நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சாலை, பள்ளிபாளையம் அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் செல்வி (வயது 49).
மாற்றுத்திறனாளி பெண்ணான இவர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக முன் தரையில் அமர்ந்து, அலுவலர்களிடம் மனு வழங்கி விட்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த, 1998 ல் எனக்கும், மணி என்பவருக்கும் திருமணமாகி, மோகன்பிரபு என்ற மகன் உள்ளார்.
எனது கணவரின் அத்தை அலமேலுவுக்கு ஈரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி பின்புறம் கொத்துக்கார நல்லா வீதியில் உள்ள சொத்தை, எனது கணவர் மணி மற்றும் அவரது சகோதரர் கண்ணையன் ஆகியோருக்கு சாசனம் எழுதி கொடுத்தார்.
அவ்விடத்தை அனுபவித்து வருகிறோம்.
அந்நிலத்தை விற்க ஈஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்த ஒருவரிடம் அக்ரிமென்ட் போட்டு, பல ஆண்டாக கிரயம் செய்யாமல் இருந்தார். இந்நிலையில் சேலத்தை சேர்ந்த சிலர் என்னை அணுகி, அந்நிலத்தை விற்று தருவதாகவும், வேறு நபர்களுக்கு போடப்பட்ட அக்ரிமென்ட்டை ரத்து செய்து தரும்படி கூறினர்.
அதை நம்பி கடந்த, நவ.,19 ல் ஈரோடு ரங்கம்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு நானும், எனது மகன் மற்றும் சேலத்தை சேர்ந்தவர்களும் வந்தனர். அக்ரிமென்ட் ரத்துக்கான ஆவணம் எனக்கூறி சில கையெழுத்தை பெற்று, அவர்கள் பெயருக்கு நிலத்தை மாற்றி உள்ளனர்.
என்னிடமும், எனது மகனிடமும் கத்தியை காட்டி, மிரட்டி கையெழுத்து போட வைத்து, பத்திரத்தை படித்துக்கூட பார்க்க விடவில்லை. தற்போது ஈ.சி., போட்டு பார்த்தபோது, அந்நிலம் வேறு நபர் பெயரில் உள்ளது. இதுபற்றி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, அந்த பத்திர பதிவை ரத்து செய்து, எனக்கு மாற்றித்தர வேண்டும் என்று கூறினார்.
0 coment rios: