ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. இதனையொட்டி 238 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி இன்று தொடங்கியது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள 2.27 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க, 52 இடங்களில் 238 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வாக்குச் சாவடி மையங்களில் 1,206 அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர், இது தவிர கூடுதலாக 20 சதவீதம் என்ற அடிப்படையில், 48 வாக்குச் சாவடி கூடுதல் மையங்கள் (ரிசர்வ்) என மொத்தம் 286 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவு நடைபெறவுள்ள வாக்குச் சாவடி மையங்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் தலா ஒரு முதன்மை அலுவலர் மற்றும் 3 நிலைகளிலான வாக்குச்சாவடி அலுவலர்கள் என மொத்தம் 4 பேர் பணியாற்றுவர்.
அதன்படி, 238 வாக்குச்சாவடி மையங்களுக்கு 286 முதன்மை அலுவலர்கள், மூன்று நிலைகளிலான 858 வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச் சாவடிகளில் பணிபுரிய 62 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இத்தேர்தலில் பயன்படுத்தப்படும் 1,430 வாக்குப்பதிவு எந்திரங்கள் (ஈவிஎம்), வாக்காளர்கள் வாக்களித்ததை உறுதிப்படுத்தும் 310 எந்திரங்கள் (விவிபேட்), 286 கட்டுப்பாட்டு எந்திரங்கள் (கன்ட்ரோல் யூனிட்) அனைத்தும் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு இன்று காலை அனுப்பி வைக்கப்பட்டது.
0 coment rios: