வெள்ளி, 19 ஜனவரி, 2024

நசியனூர் அருகே ஆம்னி வேனில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல்துறை தலைவர் ஜோசி நிர்மல்குமார் உத்தரவுபடி, கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகரன் மற்றும் ஈரோடு சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் அறிவுறுத்தலின் படி, ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க ஈரோடு மாவட்டத்தில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, ஈரோடு மாவட்டம் சித்தோடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நசியனூர் பிரிவு ரோடு பகுதியில் ரேஷன் அரிசியை கடத்தி செல்வதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் பேரில், காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணன், காவல் உதவி ஆய்வாளர் மூர்த்தி உள்ளிட்ட போலீசார் சேலம் - கோவை செல்லும் நான்கு வழிச்சாலையில் நசியனூர் பிரிவு ரோடு அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்தபோது 13 மூட்டைகளில் 520 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக, ஆம்னி வேன் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் பவானி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த சந்திரசேகர் (வயது 48) என்பதும், பொதுமக்களிடமிருந்து ரேசன் அரிசியை வாங்கி பெருந்துறை மற்றும் பணிக்கம்பாளையம் பகுதியில் தங்கி வேலை செய்யும் வெளி மாநில தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பதற்காக கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து ஆம்னி வேன் மற்றும் ரேஷன் அரிசி பறிமுதல் செய்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: