சனி, 8 ஜூன், 2024

பெருந்துறை அருகே வடமாநில வாலிபரை தாக்கி இருசக்கர வாகனம், செல்போன் பறித்த மூவர் கைது

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் லோக்நாத் (வயது 26). இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வீடு வாடகைக்கு எடுத்து, சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பிரிண்டிங் ஹெல்பராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் இவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய நண்பர் பஜன் என்பவருடன் பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் அருகே உள்ள பாலிக்காட்டூர் - வரப்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு சாலையோரம் நின்று கொண்டிருந்த 3 பேர், முகவரி கேட்பது போல் கையை அசைத்துள்ளனர். இருசக்கர வாகனத்தில் வந்த லோக்நாத் இருசக்கர வாகனத்தை நிறுத்தினார். அப்போது 3 பேரும் சேர்ந்து லோக்நாத் மற்றும் அவருடன் வந்த பஜன் ஆகிய 2 பேரையும் திடீரென தாக்கியதுடன், லோக்நாத்தை பீர் பாட்டிலால் தலையில் தாக்கியுள்ளனர். பின்னர், அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து லோக்நாத் பெருந்துறை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து இருசக்கர வாகனம், செல்போனை பறித்து சென்ற 3 பேரை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் போலீசார் நேற்று விஜயமங்கலம் மேட்டுப்புதூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அண்ணாநகரைச் சேர்ந்த சதாசிவம் மகன் சதீஸ் (வயது 24), திருப்பூர் மாவட்டம் மேட்டுக்கடை, தளவாய்பாளையத்தை சேர்ந்த செல்லமுத்து மகன் முத்துஎழில் பார்த்திபன் (வயது 26), திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி, கஸ்தூரிபாளையம் காங்கேயம்பாளையத்தை சேர்ந்த பெரியசாமி மகன் கார்த்திகேயன் (வயது 25) என்பதும், அவர்கள் 3 பேரும் சேர்ந்து லோக்நாத்தை தாக்கி இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து, அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது, அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: