செவ்வாய், 12 மார்ச், 2024

தாளவாடி மலைப்பாதையில் கார் மீது லாரி கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் நம்பியூர் பகுதியைச் சேர்ந்த குமார் (வயது 60). மூலக்கிணறு பகுதியைச் சேர்ந்த செல்வம் (வயது 60), சவுந்தரராஜ் (வயது 60). இண்டியன்பாளையம் பகுதியைச் சேர்ந்த சென்னைய்யன் (வயது 55). காஞ்சநாயக்கனூர் பகுதியை சேர்ந்த செல்வம் (வயது 50). ஈரோட்டைச் சேர்ந்த மனோகர் (வயது 50) ஆகிய 6 பேரும் கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் நஞ்சன்கூடு பகுதியில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக ஆம்னி காரில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, தாளவாடி மலைப்பாதை 27வது கொண்டை ஊசி வளைவில் ஆம்னி கார் திரும்பி கொண்டிருந்தபோது எதிரே தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி கரும்பு லோடுகளை ஏற்றி கொண்டு வந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த ஆம்னி கார் மீதும், மற்றொரு வேன் மீதும் சாய்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் லாரியில் இருந்து கரும்புகள் ஆம்னி கார் மீது விழுந்து மூடிக்கொண்டது. இதில், ஆம்னி காரில் இருந்த 6 பேரும் சிக்கிக்கொண்டு அலறினர். விபத்து குறித்து ஆசனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மருத்துவ குழுவினர் மற்றும் பொதுமக்கள் ஆம்னி கார் மீது இருந்த கரும்புகளை அகற்றி, அதில் சிக்கிக் கொண்டிருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு ஆம்னி காரில் படுகாயம் அடைந்த மூலக்கிணறு பகுதியை சேர்ந்த செல்வம், சவுந்தர்ராஜ் மற்றும் ஈரோட்டை சேர்ந்த மனோகர் ஆகியோரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இந்த விபத்தில் நம்பியூரை சேர்ந்த குமார், இந்தியன் பாளையம் பகுதியை சேர்ந்த சென்னைய்யன், காஞ்ச நாயக்கனூர் பகுதியை சேர்ந்த செல்வம் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர், 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நடுரோட்டில் லாரி கவிழ்ந்ததால் திம்பம் மலைப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. இந்த கோர விபத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. மேலும், இவ்விபத்து குறித்து ஆசனூர் போலீசார் நடத்தி வருகின்றனர்.



শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: