புதன், 14 மே, 2025

பெருந்துறையில் மக்களுடன் முதல்வர் திட்ட 3ம் கட்ட சிறப்பு முகாம்: 157 பயனாளிகளுக்கு ரூ.8.97 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்கள்!

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்திற்குட்பட்ட துடுப்பதி, நிச்சாம்பாளையம், பாண்டியம்பாளையம், ஈங்கூர், கூத்தம்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் இன்று (மே.14) மக்களுடன் முதல்வர் திட்டத்தின் 3ம் கட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இந்த முகாம்களை வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர்.மா.மதிவேந்தன் ஆகியோர் தொடங்கி வைத்து, 157 பயனாளிகளுக்கு ரூ.8.97 லட்சம் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

ஈரோடு மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் 3ம் கட்ட திட்டத்தின் கீழ் நடைபெற்ற சிறப்பு முகாம்கள் துவங்கப்பட்டது. மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 70 கிராம ஊராட்சிகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் 70 சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.

அந்த வகையில், பெருந்துறை வட்டத்தில் துடுப்பதி ஊராட்சி, சின்னமல்லாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, நிச்சாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பாண்டியம்பாளையம் ஊராட்சி, குஞ்சரைமடை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, ஈங்கூர் தம்பிராட்டியம்மன் திருமண மண்டபம், கூத்தம்பாளையம் ஊராட்சி அக்கரயாம்பாளையம் கன்னிமார் காலியம்மன் கோவில் திருமண மண்டபம் ஆகிய இடங்களில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமினை அமைச்சர்கள் முத்துசாமி, மதிவேந்தன் ஆகியோர் பார்வையிட்டு, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டனர்.


தொடர்ந்து, புதிய மின்னணு குடும்ப அட்டைகள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்கள். இலவச வீட்டுமனை பட்டா வரன்முறை படுத்துதல், உட்பிரிவு பட்டா, தொழிலாளர் நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு நலவாரிய அட்டை, மின் இணைப்பு பெயர் மாற்றம், கூட்டுறவுத்துறையின் சார்பில் பல்வேறு கடனுதவிகள், மேலும், இன்று மனுக்கள் வழங்கியவர்களுக்கு உடனடி தீர்வாக மின் இணைப்பு பெயர் மாற்றம் ஆணை, பதிவு அட்டை மற்றும் புதிவு அட்டை புதுப்பித்தல் ஆணை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் விலையில்லா சலவைப் பெட்டி என 157 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சத்து 97 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ப.கந்தராஜா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) லோகநாதன், இணை இயக்குநர் (வேளாண்மை) தமிழ்ச்செல்வி, துணை இயக்குநர் (சுகாதாரம்) அருணா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமாசங்கர். தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ். மாவட்ட மேலாளர் (தாட்கோ) அர்ஜூன், பெருந்துறை வட்டாட்சியர் ஜெகநாதன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: