புதன், 6 மார்ச், 2024

ஈரோடு மாநகராட்சியில் சாலை திட்டப் பணிகள், பொது நிதி பணிகளை துவக்கி வைத்த அமைச்சர்

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.34.70 கோடி மதிப்பீட்டில் 474 சாலை திட்டப்பணிகள் மற்றும் பொது நிதி பணிகள் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்து பேசினார்.

அப்போது, ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலம் 1, 2, 3, 4 ஆகிய பகுதிகளில் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.5.79 கோடி மதிப்பீட்டில் 89 சாலை பணிகளும், மாநில நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.5.22 கோடி மதிப்பீட்டில் 67 சாலை பணிகளும், தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.9.43 கோடி மதிப்பீட்டில் 139 சாலை பணிகளும் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், பொது நிதியின் கீழ் ரூ.14.26 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால், சிறுபாலம், சாலைப் பணிகள் உள்ளிட்ட 176 பணிகள் என மொத்தம் ரூ.34.70 கோடி மதிப்பீட்டில் 474 புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்து, பணிகளை குறிப்பிட்ட காலத்திட்டத்திற்குள் முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளில் பெரும்பகுதி இப்பணிகளில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் விடுபட்ட பணிகளையும் உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். 

தொடர்ந்து, நீங்கள் நலமா திட்டத்தின் கீழ், காலிங்கராயன் பயணியர் மாளிகையில் பொதுமக்களிடம் அலைபேசியில் நேரடியாக தொடர்பு கொண்டு அரசு செயல்படுத்தும் திட்டங்களை பற்றி கருத்துக்களை கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சிகளில், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: