ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்ட குழுக் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இந்த கூட்டமானது, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வனத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், பள்ளிக்கல்வித்துறை மற்றும் காவல்துறைகளின் சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக துறை வாரியாக மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், கூட்டுறவுத்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்மை உழவர் நலத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டார். திட்டப்பணிகளை விரைந்து முடித்திடவும், நலத்திட்ட உதவிகளை தங்குதடையின்றி பொதுமக்களுக்கு சென்றயடைவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மனிஷ், மாவட்ட வன அலுவலர் குமிலி வெங்கட அப்பால நாயுடு (ஈரோடு), துணை இயக்குநர்கள் குலால் யோகேஷ் விலாஷ் (சத்தியமங்கலம் வன கோட்டம்), சுதாகர் (ஆசனூர்), மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, இணை இயக்குநர் (நலப்பணிகள்) அம்பிகா, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) சோமசுந்தரம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் செல்வராஜ் (வளர்ச்சி), பிரேமலதா (நிலம்) உட்பட அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 coment rios: