வெள்ளி, 29 நவம்பர், 2024

கடை வாடகைக்கு ஜிஎஸ்டி: ஈரோடு மாவட்டத்தில் 30 ஆயிரம் கடைகள் அடைப்பு; ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு

கடை வாடகைக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பைக் கண்டித்து, ஈரோடு மாவட்டத்தில் 30 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால், ரூ.100 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

மத்திய அரசின் ஜிஎஸ்டி கவுன்சில் நாடு முழுவதும் உள்ள வணிக நிறுவனங்களின் கட்டிடங்கள் வாடகை மீது 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது. இந்த வரி உயர்வு இன்று (நவ.29) முதல் அமுலுக்கு வருகிறது. இதனால் பதிவு பெற்ற சிறிய வணிக நிறுவனங்கள், கடை உரிமையாளர்கள் பாதிக்கப்படுவார்கள். இதனால் வாடகை மீதான 18 சதவீத வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும் என்று வணிகர்கள் மத்திய அரசை வலியுறுத்தினர். ஆனால் இந்த வரி விதிப்பை மத்திய அரசு திரும்ப பெற வில்லை.

மேலும் மாநில அரசு தொடர்ந்து உயர்த்தி வரும் சொத்துவரி, குப்பை வரி, பாதாள சாக்கடை வரி மற்றும் மின் கட்டண உயர்வால் கடும் அவதிப்படுவதாகவும், அதனை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் ஈரோட்டில் இன்று (நவ.29) ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.


இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு அனைத்து தொழில் வணிக கூட்டமைப்பின் கீழ் செயல்பட்டு வரும் 75 சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. அதன்படி, இன்று (நவ.29) ஈரோட்டில் ஜவுளி சந்தைகள் மூடப்பட்டன. சிறிய ஜவுளிகடைகளில் இருந்து பெரிய ஜவுளி நிறுவனங்கள் வரை கடைகள் மூடப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இதே போல மஞ்சள் சந்தைகளும் மூடப்பட்டன. மேலும் எலக்ட்ரிக்கல் கடைகள், அரிசி மண்டிகள், நகைக் கடைகள், உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

ஈரோடு மாநகராட்சி பகுதியில் பரபரப்பாக காணப்படும் முக்கிய சாலைகளான பன்னீர் செல்வம் பூங்கா, காளைமாட்டு சிலை, சத்தி சாலை, ஆர்.கே.வி.சாலை, ஈஸ்வரன் கோவில் வீதி, மேட்டூர் சாலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளை சேர்ந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.இதன் காரணமாக ஈரோட்டில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராஜமாணிக்கம் தெரிவித்தார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: