ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. தற்போது வனப்பகுதி முழுவதும் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால், வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் படை எடுத்து வருவது வாடிக்கையாகி உள்ளது.
இந்நிலையில், சத்தியமங்கலம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பண்ணாரி பிரிவு வடவள்ளி பீட் பிரிவு புதுக்குய்யனூர் என்ற இடத்தில் வனத்துறையினர் நேற்று (11ம் தேதி) காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு கீழே படுத்து கிடந்தது.
அதன், அருகில் 2 வயது குட்டி யானை ஒன்று சுற்றி சுற்றி பிளறிக் கொண்டிருந்தது. இதைக் கண்ட, வனத்துறையினர் கால்நடை மருத்துவக் குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மருத்துவக் குழுவினர் படுத்து கிடக்கும் தாய் யானைக்கு குளுகோஸ் ஏற்றி யானையை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, நேற்று மாலை குட்டி யானையை மீட்டு பராமரித்து வந்த வனத்துறையினர் அதன் யானைக் கூட்டத்துடன் சேர்க்கப்பட்டதாகக் கூறினர். இதையடுத்து, இந்த குட்டி யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், பண்ணாரி சாலையில் யானைக் கூட்டத்துடன் குட்டி யானை சாலையைக் கடந்து சென்றதை உறுதி செய்தனர்.
இந்நிலையில், தாய் யானைக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி யானை நேற்று இரவு சுமார் 10 மணியளவில் உயிரிழந்தது. இதனையடுத்து, இன்று யானையின் உடல் கால்நடை மருத்துவக் குழுவினரால் உடற்கூறாய்வு செய்யப்பட்டு அந்த பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.
கடந்த மாதம் பண்ணாரி வனப் பகுதியில் உடல் நல குறைவால் பெண் யானை ஒன்று இறந்து போனது. அதே போன்று, கடந்த சில நாட்களுக்கு முன்பு கடம்பூரில் ஒரு யானை இறந்து போனது. தற்போது ஒரு பெண் யானை உயிரிழந்தது. தொடர்ச்சியாக யானைகள் இறந்து போகும் நிகழ்வு வன ஆர்வலர்லகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
யானைகள் இறப்புக்கு வனத்துறையினரின் கவன குறைவே காரணம் என்றும், இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகள் முழுமையான விசாரணை மேற்கொண்டு யானைகள் இறப்பை தடுக்க வேண்டுமெனவும் வறட்சி நிலவும் பகுதிகளில் வன விலங்குகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டுமென்றும் சுற்று சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
0 coment rios: