ஈரோடு மாவட்டம் அந்தியூர் சீப்பர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 64). இவரது மனைவி குமுதவல்லி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அவர் திருமணமாகி கோவையில் வசித்து வருகிறார். மணிவண்ணன் ஓய்வு பெற்ற சித்த மருத்துவ அலுவலர் ஆவார்.
இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் 28ம் தேதி மணிவண்ணன் குடும்பத்தினருடன் தனது மகள் வீட்டிற்கு - சென்றுள்ளார். பின்னர், டிசம்பர் 4ம் தேதி வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 24 பவுன் தங்க நகை கள் மற்றும் 3 லட்சம் பணம் ஆகியவற்றை திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
அதனையடுத்து, மணிவண்ணன் அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில், அந்தியூர் பகுதிகளில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 பேரை போலீசார் வழிமறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் எரங்காடூர் வாய்க்கால் ரோடு பகுதியைச் சேர்ந்த மனோகரன் மகன் பாரத் என்ற பரத்குமார் (வயது 36), திருப்பூர் மாவட்டம் காங்கயம் ரோடு பெரியதோட்டம் பகுதியைச் சேர்ந்த காஜா மைதீன் மகன் முகமது ரபிக் (வயது 29) என்பதும், இவர்கள் ஓய்வு பெற்ற சித்த மருத்துவ அலுவலர் வீட்டில் 24 பவுன் நகைகள் மற்றும் 3 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
0 coment rios: