ஞாயிறு, 16 மார்ச், 2025

பவானி அருகே வாலிபர் கொலை வழக்கில் பரபரப்பு திருப்பம்: தாய், அண்ணன் உள்பட 5 பேர் கைது

பவானி அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பரபரப்பு திருப்பமாக அவருடைய தாய், அண்ணன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள மூன்ரோடு ஜல்லிக்கல்மேடு பகுதியில் காவிரி ஆற்றில் கடந்த, 15ம் தேதி இரவு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் ஆண் சடலம் மிதந்து வந்தது. பவானி போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர்.

விசாரணையில், சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் பவானியை அடுத்த தொட்டிபாளையத்தை சேர்ந்த மதியழகன் (வயது 30) என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, சடலத்தை பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர். மேலும் கொலையாளிகளை கைது செய்ய போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகையா தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.

இதில், மதியழகன் பவானி திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த கீர்த்திகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதும், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கிருத்திகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

இதற்கு தனது கணவர், மாமியார், மாமனார், மதியழகனின் அண்ணன், தாய்மாமன் ஆகிய 5 பேர் தான் காரணம் என எழுதி வைத்திருந்திருந்தார். இதன் அடிப்படையில் பவானி போலீசார், மதியழகன் உள்பட ஐந்து பேரையும் கைது செய்தனர்.

இதில் அனைவரும் ஜாமினில் வந்து, பவானி போலீஸ் காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு வருவதும் தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து, மதியழகனின் தாய் சுதா உள்ளிட்டோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்தன.

அதில், மதியழகன் தினமும் குடித்துவிட்டு வந்து அவருடைய தாய் சுதா (55), அண்ணன் முருகானந்தம் (28) ஆகியோருடன் தகராறில் ஈடுபட்டதுடன், கத்தியை காட்டி பணம் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பணத்துக்காக மதியழகன், தங்களை எப்போது வேண்டுமானாலும் கொன்று விடலாம் என பயப்பட்டனர்.

பின்னர், இதுகுறித்து மருமகள் கீர்த்திகா குடும்பத்தினரிடம் சுதா என் மகன் எங்களையும் கொலை செய்து விடுவான் போலிருக்கிறது என கூறியுள்ளார். இதனால், இருவருவரின் குடும்பத்தாரும் மதியழகனை கொலை செய்து விட முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, கடந்த 10ம் தேதி இரவு குடிபோதையில் வந்த மதியழகனை சுதா, முருகானந்தம், கீர்த்திகாவின் தம்பியான திருவள்ளுவர் நகரை சேர்ந்த யோகேஷ் (26), யோகேசின் உறவினரான சக்தி பாண்டி (30), யோகேசின் நண்பரான கவுரி சங்கர் (23) ஆகியோர் கத்தியால் வெட்டி கொலை செய்தனர்.

பின்னர், அவருடைய உடலை காரில் எடுத்துக்கொண்டு பவானி மூன்று ரோடு அருகே உள்ள ஜல்லிக்கல்மேடு காவிரி ஆற்றுப்பகுதிக்கு வந்தனர். அங்கு, ஆற்றில் வைத்து வயிற்றை பிளந்து கல்லை அதில் வைத்து காவிரி ஆற்று தண்ணீரில் வீசிவிட்டு சென்றது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

பின்னர், அவர்கள் 5 பேரையும் போலீசார் ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பவானி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: