S.K.சுரேஷ்பாபு.
சேலத்தில் புராண நிகழ்வை நினைவு படுத்தும் மயான கொள்ளை நிகழ்ச்சி......அம்மனின் வேடம் தரித்த பக்தர்கள் ஆடு மற்றும் கோழிகளின் ரத்தத்தை பருகி ஆவேச நடனத்துடன் பக்திப்பரவசம்.
தமிழ் மாதங்களில் வரும் மாசி மாதம் அங்காளம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இதனால் அங்காளம்மனின் பிறப்பிடமாக கருதப்படும் மேல்மலையனூர் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து அங்காளம்மன், பெரியாண்டிச்சி மற்றும் பேச்சாயியம்மன் உள்ளிட்ட கோவில்களில் மாசித்திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அங்காளம்மனின் புராண நிகழ்வினை நினைவு படுத்து விதமாக நடத்தப்படும் இந்த விழா, நேற்று முன்தினம் சக்தி அழைத்தளுடன் தொடங்கியது.
மஹாசிவராதிரியான அன்று நள்ளிரவு முகம்வெட்டு கப்பரை நிகழ்ச்சியும், தொடர்ந்து காலை காலை சக்தி கரகம் எடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயானக்கொள்ளை நிகழ்ச்சி சேலத்தில் உள்ள அனைத்து அங்காளம்மன் ஆலையங்களிலும் நடைபெற்றது. இதற்காக கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக விரதம் இருந்த பக்தர்கள், அம்மனின் வேடம் தரித்து, அதற்கென்ற பிரத்த்யேக உடையணிந்தும், மயில் இறகுகளால் ஆன அலங்காரங்களுடன், பக்திப்பரவசத்துடன், சிறப்பு பூஜைகளை மேற்கொண்டனர்.
இதனையடுத்து கோவில்களை விட்டு வெளியே வந்த பக்தர்கள், பம்பை மேள இசைக்கு ஏற்றவாறு, ஆவேசத்துடனும், பரவசத்துடனும் நடனமாடியது பார்வையாளர்களை மெய்சிலிர்க்கும் விதமாகவும், மிரட்சியை ஏற்படுத்தும் விதமாகவே அமைந்திருந்தது. தொடர்ந்து பல்வேறு நேர்த்திக்கடனுக்காக, பக்தர்கள் வழங்கிய ஆடு மற்றும் கோழிகளை பலிவாங்கி, அதன் ரத்தங்களை பருகியவாறு, முக்கிய வீதிகளின் வழியாக, சேலம் ஜான்சன்பேட்டையில் உள்ள மயானத்திற்கு விரைந்தனர்.
அங்கு அம்மனுக்கு பல்வேறு விஷேச பூஜைகளை மேற்கொண்டு சுடுகாட்டு சாம்பலை சூறைவிட்டு தங்களது விரதத்தை முடிக்கும் அம்மனின் வேடம் தரித்தவர்கள், மயானத்தில் வழங்கும் பிரசாதங்களை உட்கொண்டால் திருமண மாகாதவர்களுக்கு திருமணம் ஆகும், குழந்தைபேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் ஏராளமான பக்தர்கள் மயானங்களில் குவிந்தனர்.
இந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமாக நடத்தினாலும் சேலத்தில் மட்டுமே புராண நிகழ்வை நினைவு படுத்தும் விதமாக தத்ரூபமாக நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பக்திப்பரவசத்துடன் செல்லும் பக்தர்களால் பொதுமக்களுக்கு எந்த விதமான அசம்பாவிதங்களும் நிகழ்ந்து விடக்கூடாது என்ற அடிப்படையில் பலத்த காவல்துறை பாதுகாப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மயானக்கொள்ளை நிகழ்ச்சியின் காரணமாக ஆடு மற்றும் கோழி ஆகியவற்றின் விலையில் இருந்து கனிசமாக உயர்ந்திருந்தது.
மொத்தத்தில் ஐதீகம், நம்பிக்கை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, அங்காளஅம்மனின் புராண நிகழ்வினை நினைவு படுத்தும் விதமாக இன்று சேலத்தில் நடத்தப்பட்ட மயானக்கொள்ளை நிகழ்ச்சி, பக்தர்களையும், பொதுமக்களையும் பரவசப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் பார்வையாளர்களை மிரட்சியடைய வைக்கும் விதத்தில் அமைந்திருந்தது என்பது மட்டும் நிதர்சனம்.
0 coment rios: