ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகில் உள்ள மேலப்பாளையம் என்னும் கிராமத்தில் 1904ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி செங்குந்த கைக்கோளர் முதலியார் சமூகத்தை சேர்ந்த நாச்சிமுத்து முதலியார்-கருப்பாயி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக குமரன் பிறந்தார். இவருடைய இயற்பெயர் குமாரசாமி முதலியார்.
தன் குடும்பத்தின் வறுமை சூழ்நிலை காரணமாக பள்ளி படிப்பை ஆரம்ப பள்ளியிலேயே முடித்துக் கொண்டார். பின்னர் அவர் கைத்தறி நெசவு தொழிலை செய்து வந்தார். 1923 ல் ராமாயி என்பவரை அவர் திருமணம் செய்து கொண்டார். கைத்தறி நெசவுத் தொழிலில் அவருக்கு போதிய வருமானம் கிடைக்காததால் மாற்று தொழில் தேடி திருப்பூர் சென்று அங்கு இருக்கும் ஈஞ்சையூரில் ஒரு மில்லில் எடை போடும் வேலை பணியில் சேர்ந்தார்.
திருப்பூரில் நடந்த சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேய சிப்பாய்களால் அடிபட்டுகையில் கொடியுடன் மயங்கி விழுந்து இறந்ததால் இவருக்கு கொடிகாத்த குமரன் என்ற பெயர் வந்தது. இவருக்கு சென்னிமலையில் மணி மண்டபம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது
இதுகுறித்து செங்குந்த மகாஜன சங்க தலைவர் நந்தகோபால் மற்றும் செயலாளர் ஆசைதம்பி ஆகியோர் தெரிவித்ததாவது:-
அனைத்து சமுதாய தலைவர்களுக்கும் மணி மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. ஆனால் சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்ட உயிர் நீத்த கொடிகாத்த குமரனுக்கு மட்டும் அரங்கம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் தேச விடுதலைக்காக போராடிய கொடி காத்த குமரனுக்கு மணிமண்டபம் அவர் பிறந்த சென்னிமலையில் கட்ட வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்கள் சார்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னிமலையில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
0 coment rios: