சனி, 9 மார்ச், 2024

தாயை இழந்த குட்டி யானை முதுமலை யானைகள் முகாமுக்கு அனுப்பி வைப்பு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பண்ணாரி வனப்பகுதியில் கடந்த 3ம் தேதி வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தாய் யானை மயங்கி விழுந்து உயிருக்கு போராடியது. அப்போது அதன் அருகில் 2 மாத குட்டி யானை பரிதவித்தப்படி சுற்றி, சுற்றி வந்தது. வனத்துறையினர் சிகிச்சை அளித்தும் பலனின்றி தாய் யானை 5ம் தேதி உயிரிழந்தது. அதன் 2 மாத குட்டி யானை அங்குள்ள வனப்பகுதிக்குள் விடப்பட்டது. இதையடுத்து குட்டி யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் டிரோன் மூலம் கண்காணித்தனர்.

பின்னர், மறுநாள் மற்றொரு யானைக்கூட்டத்துடன், அந்த குட்டி யானை சென்றது. இந்த நிலையில், தாய்ப்பால் குடித்து பழக்கப்பட்ட அந்த குட்டி யானைக்கு மற்றொரு யானை தாய்ப்பால் கொடுக்காததால் கூட்டத்தை விட்டு குட்டி யானை விலகி வெளியேறியதாக தெரிகிறது. இதனால் குட்டி யானை அங்கும், இங்குமாக சுற்றித்திரிந்ததுடன், வழித்தவறி வனப்பகுதியை விட்டு வெளியேறி தாளவாடி அருகே உள்ள அரேப்பாளையம் கிராமத்துக்குள் புகுந்தது.

அதனைத் தொடர்ந்து, ஆசனூர் வனத்துறையினர் குட்டி யானையை பிடித்து வாகனத்தில் ஏற்றி ஆசனூர் வனச்சரக அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். ஆசனூர் வனச்சரக அலுவலகத்தில், கடந்த மூன்று நாட்களாக குட்டி யானைக்கு தேவையான பால் மற்றும் உணவுகள் அளித்து வந்தனர். இந்த நிலையில் உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில், அந்த 2 மாத குட்டியை சனிக்கிழமை (இன்று) காலை முதுமலை புலிகள் காப்பக தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவ குழுவினரின் உயர்தர சிகிச்சை மற்றும் பராமரிப்பு ஆகியவை முதுமலையில் இருப்பதால் அங்கு வைத்து இந்த குட்டி யானை பராமரிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: