திங்கள், 1 ஜூலை, 2024

ஈரோடு மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.7.68 லட்சத்தில் நலத்திட்ட உதவி

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (1ம் தேதி) நடைபெற்றது.

இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மொத்தம் 368 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார்.

மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர் பெருமக்களின் முகாம் மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, பல்வேறு நிகழ்வுகளினால் உயிரிழந்தவர்களின் 7 வாரிசுதார்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியாக தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.7 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தின் மூலம் இயற்கை மரணம், ஈமச்சடங்கு உதவித்தொகையாக 4 நபர்களுக்கு தலா ரூ.17 ஆயிரம் வீதம் ரூ.68 ஆயிரத்துக்கான காசோலைகளையும் என மொத்தம் ரூ.7.68 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரும், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) (பொ) ராஜகோபால், உதவி ஆணையர் (கலால்) ஜீவரேகா, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தர்மராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: