சனி, 28 டிசம்பர், 2024

பவானி: அம்மாபேட்டை அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்ற வாலிபர் மின்னல் தாக்கி உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்தது. நேற்று முன்தினம் (டிச.26) இரவு 10 மணிக்கு சாரல் மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று (டிச.27) மதியம் 2 மணி அளவில் 1 மணி நேரம் கனமழை பெய்தது. தொடர்ந்து, மாலை முதல் இரவு வரை சாரல் மழை நீடித்தது.

இந்தநிலையில், ஜரத்தல் பகுதியில் இடி-மின்னல் தாக்கியதில் வாலிபர் ஒருவர் இறந்தார். அவருடைய பெயர் கவின் குமார் (வயது 25). ஈரோடு அருகே உள்ள திண்டல் திருமலை கார்டன் பகுதியை சேர்ந்த ராமதுரை மகன் ஆவார். இவர், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று அம்மாபேட்டை அருகே உள்ள ஜரத்தல் பகுதியில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்விற்காக தனது குடும்பத்தினருடன் ஈரோட்டில் இருந்து காரில் சென்றார். ஜரத்தல், காட்டுக்கொட்டாய் பகுதியில் உள்ள உறவினர் வீட்டின் அருகே காரை நிறுத்திவிட்டு இறங்கி நடந்து சென்றுள்ளார்.

காரை விட்டு இறங்கி சிறிது தூரம் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த பகுதியில் பெய்த லேசான சாரல் மழையில் தாக்கிய இடி-மின்னல் காரணமாக கவின்குமார் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.

இதனையடுத்து, அவரது உறவினர்கள் மற்றும் பெற்றோர் அதே காரில் மயங்கி விழுந்த கவின் குமாரை ஈரோட்டில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு கவின் குமாரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். துக்க நிகழ்ச்சிக்கு சென்றவர் மின்னல் தாக்கி உயிரிழந்தது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து குறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த கவின்குமார் உடலை கைப்பற்றி ஈரோடு அரசு தலைமை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறன்றனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: