புதன், 13 மார்ச், 2024

ஈரோட்டில் பல்நோக்கு மருத்துவமனை கட்டிடத்தினை திறந்து வைத்த முதல்வர்

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையை உயர் சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்தி 8 தளங்கள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை கட்டடத்தினை முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கான அரசு விழாவில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையை உயர் சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்தி 8 தளங்கள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனைக் கட்டடத்தினை காணொலி மூலம் முதல்வர் ஸ்டாலின் புதன்கிழமை (இன்று) திறந்து வைத்தார் .


அதனைத் தொடர்ந்து, ஈரோட்டில் பல்நோக்கு மருத்துவமனை கட்டட வளாகத்தில் நடைபெற்ற விழாவில், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா மருத்துவமனை கட்டடத்தில் குத்துவிளக்கேற்றி வைத்து கட்டிடத்தினை பார்வையிட்டார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையானது, ரூ.67.02 கோடி மதிப்பீட்டில் நரம்பியல் பிரிவு, இருதய நோய் சிகிச்சை பிரிவு, புற்றுநோய் சிகிச்சை பிரிவு, கண் சிகிச்சை பிரிவு, குழந்தைகள் நல அறுவை சிகிச்சை பிரிவு, பிளாஸ்டிக் சர்ஜரி பிரிவு, தீக்காய சிகிச்சை பிரிவு, சிறுநீரக பிரிவு, சீமாங் பிரிவு போன்ற உயர் சிறப்பு சிகிச்சை அளிக்க 8 மாடிகள் கொண்ட பல்நோக்கு உயர் சிறப்பு சிகிச்சை பிரிவுகள் மற்றும் கூடுதல் படுக்கை வசதிகள் அடங்கிய மருத்துவமனையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இம்மருத்துவமனைக்கென புதியதாக 124 மேலும் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கட்டடமானது, 232602 ச.அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மேம்படுத்தப்பட்ட உயர் சிறப்பு மருத்துவமனையானது, கீழ் தளத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம், தரை தளத்தில் அவசர சிகிச்சை / அவசர சிகிச்சை உள்நோயாளிகள் பகுதி / மகப்பேறு அவசர சிகிச்சை / நுண்கதிர் பகுதி, முதல் தளத்தில் மகப்பேறு பகுதி, இரண்டாம் தளத்தில் பச்சிளம் குழந்தைகள் மற்றும் குழந்தைகள் பகுதி, மூன்றாம் தளத்தில் மகப்பேறு அறுவை அரங்கம் / அறுவை சிகிச்சை பின் கவனிப்பு பகுதி, நான்காம் தளத்தில் இருதய சிகிச்சை மற்றும் தீவிர மருத்துவ சிகிச்சை பகுதி, ஐந்தாம் தளத்தில் புற்றுநோய் சிகிச்சை / காப்பீட்டு சிகிச்சை பகுதி, ஆறாம் தளத்தில் எலும்பு மருத்துவம் / பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை / கட்டண சிகிச்சை பகுதியும், ஏழாம் தளத்தில் சிறுநீரகவியல் / நரம்பியல் அறுவை சிகிச்சை பகுதி / கட்டண சிகிச்சை பகுதி மற்றும் எட்டாம் தளத்தில் அறுவை அரங்குகள் / கருத்தரங்க கூடம் உள்ளிட்ட பிரிவுகளுடன் செயல்படவுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் வள்ளி, இணை இயக்குநர் (நலப்பணிகள்) அம்பிகா, அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் கவிதா, மாநகராட்சி பொறியாளர் விஜயகுமார், 2ம் மண்டலக் குழு தலைவர் சுப்பிரமணியன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: