திங்கள், 25 டிசம்பர், 2023

கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு பணி: விவசாயிகளுடன் அமைச்சர் முத்துசாமி ஆலோசனை

கீழ்பவானி திட்ட பிரதான கால்வாய் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக விவசாயிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் திங்கட்கிழமை (இன்று) நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ் மற்றும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி தலைமை வகித்தார். 

இக்கூட்டத்தில், அமைச்சர் முத்துசாமி தெரிவித்ததாவது, கீழ்பவானி திட்ட பிரதான கால்வாய் பகுதிகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பான விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாய பெருங்குடி மக்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், கீழ்பவானி கால்வாய் பகுதிகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஒருதரப்பினரும் மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டாமென மற்றொரு தரப்பினரும் என இருவேறு கருத்துக்கள் உள்ளன.

அதன்படி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ள விவசாயிகளிடம் பல்வேறு கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளன. அதன்படி விவசாயிகளுக்கான பாதிப்புள்ள இடங்களை கண்டறியும் வகையில் அவர்களிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அதற்காக 10 நபர்கள் கொண்ட குழுவை அவர்களே அமைத்து, விரைவாக அதற்கான கருத்துப்பட்டியலை அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர்கள் அளிக்கும் கருத்து பட்டியலின் அடிப்படையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ள விவசாயிகளுடன் கலந்து ஆலோசனை மேற்கொண்டு இரு தரப்பினரின் கருத்துருக்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். தமிழக அரசை பொறுத்தவரையில் விவசாயிகளின் நலனுக்காக கடைமடை வரை தண்ணீர் செல்ல வேண்டும், தண்ணீர் வீணாகக் கூடாது என்பதும், அதே வேளையில் விவசாய பெருமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட கூடாது என்ற அடிப்படையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும், என்றார்.

இக்கூட்டத்தில், புலம்பெயர் தமிழர் நலவாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி, செயற்பொறியாளர்கள் திருமூர்த்தி (கீழ்பவானி வடிநில கோட்டம்), அருள்அழகன் (பவானிசாகர் அணைக் கோட்டம்), உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: