செவ்வாய், 26 டிசம்பர், 2023

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: ஈரோடு மாவட்டத்தில் 6 நாட்களில் 15,931 மனுக்கள்

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி கனகபுரம் ஊராட்சியில் சதா மஹால், ஈரோடு மாநகராட்சியில் ஆலயமணி திருமண மண்டபம் மற்றும் கருங்கல்பாளையம் செங்குட்டுவன் தெரு சமுதாய நலக்கூடம் ஆகிய இடங்களில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்கள் செவ்வாய்க்கிழமை (இன்று) நடைபெற்றன. இதனை, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், அவர் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் மற்றும் ஈரோடு மாநகராட்சியினை ஒட்டி அமைந்துள்ள கிராம பஞ்சாயத்துகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று (டிச.26) ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட ஆலயமணி மஹால், கருங்கல்பாளையம் செங்குட்டுவன் தெரு சமுதாய நலக்கூடம், கனகபுரம் சதா மஹால் மற்றும் கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட நாய்க்கன்காடு சூர்யா மஹால் ஆகிய 4 இடங்களில் நடைபெற்றது.

இம்முகாமானது வருகின்ற ஜனவரி 6ம் தேதி வரை சுமார் 87 இடங்களில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 18ம் தேதி முதல் 23ம் தேதி வரை ஆறு நாட்களில் 38 முகாம்கள் நடைபெற்றது. இம்முகாம்களில் சுமார் 15,931 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களிடமிருந்து பெறப்படுகின்ற மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது என்றார். தொடர்ந்து, ஈரோடு மாநகராட்சிகுட்பட்ட ஆலயமணி திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமில் மனு வழங்கிய ஒரு நபருக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் பெயர் மாற்றம் பெறுவதற்கான ஆணையினையும் மற்றும் ஒரு நபருக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் சொத்துவரி பெயர் மாற்றத்திற்கான ஆணையினையும் அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.

மேலும், கருங்கல்பாளையம் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற முகாமில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் 2 நபருக்கு பிறப்பு சான்றிதழ்களையும், ஒரு நபருக்கு சொத்துவரி பெயர் மாற்றத்திற்கான ஆணையினையும், 5 நபர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் பெயர் மாற்றம் பெறுவதற்கான ஆணையினையும் மற்றும் கனகபுரம் ஊராட்சி வெள்ளோடு சதா மஹாலில் நடைபெற்ற முகாமில் 2 நபர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் பெயர் மாற்றம் பெறுவதற்கான ஆணையினையும் வழங்கினார்.

இந்த ஆய்வின் போது, ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி மண்டலகுழு தலைவர்கள் பழனிசாமி, சசிகுமார், மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கணபதி ஆகியோர் உடனிருந்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: