வெள்ளி, 11 ஏப்ரல், 2025

பவானி நதி மாசுபடுவதை தடுக்க கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும்: ஈரோட்டில் பவானி நதி கூட்டு இயக்கத்தினர் அமைச்சரிடம் மனு!

பவானி நதி மாசுபடுவதை தடுக்க கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்று ஈரோட்டில் பவானி நதி கூட்டு இயக்கத்தினர் அமைச்சரிடம் மனு அளித்தனர்.
ஈரோட்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமியை இன்று பவானி நதி கூட்டு இயக்கத்தினர் சந்தித்து மனு கொடுத்தனர்.

அதில், அவர்கள் கூறியிருப்பதாவது, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் என 4 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாக பவானி நதி விளங்கி வருகிறது. இந்த நதி நீரை பல லட்சக்கணக்கான மக்கள் குடிநீராகவும், வேளாண்மைக்கும், கால்நடைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

ஜீவ நதியான பவானி நதி நீர், ஆலைக் கழிவுகளால் மாசடைந்து தண்ணீர் நிறம் மாறி, துர்நாற்றம் வீசி வந்தது. இந்த நீரை பயன்படுத்தும் பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கும் ஆளானார்கள். தமிழ்நாட்டிலேயே புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள மாவட்டங்களில் உள்ள ஒன்றாக ஈரோடு மாவட்டமும் மாறி வருகிறது.

இந்நிலையில், பவானி நதியை பாதுகாக்க சத்திய மங்கலத்தில் அனைத்து கட்சி மற்றும் பொதுநல அமைப்புகள் ஒன்று கூடி, 2023-ம் ஆண்டு பவானி நதி பாதுகாப்பு கூட்டியக்கம் தொடங்கப்பட்டது.

இந்த அமைப்பு, 2023-ம் ஆண்டு ஜூன் 5, உலக சுற்றுச்சூழல் தினத்தில் 10 ஆயிரம் பேர், பவானிசாகரில் கூடி, ஆலைக்கழிவுகளால் பவானி நதிநீர் மாசடைவதை கண்டித்து, மாபெரும் போராட்டத்தை பவானிசாகரில் நடத்தியது.

சமீப நாட்களுக்கு முன் கோவை மாவட்டம், சிறுமுகை மற்றும் ஆலாந்துறை பகுதியில் நீரின் நிறம் ஆரஞ்சு நிறமாக மாறியதையும், கோவை மாவட்ட நிர்வாகம் குடி நீரை பயன் படுத்துவதை தடை செய்தது.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி மீண்டும் பவானிசாகரில் ஒரு கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்தினர். இந்நிலையில், அணையில் நீர்மட்டம் குறைந்துள்ள கடந்த சில தினங்களாக, மீண்டும் பவானி நதிநீர் ஆரஞ்சு நிறமாக மாறி துர்நாற்றம் வீசுகிறது.

ஆகவே, பவானி நதி நீரை மாசு ஏற்படுத்தும் ஆலைகள் மற்றும் நகராட்சி, உள்ளாட்சிகளின் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இப்பணிகளை மாதம்தோறும் கண்காணிக்க நீர்வளத்துறை, வருவாய்த் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், பொதுநல அமைப்பு பிரதிநிதிகள் அடங்கிய கண்காணிப்பு குழுவை ஏற்படுத்த வேண்டும்.

கண்காணிப்பு குழுவை அமைக்க, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அரசாணை இருப்பதையும், ஏற்கனவே கோவை மாவட்டத்தில் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டதையும் தங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: