடு தலைமை அரசு மருத்துவமனையில், காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த இனியனையும், தங்களது பகுதியில் இருக்கும் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: