மகா சிவராத்திரி மற்றும் வார இறுதி விடுமுறையையொட்டி, ஈரோட்டில் இருந்து மற்ற ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மார்ச் 8ம் தேதி (சிவராத்திரி, முகூர்த்த நாள்) மற்றும் 9, 10 (சனி, ஞாயிறு) வார இறுதி நாட்கள் என்பதால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானோர் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை உள்பட பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஈரோடு மண்டல பொதுமேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மகா சிவராத்திரி மற்றும் வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுகிழமைகளில் பயணிகளின் வசதிக்காக ஈரோட்டிலிருந்து கோவை, திருச்சி, மதுரை, சென்னை, திருச்செந்தூர், ராமேஸ்வரம், திருவண்ணாமலை, பழனி போன்ற ஊர்களுக்கு தற்போது இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 coment rios: