சனி, 10 மே, 2025

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தொழிலாளியின் தொண்டையில் சிக்கிய 'சேப்டி பின்' அகற்றம்!

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தொழிலாளியின் தொண்டையில் சிக்கி இருந்த 'சேப்டி பின்' வெற்றிகரமாக அகற்றப்பட்டது.
ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 47). இவர் நேற்று மதியம் 'சேப்டி பின்' ஒன்றை வாயில் வைத்திருந்தபோது எதிர்பாராதவிதமாக விழுங்கி விட்டார். அது தொண்டைக்குள் சிக்கியதால் வலி தாங்க முடியாமல் அவர் அலறி துடித்தார்.

இதைத் தொடர்ந்து, அவரது தாயார் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து கொண்டு சென்றனர். தொடர்ந்து, கன்னியப்பனுக்கு உடனடியாக எக்ஸ்ரே பரிசோதனை செய்யப்பட்டது. அதில் தொண்டைக்குழிக்கு கீழே அந்த சேப்டிபின் விரிந்த நிலையில் மாட்டிக்கொண்டு இருப்பதாக கண்டறியப்பட்டது.

அதைத் தொடர்ந்து, காது, மூக்கு தொண்டை நிபுணர் மருத்துவர் ஸ்ரீதர் தலைமையிலான மருத்துவ குழுவினர் சுமார் 4 மணி நேரம் போராடி தொண்டை உள்நோக்கி கருவியின் (எண்டோஸ்கோப்பி) மூலம் தொழிலாளியின் தொண்டை குழாயில் எந்தவித பாதிப்புமின்றி 'சேப்டி பின்'னை வெளியே எடுத்தனர். தற்போது அவர் நலமாக உணவு உட்கொள்கிறார்.

மேலும், தனியார் மருத்துவமனைகளில் ரூ.30 ஆயிரம் வரை இந்த சிகிச்சைக்கு செலவு ஆகக்கூடிய நிலையில், ஈரோடு தந்தை பெரியார் அரசு தலைமை மருத்துவமனையில் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: