வெள்ளி, 18 ஏப்ரல், 2025

ஈரோட்டில் மாயமான ஆப்பிரிக்கன் கிளியை தேடி அலைந்த தொழில் அதிபர்!

ஈரோட்டில் மாயமான ஆப்பிரிக்கன் கிளியை தேடி அலைந்த தொழில் அதிபர்!

ஈரோட்டை சேர்ந்தவர் சதீஸ். தொழில் அதிபர். இவர் ஆப்பிரிக்கன் கிரே பேரட் என்ற சாம்பல் நிற கிளியை வளர்த்து வந்தார். இந்த கிளி கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானது. அந்த கிளியை அவர் தேடியும் கிடைக்காததால் தவித்து போன அவர், கிளியை கண்டுபிடித்து கொடுத்தால் சன்மானம் வழங்கப்படும் என்று போஸ்டர் ஒட்டினார்.

இந்தநிலையில், அவரது வீட்டுக்கு அருகில் உள்ள கோவில் மரத்தில் தான் வளர்த்து வந்த கிளி இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். அந்த கிளி உரிமையாளரை கண்டதும் தோளில் வந்து அமர்ந்த கிளியை அவர் மீட்டு கொஞ்சினார். தற்போது, அவரிடம் கிளி பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஈரோடு திண்டலில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் 180 அடி உயர முருகன் சிலை: சட்டப்பேரவையில் அறிவிப்பு!

ஈரோடு திண்டலில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் 180 அடி உயர முருகன் சிலை: சட்டப்பேரவையில் அறிவிப்பு!

ஈரோடு மாவட்டம் திண்டலில் வேலாயுதசுவாமி என்னும் முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு ஆண்டு முழுவதும் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, சாமியை தரிசித்து செல்கின்றனர். மேலும், இக்கோவில் நகர மையத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது. இந்த நிலையில், இக்கோவிலில் உயரமான முருகன் சிலை அமைக்க வேண்டும் என்ற ஈரோடு மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையினை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர், தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். 
இதன் அடிப்படையில், இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில் இக்கோவிலில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் புதியதாக 180 அடி உயர முருகன் சிலை மற்றும் ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் மலைப்பாதைக்கு செல்வதற்கு புதியதாக படிவழிப்பாதை அமைக்கப்படும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது ஈரோடு மாவட்டத்திற்கு மேலும் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.

மேலும், இக்கோவிலில் அன்னதானத் திட்டத்தில் தினசரி 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் அதிக அளவில் வருவதை கருத்திற் கொண்டு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள், அமாவாசை நாட்கள், மாத சஷ்டி மற்றும் கிருத்திகை நாட்களில் 200 பக்தர்களுக்கும், கந்த சஷ்டித் திருவிழா நடைபெறும் நாட்களில் நாள் ஒன்றுக்கு 500 பக்தர்களுக்கும் விரிவுபடுத்தி அன்னதானம் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
பவானியில் மரக்கன்றுகள் நடும் விழா, விழிப்புணர்வு முகாம்: ஆட்சியர், முதன்மை மாவட்ட நீதிபதி துவக்கி வைத்தனர்!

பவானியில் மரக்கன்றுகள் நடும் விழா, விழிப்புணர்வு முகாம்: ஆட்சியர், முதன்மை மாவட்ட நீதிபதி துவக்கி வைத்தனர்!

பவானியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்திய மரக்கன்றுகள் நடும் பெருவிழா மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, முதன்மை மாவட்ட நீதிபதி பி.முருகேசன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே காடையாம்பட்டியில் உள்ள தனியார் மஹாலில் ஈரோடு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்திய மரக்கன்றுகள் நடும் பெருவிழா மற்றும் விழிப்புணர்வு முகாம் இன்று (ஏப்ரல் 18) நடைபெற்றது. இதனை, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, முதன்மை மாவட்ட நீதிபதி பி.முருகேசன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இந்த விழாவில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்ததாவது, ஈரோடு மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 5,200 சதுர கிலோமீட்டர். 5,200 சதுர கிலோமீட்டரில் 39 சதவீதம், அதாவது கிட்டத்தட்ட 2,000 சதுர கிலோமீட்டர் வனப்பகுதியாக உள்ளது.


நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் நகரமயமாக்கல் காரணமாக மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதற்காக தமிழ்நாடு அரசு பசுமை தமிழ்நாடு இயக்கம் என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி ஒவ்வொரு ஆண்டும் மரங்களை நடுவதற்கு இலக்கினை நிர்ணயித்து, அனைத்து மாவட்டங்களும் இலக்கினை எய்திட அறிவுறுத்தி வருகிறது.

அந்த வகையில், ஈரோடு மாவட்டத்திற்கு 2024-25ம் ஆண்டு 10 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. அதேபோல நடப்பாண்டிற்கு 4 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இலக்கினை எய்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் இத்திட்டத்தின் நோக்கம் மரக்கன்றுகளை நடுவது மட்டுமல்லாமல், அதனை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மரங்களுக்கு நாள்தோறும் தண்ணீர் விடுவதற்கும், கம்பி வேலி அமைத்து பாதுகாப்பதற்கும் எங்கெங்கே வாய்ப்புகள் உள்ளதோ அங்கே மரங்களை நடும் பொழுது, அதனை நல்லமுறையில் வளர்த்து பாதுகாப்பதற்கான வாய்ப்புகளும் அதிகளவில் உள்ளது.


ஒவ்வொரு மாவட்டமும் வளர்ச்சி அடைந்தால் தான் நாடும் வளர்ச்சி அடையும். எனவே மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து அலுவலர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார். 

தொடர்ந்து, முதன்மை மாவட்ட நீதிபதி பி.முருகேசன் தெரிவித்ததாவது, சென்னை உயர்நீதிமன்றம் இரண்டு நாட்கள் மரக்கன்றுகள் நடவேண்டும் என்றும், ஒரு நாளைக்கு குறைந்தது 100 மரக்கன்றுகளை நட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், இன்று (ஏப்ரல் 18) ஈரோடு மாவட்டம் மட்டுமல்லாது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இவ்விழா நடைபெறுகிறது.

இவ்விழா சிறப்பாக நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய மாவட்ட ஆட்சியருக்கும், பிற அரசு துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட நீதி துறையின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பூமியினுடைய ஆதாரம் மரங்கள் தான். இந்த மரங்களில் இருந்து விழக்கூடிய இலைகள் மக்கி உரமாகி நிலம் வளம் பெறுகிறது.

காற்று மாசு அகற்றப்பட்டு பிராணவாயு கிடைக்கிறது. எனவே இந்த விழா எந்த நோக்கத்திற்காக நடத்தப்படுகிறதோ, அந்த நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றும் வகையில் இங்கே இருக்கக்கூடிய அனைவரும் இந்த கருத்துக்களை எடுத்துச் சென்று மக்களிடையே தெரிவித்து, இந்த நோக்கம் முழுமையாக வெற்றி அடைவதற்கு உதவியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

இவ்விழாவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.சுஜாதா, மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அர்பித் ஜெயின், மாவட்ட வன அலுவலர் குமிலி வெங்கட் அப்பால நாயுடு, மாவட்ட சமூக நல அலுவலர் ஆர்.சண்முகவடிவு, நிரந்தர மக்கள் நீதிமன்றம் தலைவர் வி.பி.சுகந்தி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் கே.வித்யா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் எஸ்.ராமசந்திரன் உள்பட தொடர்புடைய துறை அலுவலர்கள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.