திங்கள், 19 மே, 2025

ஈரோடு மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, குறைகளைக் கேட்டறிந்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்!

ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் இன்று (மே.19) நடைபெற்றது. இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை, கலைஞரின் கனவு இல்லம், அடுக்குமாடி குடியிருப்பில் வீடு, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், ஆக்கிரமிப்பு மற்றும் காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் என மொத்தம் 250 மனுக்கள் வரப்பெற்றன.

பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், அந்தியூர் வட்டம், கெட்டிசமுத்திரம் ஜெ.ஜெ.நகர் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் நீரில் மூழ்கி இறந்தமைக்கு, அவரின் தாயாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.


அதனைத் தொடந்து, தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல் 30 முதல் மே 05 வரை அரசு அலுவலர்களிடையே நடைபெற்ற தமிழ் வார விழா போட்டியில் கையெழுத்து, அறிவியல் தமிழ், கணினித்தமிழ் குறித்த வினாடி வினா, பேச்சுப்போட்டி, கவிதை வாசிப்பு, படம் பார்த்து கதை சொல்லும் போட்டி, அலுவலகக் குறிப்புகள் வரைவுகள் எழுதுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பங்கேற்று வெற்றி பெற்ற 27 அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி, வாழ்த்து தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜகோபால், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: