தமிழகத்தில், கடந்த 2008ம் ஆண்டு முதல் இலவச 108 அவசர சிகிச்சை உறுதி சேவை வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசுடன் இணைந்து 'இ.எம்.ஆர்.ஐ., கிரீன் ஹெல்த்' சர்வீஸ் நிறுவனம், 108 ஆம்புலன்ஸ் சேவையை நிர்வகித்து வருகிறது.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரையில் ஈரோடு, பவானி, சத்தி, கோபி, பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி, தாளவாடி, நம்பியூர் உள்ளிட்ட 10 தாலுகாவில் தற்போது 43 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுகிறது.
இதில் மலைப்பகுதியில் மட்டும் 10 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த 2023ம் ஆண்டு 59 ஆயிரத்து 270 பேருக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட 108 ஆம்புலன்ஸ் ஒருங்கிணைப்பாளர் கவின் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2023ம் ஆண்டு 59 ஆயிரத்து 270 பேருக்கு, 108 ஆம்புலன்ஸ் சேவை அளிக்கப்பட்டுள்ளது. இதில் பிரசவத்திற்காக 16 ஆயிரத்து 826 பேர், பச்சிளம் குழந்தைகள் 636 பேர், குழந்தைகள் 141 பேர், பிரசவ வலி ஏற்பட்டு ஆம்புலன்சில் குழந்தை பிறந்தது தொடர்பாக 58 பேரும் பயன்படுத்தி உள்ளனர்.
மேலும், சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டோர் 11 ஆயிரத்து 347 பேர், காய்ச்சல் பாதிப்பு காரணமாக 2,393 பேர், இருதய நோய் மற்றும் சுவாச பிரச்னை தொடர்பாக 6,106 பேர் மற்றும் இதர மருத்துவ சேவைகளுக்காக 21 ஆயிரத்து 763 பேரும், 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தியுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 coment rios: