செவ்வாய், 26 மார்ச், 2024

பவானி அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த சேலைகள் பறிமுதல்

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி அனைத்து பகுதிகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஈரோடு மேற்கு தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறைக்கு காலிங்கராயன்பாளையம் பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் சேலைகள் பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் வந்தது.

உடனடியாக, கட்டுப்பாட்டு அறையில் இருந்து தேர்தல் பறக்கும் படை அலுவலர் சிவக்குமார் தலைமையிலான பறக்கும் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, பறக்கும் படையினர் குறிப்பிட்ட பகுதிக்கு விரைந்து சென்று சம்பந்தப்பட்ட குடோனில் சோதனையிட்டனர். அங்கு ஏராளமான பண்டல்கள் இருந்தன.

அதனை பிரித்து பார்த்த போது பண்டல்களில் சேலைகள் இருந்தது. இதுகுறித்து விசாரித்த போது, குடோனில் இருந்த சேலை பண்டல்களுக்கான உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்தது. இதைத்தொடர்ந்து, அங்கிருந்த 150 பண்டல் சேலையையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த சேலை பண்டல்களை பதுக்கி வைக்க வாடகைக்கு எடுத்தது யார்? என்பது குறித்து கட்டிட உரிமையாளர் ரவிச்சந்திரனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு பின் ஈரோடு வருவாய் கோட்ட ஆட்சியர் அலுவலகம் கொண்டு செல்லப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட உள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: