புதன், 27 மார்ச், 2024

ஈரோடு: சைக்கிள் ஓட்டி வந்து வேட்புமனு தாக்கல் செய்த தமாகா வேட்பாளர்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கியது. ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் நடந்து வந்தது. திமுக சார்பில் போட்டியிடும் கே.இ.பிரகாஷ், அதிமுக சார்பில் போட்டியிடும் ஆற்றல் அசோக்குமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்மேகன், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ஈஸ்வரன், சுயேட்சைகள் என நேற்று வரை மொத்தம் 25 பேர் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனர்.


இந்த நிலையில், இன்று (27ம் தேதி) வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய வரும்போது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இன்று காலை பாரதிய ஜனதா கட்சி கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரசை தேர்ந்த விஜயகுமார் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று விஜயகுமார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சைக்கிளை ஓட்டி வந்து மனு கொடுக்க வந்தார். தொடர்ந்து, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கராவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின் போது மொடக்குறிச்சி எம்எல்ஏ டாக்டர் சரஸ்வதி, பாஜக தேர்தல் பொறுப்பாளர் வழக்கறிஞர் பழனிச்சாமி, பாஜக மாவட்ட தலைவர் வேதாந்தம், தமாகா பொதுசெயலாளர் விடியல் எஸ். சேகர் ஆகியோர் உடனிருந்தனர்.



শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: