வியாழன், 2 ஜனவரி, 2025

ஈரோட்டில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்: வட்டாட்சியர் பேச்சுவார்த்தை

ஈரோடு அருகே கனிராவுத்தர் குளத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பொதுமக்கள் அந்த கடையை முற்றுகையிட்டு இன்று (ஜன.2) போராட்டம் நடத்தினர்.
ஈரோடு மாநகராட்சி 5வது வார்டு கனிராவுத்தர் குளம், காந்திநகரில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடையை ஒட்டியுள்ள கடையில் சட்டத்திற்கு புறம்பாக 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெற்று வருவதாக தெரிகிறது. இது அப்பகுதி மக்களுக்கும், சாலையில் செல்வோருக்கும் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தி வந்துள்ளது.

எனவே, இந்த டாஸ்மாக் கடையை உடனே அகற்ற வேண்டும் என வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று (ஜன.2) டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வடக்கு காவல் நிலைய போலீசார் மதுக்கடையை ஒட்டி சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வந்த இடத்தில் இருந்த மதுபாட்டில்களை கைப்பற்றினர்.

இருந்தபோதிலும், அப்பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் தொடர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர். பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ஈரோடு வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன், டாஸ்மாக் துணை மேலாளர் ஜெயக்குமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மதுபான கடையை மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: