செவ்வாய், 3 டிசம்பர், 2024

ஈரோட்டில் சரக்கு வாகனத்தில் கடத்திய 1,075 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது

ஈரோடு -காங்கேயம் சாலையில் மூலப்பாளையம் அருகே ரேஷன் அரிசியை விற்பனைக்காக கடத்தி செல்வதாக மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் சுதா, உதவி ஆய்வாளர் மேனகா தலைமையிலான போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக சந்தேகப்படும் படியாக வந்த சிறிய சரக்கு வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் 1,075 கிலோ ரேஷன் அரிசி விற்பனைக்காக கடத்தி செல்லப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது. தொடர்ந்து, வாகனத்தை ஓட்டி வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் ஈரோடு அருகே வெண்டிபாளையத்தைச் சேர்ந்த அர்த்த நாரீஸ்வரன் (வயது 40) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். பின்னர் அர்த்த நாரீஸ்வரனிடம் இருந்து 1,075 கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: