இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய் வராமல் தடுக்கும் விதமாக வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் 14ம் தேதி வரை வெள்ளைக்கழிச்சல் தடுப்பூசி இருவார முகாம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக நடத்தப்பட உள்ளது.
சிறிய குஞ்சுகள் முதல் பெரிய கோழிகள் வரை அனைத்துக் கோழி இனங்களையும் பாதிக்கும் முக்கியமான நச்சுயிரி தொற்று நோயான வெள்ளைக்கழிச்சல் எனப்படும் ராணிக்கெட் நோய் வெய்யில் காலங்களில் அதிக அளவில் பரவி, 100 சதவீதம் வரை கோழிகளில் இறப்பு ஏற்படுத்தக் கூடியதாகும். இந்நோய் கண்ட கோழிகள் வெள்ளைக்கழிச்சல், குறுகிக் கொண்டு தீவனம் மற்றும் தண்ணீர் குடிக்காமல் இருக்கும், நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்ட கோழிகள் கால்களை இழுத்து கொண்டும், கழுத்தை திருகி கொண்டும் இருக்கும். இந்நோய் பரவிய பின் மருத்துவம் செய்து குணப்படுத்துவது கடினம்.
எனவே ஈரோடு மாவட்டத்தில் கோழிகளை வளர்க்கும் அனைத்து விவசாயிகளும், பொதுமக்களும் இத்தடுப்பூசி முகாமில் கலந்துகொண்டு தங்கள் கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் தடுப்பூசியினை போட்டு கோழிகளில் ஏற்படும் இறப்பினை தவிர்ப்பதன் மூலம் கோழி வளர்ப்பில் அதிக லாபம் பெறலாம். ஆகவே இந்த அரிய வாய்ப்பினை அனைத்து விவசாயிகளும், பொதுமக்களும் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 coment rios: