ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள அவல்பூந்துறை ராட்டைசுற்றிபாளையம் பகுதியில் ரேஷன் அரிசியை கடத்தி வடமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வருவதாக ஈரோடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இத்தகவலின்பேரில், ராட்டைசுற்றிபாளையம் பொன்விழா நகர் அருகில் காவல் ஆய்வாளர் சுதா, உதவி காவல் ஆய்வாளர் மேனகா மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஆம்னி கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 850 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து, ஆம்னி காரை ஓட்டி வந்தவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ராட்டைசுற்றிபாளையம் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பதும், அவர் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக ரேஷன் அரிசியை கடத்தி சென்றதும் தெரியவந்தது.
இதனையடுத்து, ரேஷன் அரிசியை கடத்திய சேகரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 850 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய ஆம்னி காரையும் பறிமுதல் செய்தனர்.
0 coment rios: