செவ்வாய், 11 ஜூன், 2024

ஈரோடு மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலை வகித்தார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமை வகித்தார். 

இக்கூட்டத்தில் அமைச்சர் முத்துசாமி தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சரின் ஆலோசனைப்படி, ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்தும், இப்பணிகளின் முன்னேற்றம் மற்றும் துரிதப்படுத்துவது குறித்தும், புதிய திட்டப்பணிகளை தொடங்குவது குறித்தும், தொடர்புடைய துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த மார்ச் மாதம் 13ம் தேதியன்று கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற அரசு விழாவில், ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட சோலார் பகுதியில் ரூ.20 கோடி மதிப்பீட்டில், காய்கறி மளிகை சந்தை வளாகம் வ.உ.சி பூங்கா, ரூ.15 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்துதல் மற்றும் ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துடன், காவேரி ஆற்று முகப்பு மேம்படுத்தப்படுத்துதல், ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிய மாவட்ட மைய நூலகம் உள்ளிட்ட 9 புதிய திட்டங்களை அறிவித்தார்.

ஈரோடு மாநகராட்சியின் மையப்பகுதியில் தினசரி காய்கறி சந்தை அமைந்துள்ளதால் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் கோரிக்கையின்படி, சோலார் பகுதியில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான ஏறத்தாழ 10 ஏக்கர் நிலத்தில் ரூ.20 கோடியில் நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த மொத்த காய்கறி கனிகள் மற்றும் மளிகை சந்தை வளாகம் அமைக்கப்படவுள்ளது.

இதனால், ஒரே இடத்தில் அனைத்து பொருட்களும் பொதுமக்கள் வாங்கலாம். மாநகரப் பகுதிக்குள் கனரக போக்குவரத்து நெரிசல் குறையும். சுற்றியுள்ள கிராமப்புற விவசாயிகள் பெரும் அளவில் பயன் அடைவார்கள். இப்பணிகளை விரைவில் துவங்கி, முடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், ஈரோடு மாநகராட்சிக்கு சொந்தமான வ.உ.சி பூங்கா, ஈரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்களுக்கு பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது.

ஈரோடு மாநகர மக்களின் நீண்ட நாளைய கனவின்படி, மேற்படி பூங்காவை உலக தரம் வாய்ந்த சுற்றுசூழல் பூங்காவாக அமைக்கும் பணி ரூ.15 கோடியில் மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பணி முழுமையாக முடிவுறும் பொழுது ஈரோடு மற்றும் சுற்றுப்புற மக்களுக்கு பொழுதுபோக்கு இடமாக அமைவதுடன் பசுமை புல்வெளிகளால் காற்று மாசுடைவது தடுக்கப்பட்டு சுற்றுசூழல் மேம்பாடு அடையும். இவ்வாறு பல்வேறு திட்டங்கள் ஈரோடு மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட அன்னைசத்யா நகர் பகுதியில் சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மாவீரன் பொல்லான் நினைவிடம் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் தொடர்புடைய துறையின் மூலம் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொழிற்பூங்கா அமைப்பதற்கும் அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இப்பணிகளை விரைந்து முடித்திடவும், மேலும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கும் உரிய நடவடிக்ககை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

முன்னதாக, அந்தியூர் வட்டம் அத்தாணி ஓடைமேடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி சத்துணவு அமைப்பாளருக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையினை வழங்கினார். இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முகம்மது குதுரத்துல்லா உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: