செவ்வாய், 9 ஏப்ரல், 2024

ஈரோடு: வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெயர், சின்னம் பொருத்தும் பணி இன்று தொடக்கம்

ஈரோட்டில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெற உள்ளதால், தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், அதற்கான கட்டுப்பாட்டு கருவிகளும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் வி.வி.பேட் கருவிகளும் அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிட்டபின், வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தக்கூடிய வாக்காளர் பெயர் மற்றும் சின்னம் அச்சடிக்கும் பணி நடைபெற்று வந்தது. தற்போது அந்த பணிகள் முடிவடைந்துள்ளது. எனவே, வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்தும் பணி இன்று(புதன்கிழமை) வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் நடைபெறவுள்ளது.

மேலும், தேர்தல் நெருங்கி வருவதால் இந்த பணிகள் விரைவில் முடிக்கப்படும். அதனை தொடர்ந்து, வரும் 18ம் தேதி மாலை எந்த வாக்குப்பதிவு எந்திரம் எந்த இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதன் அடிப்படையில் கொண்டு செல்லப்படும். வாக்குப்பதிவிற்காக அன்று இரவே வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குப்பதிவு எந்திரத்தை தயார்படுத்துவார்கள். அதன்பின், மறுநாள் அதாவது ஏப்ரல் 19ம் தேதி காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்க உள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: