ஈரோடு மாவட்டம் பெருந்துறை கருமாண்டிசெல்லிபாளையம் சிதம்பரனார் வீதியை சேர்ந்தவர் ரவி(54). இவர், வாரிசு சான்று பெற பெருந்துறை தாலுகா அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளர்(ஆர்.ஐ) அன்பரசனை அணுகினார். அவர், வாரிசு சான்று தர ரூ.25 ஆயிரம் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதைத்தொடா்ந்து, அவரது உயர் அதிகாரியான பெருந்துறை தாசில்தாரை சந்தித்து, ரவி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தார், ஆனால் விசாரித்து பரிந்துரைப்பதாக கூறினார், இதையடுத்து ரவி கடந்த 13ம் தேதி மீண்டும் ஆர்.ஐ. அன்பரசனை பார்த்து சான்றிதழ் குறித்து கேட்டுள்ளார்.
அப்போது அவரது பங்கு லஞ்சத்தை அதாவது ரூ.8 ஆயிரத்தை மட்டும் வழங்கினால், சான்றிதழ் வழங்கிட பரிந்துரைப்பதாக ஆர்.ஐ. அன்பரசன் ரவியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், லஞ்சம் வழங்க விரும்பாத ரவி, ஈரோடு லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் அறிவுரையின்படி, ரசாயண பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளுடன், ரவி இன்று பெருந்துறை தாலுகா அலுவலகத்தில் ஆர்.ஐ. அன்பரசனை சந்தித்துள்ளார்.
அதனை, அவரது அறைக்கு அருகே உள்ள மற்றொரு அறையில் ஓய்வு பெற்ற அலுவலக உதவியாளா் அலெக்சாண்டர் என்பவரிடம் லஞ்ச பணத்தை வழங்குமாறு கூறியுள்ளார்.
பின்னர், ரவியிடம் இருந்து அலெக்சாண்டர் லஞ்ச பணத்தை பெற்றுக்கொண்டார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அலெக்சாண்டரை கையும், களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர். அதில், ஆர்.ஐ.அன்பரசன் தான் ரூ.8 ஆயிரத்தை லஞ்சமாக வாங்க சொன்னது உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து அன்பரசனை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 coment rios: