செவ்வாய், 7 மே, 2024

சத்தியமங்கலம் அருகே தனியார் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து ஊட்டி மற்றும் பெங்களூரைச் 17 பயணிகளுடன் பெங்களூர் நோக்கி தனியார் சுற்றுலா பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை திருநெல்வேலி மாவட்டம் கீழ முன்னீர்பள்ளம் பகுதியைச் சேர்ந்த காசி (வயது 27) என்பவர் ஒட்டி வந்தார்.
 இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் அந்த சுற்றுலா பேருந்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அத்தியப்பகவுண்டன் புதூர் பிரிவு அருகே வந்து கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தார் இயந்திரம் மீது மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் 17 பயணிகள் சிக்கிக் கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சத்தியமங்கலம் காவல்துறையினர், 108 மருத்துவ குழுவினர் கவிழ்ந்து கிடந்த பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்து உள்ளே சிக்கி இருந்த 17 பயணிகளையும் பத்திரமாக மீட்டனர்.

இதையடுத்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் அவர்கள் சொந்த ஊருக்கு மாற்று பேருந்து மூலம் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, சாலையில் கவிழ்ந்து கிடந்த பேருந்து கிரேன் மூலம் மீட்கப்பட்டது. மேலும், இவ்விபத்து குறித்து சத்தியமங்கலம் காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: