ஞாயிறு, 28 ஏப்ரல், 2024

மாணவர் மீது தாக்குதல்: ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது புகார்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தைச் சேர்ந்த சீனிவாசன் மகன் முரளி கிருஷ்ணன் (வயது 18). இவர், ஈரோடு மேட்டுக்கடையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு பிடெக் படித்து வருகிறார். இவர் தன்னுடன் படிக்கும் சக மாணவியுடன் பழகி வந்துள்ளார். இதனையறிந்த கல்லூரி நிர்வாகத்தினர் கடந்த 25ம் தேதி முரளி கிருஷ்ணனை கண்டித்து, கல்லூரியில் இருந்து மாற்று சான்றிதழ் பெற்று செல்லும்படி கூறியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, முரளி கிருஷ்ணனை கல்லூரி நிர்வாகத்தினர் சரமாரியாக தாக்கியதால் காயம் அடைந்ததாக கூறி அவரை அவரது பெற்றோர் ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முரளி கிருஷ்ணன் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த ஈரோடு தாலுகா போலீசார், மாணவன் முரளி கிருஷ்ணனிடம் புகாரை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், முரளி கிருஷ்ணனின் தாய் மோகனாம்பாள், தனது மகனுடன் நேற்று மருத்துவமனையில் வீடியோ எடுத்து, அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: நாங்கள் கூலி வேலை செய்கிறோம். எங்களது குடும்பத்தில் முதல் பட்டதாரியாக எனது மகன் முரளி கிருஷ்ணன் படிக்க விரும்பியதால், பொறியியல் கல்லூரியில் சேர்த்தோம். எனது மகன் அவருடன் படிக்கும் சக மாணவியுடன் பழகியுள்ளார். இந்த காரணத்திற்காக எனது மகனை கல்லூரி நிர்வாகம் எங்களை கல்லூரிக்கு அழைத்தனர்.

நாங்கள் வருவதற்குள் எனது மகனை கல்லூரியில் தரைத்தளத்திற்கு அழைத்து சென்று அரை நிர்வாணப்படுத்தி பெல்ட்டினால் சரமாரியாக அடித்துள்ளனர். கீழே தள்ளி காலால் மிதித்துள்ளனர். இதனை அறிந்து நாங்கள் கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டதற்கு அப்படிதான் அடிப்போம். உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என்றனர். இதுபோன்ற சம்பவங்கள் அங்கு எத்தனையோ நடக்கிறது. நாங்களாவது இதை வெளியே கொண்டு வந்துவிட்டோம். நிறைய மாணவ-மாணவிகள் சொல்லாமல் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: