ஈரோடு பெருந்துறை சாலையில் தனியார் கலை அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் படித்து வரும் பிபிஏ 3ம் ஆண்டு படிக்கும் மாணவ, மாணவிகளை சுற்றுலா பேருந்தில் கர்நாடகா மாநிலம் குடகு பகுதிக்கு சுற்றுலா அழைத்து செல்ல கல்லூரி நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி நேற்று இரவு சுமார் 11 மணியளவில் 3 ஆசிரியர்கள் மற்றும் 56 மாணவ, மாணவிகள் ஏற்றிக் கொண்டு சுற்றுலா பேருந்து புறப்பட்டது. இந்த நிலையில், பேருந்து கல்லூரி வளாகத்தை விட்டு வெளியே வந்ததும், ஈரோடு- பெருந்துறை சாலையில் சுமார் 300 மீட்டர் தூரத்தில் ஒரு வளைவில் திரும்பியது.
அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து திடீரென கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காயம் அடைந்தனர். இதனிடையே விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் ஈரோடு தாலுகா போலீசார் விரைந்து சென்று காயமடைந்த மாணவ, மாணவிகள் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில் படுகாயம் அடைந்திருந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகள் சுவேதாவை (வயது 21) மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து, விபத்துக்குள்ளான சுற்றுலா பேருந்து கிரேன் மூலம் மீட்கப்பட்டது.
இவ்விபத்து குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து கல்லூரி மாணவி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
0 coment rios: