வியாழன், 21 டிசம்பர், 2023

அந்தியூர் அருகே ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் படுகொலை

ஈரோடு மாவட்டம் வெள்ளித்திருப்பூர் அடுத்த ரெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நடேசன் (வயது 65). இவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். இரு மகன்களில் ஒரு மகன் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் மூழ்கி இறந்து விட்டார். மற்றொரு மகனாகிய வாசுதேவன் திருமணமாகி குடும்பத்துடன் வெள்ளித்திருப்பூரில் வசித்து வருகிறார்.

தற்போது நடேசன் மற்றும் அவரது மனைவி ஜெயலட்சுமி ஆகிய இருவரும் ரெட்டிபாளையத்தில் குடியிருந்து அங்குள்ள 4.5 ஏக்கர் தோட்டத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை 7 மணியளவில் நடேசன் வீட்டிலிருந்து தோட்டத்திற்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் நடேசனை வழிமறித்து கல்லால் பயங்கரமாக அவரை தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த நடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த பவானி டிஎஸ்பி அமிர்தவர்ஷினி, அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் விசாரணை நடத்தினர். நடேசன் உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: