ஞாயிறு, 6 ஏப்ரல், 2025

அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் வாலிபரை எரித்து கொன்ற வழக்கில் மேலும் ஒருவர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள சின்னகுத்தி கிராமத்தை சேர்ந்தவர் பச்சியப்பன். இவருடைய மகன் சக்திவேல் (வயது 25). இவர் அதே ஊரை சேர்ந்த வேறு சமுதாயத்தை சேர்ந்த பாப்பம்மா (22) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதனிடையே கடந்த மாதம் 19ம் தேதி சக்திவேல் மாயமானார். இதுகுறித்து அவருடைய பெற்றோர் கடந்த 26ம் தேதி பேரிகை போலீசில் புகார் செய்தனர், அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த 30ம் தேதி ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் வனப்பகுதியில் எரிந்த நிலையில் ஒரு ஆணின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து பர்கூர் போலீசார் விசாரணை நடத்தியதில் எலும்புக்கூடாக கிடந்தவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாயமான சக்திவேல் என தெரியவந்தது. மேலும் சக்திவேலை எரித்துக்கொன்றதாக பாப்பம்மாவின் அண்ணன் வெங்கடேஷ் (32), அவருடைய உறவினரான ராஜேந்திரன் (48) ஆகியோரை பர்கூர் போலீசார் கைது செய்தனர்.

மேலும், இந்த கொலையில் தொடர்புடைய குமார் என்பவரை போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே மறைந்திருந்த குமாரை, அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: