வியாழன், 14 நவம்பர், 2024

ஈரோட்டில் குழந்தைகள் தின விழா விழிப்புணர்வு நடைபயண பேரணி துவக்கி வைத்து ஆட்சியர் வாழ்த்து

ஈரோட்டில் குழந்தைகள் தின விழாவினை முன்னிட்டு, விழிப்புணர்வு நடைபயண பேரணியினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா துவக்கி வைத்து வாழ்த்து தெரிவித்தார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தை நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில், குழந்தைகள் தினவிழாவினை முன்னிட்டு, விழிப்புணர்வு நடைபயண பேரணியினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா துவக்கி வைத்தார்.

ஆண்டு தோறும் நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (நவ.14) குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு நடைபயண பேரணியினை துவக்கி வைத்து, நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டு நம் மாவட்டத்தை குழந்தைகள் பாதுகாப்பு மிக்க மற்றும் நலமிக்க மாவட்டமாக உருவாக்கிடுவோம். வளமான எதிர்காலத்திற்கு இணைந்திருப்போம் என வாழ்த்து தெரிவித்தார்.

இப்பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துவங்கி, சம்பத் நகர் வழியாக சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியரகத்தை வந்தடைந்தது. இப்பேரணியில் குழந்தைகளுக்கான உரிமைகளை நாம் உறுதி செய்வோம், போக்சோ வழக்குகளை உடனே புகால் அளிப்போம், நாங்கள் குழந்தை திருமணத்தை ஆதரிக்கமாட்டோம், குழந்தைகள் பாலியல் குற்றங்களை ஒழிப்போம், நீங்கள் தனியாக இல்லை.


உதவிக்கு அழைக்கவும் 1098, குழந்தைகளுக்காக போதைப்பொருட்கள் இல்லா மாவட்டமாக மாற்றுவோம், பாலினத்தேர்வு நிலையற்ற குழந்தைகள் அவர்களை அவர்களாகவே ஏற்றுக் கொள்வோம் உள்ளிட்ட பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்திச் சென்றனர். இப்பேரணியில் தன்வந்திரி நர்சிங் கல்லூரி, அரசு தொழிற் பயிற்சி நிறுவனம், வேளாளர் கல்லூரி, நந்தா நர்சிங் கல்லூரி, ஜே.கே.கே. நர்சிங் உள்ளிட்ட கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் தலைமையில், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு உறுதிமொழியை அனைத்துத்துறை அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து, குழந்தைகள் தின விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் மாவட்ட ஆட்சியர் குழந்தைகள் தின விழிப்புணர்வு பலூன்களை பறக்க விட்டு, விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை துவக்கி வைத்தார். தொடர்ந்து, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை அனைவருக்கும் வழங்கினார்.


இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முஹம்மது குதுரத்துல்லா, திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள்) பூங்கோதை, மாவட்ட சமூகநல அலுவலர் சண்முகவடிவு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உமா மகேஸ்வரி உட்பட அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: