சனி, 17 மே, 2025

சத்தியமங்கலம் வட்டத்தில் வட்டத்தில் வரும் மே.21ம் தேதி 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம்!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டத்தில் வரும் மே.21ம் தேதி 'உங்களைத் தேடி உங்கள் ஊரில் ' திட்ட முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டத்தினை அறிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் படி, ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன் கிழமை ஒரு நாள் வட்ட அளவில் தங்கி, களஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் சேவைகளும், தங்குதடையின்றி மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

இதன்படி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான இதர உயர் அலுவலர்கள் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டத்தில் வருகிற மே 21ம் தேதி காலை 9 மணிமுதல் மறுநாள் (22ம் தேதி) காலை 9 மணி வரை தங்கி, பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் (சேவைகள்) ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து களஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

கள ஆய்வின்போது பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் மேம்பட்ட சேவைகள் வழங்குதல் மற்றும் திட்டங்களை விரைவுப்படுத்துதல் தொடர்பாக உரிய தீர்வு காண்பார். மேலும், 21ம் தேதி அன்று மாலை 4.30 மணிமுதல் 6 மணிவரை சத்தியமங்கலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற உள்ளார்.

எனவே, அரசின் சேவைகளை எளிதாகவும், விரைவாகவும் பெற்றிட ஏதுவாக இந்த முகாமினை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: