புதன், 29 மே, 2024

பெருந்துறை அருகே பதுக்கி வைத்திருந்த 150 கிலோ கஞ்சா பறிமுதல்: மூவர் கைது

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவர் மகன் ரவி (எ) ரவிச்சந்திரன் (வயது 29). இவர் மீது ஈரோடு உட்கோட்ட பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ள நிலையில், ரவிச்சந்திரனை ஈரோடு போலீசார் தேடி வந்தனர்.‌

இந்நிலையில், பெருந்துறை அடுத்த வெள்ளோடு அருகே புங்கம்பாடி சாணார்பாளையம் பகுதியில் ரவிச்சந்திரன் தங்கி இருப்பதாக ஈரோடு கிரைம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.


தகவலின் பேரில், போலீசார் சாணார்பாளையம் பகுதியில் தேடி வந்தனர். அங்குள்ள ஒரு வீட்டில் ரவிச்சந்திரன் தங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. அந்த வீட்டை போலீசார் முற்றுகையிட்டனர். அப்போது ரவிச்சந்திரனை போலீசார் பிடித்து விசாரித்ததுடன் வீட்டையும் சோதனையிட்டனர்.

வீட்டிற்குள் சுமார் 75 பண்டல்களில் 150 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.‌ இதன் மதிப்பு ரூ.40 லட்சம் ஆகும். இதனையடுத்து, கஞ்சா மூட்டைகளை ஈரோடு மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டி.எஸ்.பி சண்முகம் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்து ரவிச்சந்திரனை கைது செய்தனர்.

தொடர்ந்து, ரவிச்சந்திரனுடன் அந்த வீட்டில் இருந்த அவரது தம்பி சங்கர் (வயது 25) மற்றும் ஈரோட்டை சேர்ந்த சூர்யா (வயது 24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், இதுதொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: