சனி, 13 ஜனவரி, 2024

ஈரோடு செய்திகள் | Latest Erode News: ஈரோட்டில் ரூ.30.50 லட்சம் மோசடி வழக்கில் அரசு மருத்துவமனை செவிலியர் கைது

ஈரோடு மாவட்டம் பவானி ஒரிச்சேரிப்புதூர் அண்ணா நகரைச் சேர்ந்த வெங்கடாசலம் மகன் பூவழகன் (வயது 37). தமிழ் எம்ஏ படித்துள்ளார். இவரிடம், கவுந்தப்பாடி சலங்கபாளையம் அய்யன்காடு காரிய குப்பணமுதலி வீதியைச் சேர்ந்த ஜோதிடர் அன்பானந்தன் (வயது 53) என்பவர், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த 2019ம் ஆண்டு ரூ.5.50 லட்சம் பெற்றார். ஆனால், அரசு வேலை வாங்கி தரவில்லை.

இதேபோல், அன்பானந்தன் ஈரோட்டை சேர்ந்த மலர்கொடியிடம் ரூ.5 லட்சமும், கவுந்தப்பாடி செம்பூத்தாம்பாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரியிடம் ரூ.20 லட்சமும் பெற்று அரசு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி மோசடி செய்துள்ளார். இதுகுறித்து ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.

இதில், அன்பானந்தன் அவரது மனைவி கோகிலாம்பாள் இருவரும் ஜோதிடம் பார்க்க வருபவர்களிடம் ஜாதகத்தில் அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும், நிச்சயம் முயற்சி செய்தால் அந்த வேலை கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், அன்பானந்தனின் மகளான ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் தற்காலிக பெண் செவிலியராக பணியாற்றும் பவித்ரா (வயது 27), எனது அப்பாவும், அம்மாவும் பணம் கொடுத்து தான் எனக்கு அரசு செவிலியராக பணி வாங்கி தந்ததாக ஜாதகம் பார்க்க வந்தவர்களிடம் கூறி நம்பிக்கையை ஏற்படுத்தி, கூட்டு சதியில் ஈடுபட்டு 3 பேரிடம் ரூ.30.50 லட்சம் பணம் பெற்று மோசடி செய்ததும் தெரியவந்தது.

தொடர்ந்து, பவித்ராவின் பணி குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கொரோனா காலத்தில் தற்காலிக அடிப்படையில் கவுந்தப்பாடி அரசு மருத்துவமனை யில் செவிலியராக பணிக்கு சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், கடந்த 26ம் தேதி அன்பானந்தனை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், இந்த மோசடி வழக்கிற்கு உடந்தையாக இருந்த தற்காலிக செவிலியர் பவித்ராவை நேற்று முன்தினம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெண்கள் கிளை சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அன்பானந்தனின் மனைவி கோகிலாம்பாளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: