வியாழன், 26 டிசம்பர், 2024

அமைச்சர் முத்துசாமி தலைமையில் ஈரோடு மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம்

ஈரோடு மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் இன்று (டிச.26) நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், ஈரோடு மாநகராட்சி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் தொடர்பாக துறை முதன்மை அலுவலர்களுடன் அவர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், அமைச்சர் முத்துசாமி தெரிவித்ததாவது, தமிழக முதல்வர் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தினை கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் அதிகபட்ச நீரேற்றும் திறன் வினாடிக்கு 250 கன அடியாக உள்ளது. இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள குளம், குட்டைகளுக்கு ஒரு வருட காலத்தில் வழங்க திட்டமிடப்பட்டுள்ள 1,500 மில்லியன் கன அடி நீர் குளம், குட்டைகளுக்கு வழங்கப்பட உள்ளது.

மொத்தம் உள்ள 1,045 குளம், குட்டைகளில் தற்பொழுது 1,005 குளம், குட்டைகளுக்கு நீர் செல்வது உறுதி செய்யப்பட்டு, நீர் நிரப்பப்பட்டு வருகிறது. மீதமுள்ள 40 குளம், குட்டைகளுக்கும் விரைவில் நீர் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, வருகின்ற உபரி நீர் அனைத்தையும் எடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், தண்ணீர் குறைவாக செல்லக் கூடிய குட்டை, குளங்களுக்கு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, கிராம அளவில் குழுக்கள் அமைத்து தொடர்ந்து கண்காணித்திட வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட திட்டங்களை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், அனைத்துறை துறை நலத்திட்ட உதவிகளும் தகுதி வாய்ந்த நபர்களுக்கு சென்றடைவதை உறுதி செய்திட அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்

இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சதீஸ், மாநகராட்சி ஆணையாளர் மரு.மனிஷ், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார். கோபிசெட்டிபாளையம் சார் ஆட்சியர் சிவானந்தம், கண்காணிப்பு பொறியாளர் (அத்திகடவு அவினாசி திட்டம்) திருமலைக்குமார். செயற்பொறியாளர் அருளழகன், மாநகர பொறியாளர் விஜயகுமார் உட்பட அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: