ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் ரத்த கொடையாளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று (26ம் தேதி) நடைபெற்றது.
இதில், ரத்த கொடையாளர் விழிப்புணர்வு உறுதி மொழியான, ரத்தத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு தன்னார்வ ரத்த தானம் செய்வதன் அவசியம் குறித்து எனது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், உறவினர்கள், சக ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.
ஒருவருக்கு ரத்தம் தேவைப்படும் போது இனம், மதம் பாகுபாடின்றி எந்த உயிர் இழப்பும் ஏற்படாதிருக்க தன்னார்வமாக இரத்த தானம் செய்வேன் என உறுதி அளிக்கிறேன் என மருத்துவர்கள் மற்றும் இரத்த கொடையாளர்கள் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கராவை பின் தொடர்ந்து வாசித்து உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, ரத்த கொடையாளர்கள் 8 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, இணை இயக்குநர் (நலப்பணிகள்) அம்பிகா சண்முகம், துணை இயக்குநர்கள் சோமசுந்தரம் (சுகாதாரப்பணிகள்), கவிதா (குடும்ப நலம்), மாவட்ட திட்ட மேலாளர் துரைசாமி, மாநகர் நல அலுவலர் பிரகாஷ், மாவட்ட ரத்த பரிமாற்று அலுவலர் சசிகலா, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: